'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

திருமுருகாற்றுப்படை

 உரையாடல் - பகுதி - 9


பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் 


புலவர்: எப்படியெல்லாம் முருகப் பெருமானைப் பாடி வணங்கலாம்?

நக்கீரர்: எங்கெல்லாம் திருமுருகப் பெருமானைக் காணும் நற்பேறு பெறுகிறாயோ அங்கெல்லாம், முகம் மலர்ந்து திருமுருகப்பெருமானை விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்திக் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி அவர்தம் திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கிப் போற்றிப் பாடுவாயாக!

எவ்வாறெல்லாம் வாழ்த்தலாம் என்றால்,

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகளை வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒருவரான தீயானவர், தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டு வந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பாலூட்டப் பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே! 


கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானின் புதல்வரே! 


இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே! 


தீயோராகிய பகைவர்களுக்கு யமன் போன்றவரே!


வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின் மைந்தரே!


அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின் குழந்தையே!


வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே! 


கடம்பு மலர்களாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவரே!


அனைத்து மெய்யான நூல்களின் உண்மையான பொருளை அறியும் புலமை உடையவரே!


போர்த்தொழிலில் ஒப்பற்றவரே! உலகமெலாம் அழியும் காலத்திலும் தீயோரை எதிர்த்துப் போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே கடவுளே!


அந்தணர்க்குச் செல்வமாக விளங்குபவரே!


புலமையுடைவர்கள் புகழ்ந்து கூறும் சொற் கூட்டமாய் விளங்குபவரே!


தெய்வயானை, வள்ளி அம்மையார் ஆகிய மங்கையரின் கணவரே! 


வலிமை உடைய வீரர்களுக்குள் அரியேறு போன்றவரே!


ஞான சத்தியாகிய வேலினைப் பெற்று விளங்கும் பெருமை பொருந்திய கையினை உடைய செல்வரே!


கிரௌஞ்ச மலையில் ஒளிந்திருந்த சூரபன்மனை அழித்து வென்ற குறையில்லாத வெற்றியையும் பெருமையையும் உடையவரே!


வானத்தைத் தொடும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை உடைய தலைவரே!


உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நூல் இயற்றும் புலவர்களுக்கெல்லாம் தலைவரே!


மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடையவராக என்றென்றும் இளைஞனாகவும் அழகனாகவும் திகழ்வதால் முருகன் என்னும் திருப்பெயரை உடையவரே!


விரும்பிச் செல்கின்றவர் வேண்டும் எல்லாவற்றையும் தந்தருளும் கொடை வள்ளலே!


பொருள் இல்லாது துன்புறுவோர்களுக்குத் தர வேண்டியே பொன்னால் ஆகிய அணிகளை அணிந்துள்ளவரே!


பரிசில் பெற வருகின்ற அனைவரையும் தழுவித் தாங்கிக் காத்து அருள்பவரே!


அசுரன் சூரபன்மனையும் அவன் தன் சுற்றத்தினரையும் அழித்து வென்ற காரணத்தால் 'மதவலி' என்னும் பெயரை உடையவரே!


மிகச்சிறப்பாகப் போரிடும் இளமை பொருந்திய வீரரே!


உண்மையான தலைவரே!

இவ்வாறு திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குதலில் யான் அறிந்த அளவு கூறுகிறேன். இறைவனின் தன்மை அனைத்தையும் அளவிட்டறிதல் இயலாது. நீயும் அறிந்தவா றெல்லாம் திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குவாயாக!

புலவர்: நன்றி ஐயனே! நற்பேறுடையேன்! ஒப்பில்லாத மெய்யறிவை உடைய பெருமானே! நின் திருவடிகளை அடைய எண்ணி வந்தேன் என்றும் உரைப்பேன் ஐயனே!

நக்கீரர்: நன்று. நன்று. அவ்வாறு உரைத்து நீர் எண்ணிய பரிசிலைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பே அவருடைய ஏவலாளர்கள், திருவிழா நிகழும் களத்தில் தோன்றுவது போலப் பொலிவுடன் தோன்றித், திருமுருகப்பெருமானை நோக்கி என்ன உரைப்பார்கள் தெரியுமோ?

புலவர்: அவர்கள் யாது உரைப்பர் ஐயனே?

நக்கீரர்: 'பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய இந்த இரவலன் இரங்கத்தக்கவன்; நின் அருளுக்குரியவன்; நின்னுடைய புகழை விரும்பி வந்துள்ளான்' என்று இனிய உறுதி பயக்கும் சொற்களைக் கூறி நிற்பார்கள்.

அப்போது தெய்வத்தன்மையும் வலிமையும் பொருந்திய வானத்தைத் தொடும் வடிவுடைய திருமுருகப்பெருமான் நின்முன்னே எழுந்தருள்வான். ஆயினும் காண்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் தெய்வ வடிவினை உள்ளடக்கிக் கொண்டு முந்தைய மணம் கமழும் தெய்வத்தன்மை உடைய இளமை பொருந்திய வடிவினைக் காட்டி, 'நீ அஞ்ச வேண்டா; உன்னைக் காத்தருள்வேன்; நின்வருகையை யான் முன்னரே அறிவேன்' என்று அன்புகூர்ந்த சொற்களைக் கூறி அருள்வான்.

மேலும் இருண்ட கடலால் சூழப்பட்ட இப் பெரிய உலகத்தில் தனிப்பெருமை வாய்ந்த ஒருவனாக நீ விளங்குமாறு மற்றவர்களும் பெறுவதற்கு அரிய பரிசிலைத் தந்தருள்வான்.

புலவர்: அருமை. நன்றி ஐயனே! திருமுருகப் பெருமானைக் காணும் ஆவலோடு செல்கிறேன்.

நக்கீரர்: இன்னுமோர் அழகிய இடத்தில்  திருமுருகப்பெருமானைக் காண்பீராக!

புலவர்: அஃது எவ்விடம் ஐயனே?

நக்கீரர்: பல சிறு ஊற்றுகள் இணைந்து வெவ்வேறான துகிலால் ஆகிய பல கொடிகளைப் போன்று மலை உச்சியிலிருந்து அசைந்து அருவியாக வரும். அஃது, அகிற்கட்டையைச் சுமந்து கொண்டு வரும். பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துத் தள்ளும். சிறு மூங்கிலின் மலர் பொருந்திய கொம்பு தனிப்பட வேரைப் பிளந்துகொண்டு வரும்.

புலவர்: அடடா! அஃது வளப்பமுடைய அருவியாயிருக்கும் எனத் தோன்றுகிறதே.

நக்கீரர்: ஆம். அதனால் என்னவெல்லாம் நிகழும் தெரியுமா? 

வானத்தைத் தொடுவது போன்ற நெடிய மலை மீது கதிரவனைப் போல் சிவந்து தோன்றி ஈக்கள் மொய்க்கின்ற குளிர்ச்சியும் மணமும் பொருந்திய தேன் கூடு சிதைவுறும்.

பலாப்பழத்தின் பல முற்றிய சுளைகள் அருவியில் விழுந்து கலக்கும்.

மலையின் உச்சியில் உள்ள சுரபுன்னை மரத்தின் பூக்கள் உதிரும். 

கருங்குரங்குடன், கரியமுகத்தை உடைய பெண் குரங்குகளும் குளிரால் நடுங்கும்.

நெற்றியில் புள்ளிகளை உடைய 'பிடி' எனப்படும் பெண் யானையும் மிகுதியான குளிர்ச்சியை உணரும். 

பெரிய யானையின் முத்தினை ஒத்த கொம்புகளையும், நல்ல பொன், மணிகள் ஆகியவற்றையும், பொடி வடிவத்தில் உடைய பொன்னையும் கொண்டு சேர்க்கும். 

வாழை மரத்தின் அடிப்பாகம் ஒடிந்து விழும். 

தென்னையின் இளநீர்க் குலைகள் உதிரும். 

மிளகின் கரிய கொத்துகள் விழுந்து சாயும். 

அழகான இறகைப் புறத்தேயுடையதும்  இளமையுடன் கூடிய நடையையும் உடைய பல மயில்கள் அச்சமுறும். 

வலிமையுடைய பெண் கோழிகளும் அஞ்சி ஓடும். 

ஆண் பன்றியும், கரிய பனையின் புல்லிய செறும்பைப் போன்ற கரிய மயிரை உடைய உடலையும் வளைந்த அடியினையும் உடைய கரடியும் பெரிய கற்குகைக்குள் சென்று சேரும். 

கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் நல் எருது அச்சத்தால் கதறும்.

இத்தகு விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தும்.

அவ்வாறு மலையின் உச்சியிலிருந்து 'இழும்' என்னும் ஓசையுடன் குதித்து விழும் அருவியினையும் முற்றிய பழங்களையும் உடைய சோலைகளைப் பெற்று விளங்கும் குறிஞ்சி நிலமாகிய பழமுதிர்சோலைக்கு உரிமை உடையவர் திருமுருகப்பெருமான்.

புலவர்: நன்றி ஐயனே! தாங்கள் என்னைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய விதம் என்னுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதே திருமுருகப் பெருமானைக் காணச் செல்கிறேன்.

நக்கீரர்: நன்று. நன்று. திருமுருகப் பெருமானின் திருவருளால் நற்பேறு பெறுக. வாழிய நலம்.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்   புலவர் ஒருவரைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய 'திருமுருகாற்றுப்படை உரையாடல்' நிறைவுற்றது.

எடுத்தாண்ட நூல்கள்:

1. திருமுருகாற்றுப்படை உரை - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) (http://www.kaumaram.com/)

2. திருமுருகாற்றுப்படை விளக்கம் - கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்


No comments:

Post a Comment