'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

நடுப்பக்க நயம்

 கம்பனைப் போலொரு…

பகுதி – 11


மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்


கம்பருக்கு முன்னரே நம் சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய சிலப்பதிகாரத்திலும், பழமொழி நானூறு போன்ற பிற இலக்கியங்களிலும், எல்லாவற்றுக்கும் மேலாக பக்தி இலக்கியக் காலமான 6-8ஆம் நூற்றாண்டு இலக்கியங்களிலும் இராமாயணச் செய்திகள் மிகப்பரவலாகப் பேசப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிறப்பென்ன வெனில், இவற்றில் "இராமனைக் கடவுளாகவே" காட்டப்பட்டுள்ளன.


புறநானூற்றில் 378 ஆம் பாடல்... ஊண்பொதிப் பசுங்குடையார், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பற்றிப் பாடிய பாடல்.


அரசன் அளித்த பெருஞ்செல்வத்தையும், பொன்னகைகளையும் பெற்ற புலவரின் குடும்பத்தார் அந்த நகைகளை எப்படி எங்கெங்கு அணிய வேண்டும் என்றறியாமல், விரலில் அணிய வேண்டியவற்றைச் செவியிலும், செவியில் அணிய வேண்டியவற்றை விரலிலும், இவ்வாறே அனைத்து நகைகளையும் இடம்மாற்றி அணிந்து மயங்கினர். இக்காட்சி... “சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் இராமனுக்காக அடையாளத்திற் காகச் சீதை அவிழ்த்தெறிந்த நகைகளைச் செம்முகக் குரங்குகள் மாற்றி மாற்றி அணிந்ததைப் போலிருந்தது" என்று சோழனின் வள்ளண்மையைக் கூறுவார்.


தென்பரதவர் மிடல்சாய

. . . . .

. . . . .

இனிதுபெற் றிகுமே...

(புறம். 378) என்கிறது அந்தப் பாடல்.

***


அகநானூறு 70ஆம் பாடல். மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது.


"இராமன் தன் படைவீரர்களுடன் போர் பற்றிய வியூகத்தின்போது இரைச்சலிட்ட பறவைகள் ஒரு சேர அமைதியாயின போல், தலைவன் உன்னை வரைவு முடித்த பின் இப்போதுள்ள அலர் நீங்கும்" என்று தோழி கூறுவதாய் அமையும் பாடல்...


கொடுநிமிர் பரதவர் வேட்டம் வாய்த்தென

. . . . . 

. . . . . அழுங்க லூரே!

(அகம் 70.

***


கலித்தொகையில் கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப் பாடல்.


இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்

உமையமர்ந் துயர்மலை இருந்தனனாக

ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல...

(கலி. குறி.38)


இப்பாடலில் இராவணன் சிவபெருமானின் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போன செய்தி இடம்பெற்றுள்ளது.

****


முன்றுரையரையனாரின் பழமொழி நானூறு 92ஆம் பாடல்.

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்(து)

இலங்கைக் கிழவற்(கு) இளையான்-இலங்கைக்கே

போந்(து)இறையாயதூஉம் பெற்றான்பெரியாரைச்

சார்ந்து கெழீஇயிலார் இல்.


இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இராமனுக்குத் துணையாகப் போந்த வீடணன் இலங்கைக்கே அரசன் ஆனான். ஆதலால் பெரியாரைச் சார்ந்தவர் பெருமை பெறாமல் போனதில்லை.

***


சிலப்பதிகாரத்தில் இராமாயணச் செய்தி: 

ஊர்காண் காதையில் வருகின்ற ஒரு காட்சி. தன்னூரை விட்டுக் கண்ணகி மற்றும் கவுந்தியடிகளுடன் மதுரை நோக்கிச் செல்லும் போது மனம் வருந்தும் கோவலனைத் தேற்றும் கவுந்தியடிகள்...

"தாதை யேவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்

வேத முதலோன் பயந்தோன் என்பது

நீயறிந் திலையோ? நெடுமொழி யன்றோ?" 

(சில. ஊர். 46-49)

என்று கேட்கும் கவுந்தியின் பேச்சில் இன்னொரு உண்மை தொக்கி நிற்பதைக் காணலாம்.

அது... 

"இராமாயணம் சிலப்பதிகாரத்திற்கு முன் நெடுங்காலத்திற்கு முன்பே யாவரும் அறிந்த கதை" என்பதாம்.


இன்னுமோர் இடத்தில் இராம இலக்குவன் சீதையுடன் காடு சென்ற காட்சியைக் காட்டுவார் இளங்கோ... அது ஆய்ச்சியர் குரவையில் 35 ஆம் பாடலாக வருகிறது. 


மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

(சில. ஆய். 35)

என்று கூறும் இளங்கோ இராமனைத் திருமாலாகக் காட்டுவதையும் நோக்குக.

****


இவை போக...

உருகியுருகிப் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடப்பட்ட ஆழ்வார் பாசுரங்களில் பலவாறாக இராமாயணச் செய்திகள் பேசப்பட்டுள்ளன. அவற்றைத் தேடிக் காண்க. மேலும் சில நாயன்மார் பாடல்களிலும்கூட இராமாயணச் செய்திகள் உள்ளன.


எனவே... கம்பருக்கு முன் 900 ஆண்டுகளுக்கு முன்பே இராமன் கடவுளாக்கப்பட்டுவிட்டதால் தன் காப்பியத் தலைவனைக் கம்பரும் கடவுளாகக் காட்ட வேண்டியதாயிற்று என்பதாலேயே இராமனைக் கடவுளாகக் காட்டினார். அவ்வாறின்றி மாற்றி எழுதியிருப்பாரேயானால் கம்பனுக்குப் புகழும் கிடைத்திருக்காது... இவர்கள் கம்பனை இகழவும் வாய்ப்பில்லாது போயிருக்கும். (எப்படியோ நமக்கு அருமையான பைந்தமிழ்ப் பனுவல் ஒன்று கிடைத்தது).


சங்க இலக்கியக் காலத்திற்குப் பின் பௌத்தம், சமண சமயங்கள் வளர்ச்சி பெறத்தொடங்கி வலுப்பெற்றிருந்தன. அவை பல்லவர் ஆட்சிக் காலத்தில் தம் செல்வாக்கை இழக்கத் தொடங்க, சைவமும், வைணவமும் செழிக்கலாயின. அக்காலத்தில் எழுந்த சமய இலக்கியங்கள் சிவனையும், திருமாலையும் பரவலாக்கின. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைமையை இலக்கியங்களின் வழியே வளர்த்தனர். அக் கால நீட்சியில்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் காப்பியத்தைப் படைக்கிறார்.


முன்பே குறிப்பிட்டதைப்போல், ஒரு இலக்கியம் என்பது அவ்விலக்கியம் எழுந்த காலத்தின் கண்ணாடியாகும். எனவே கம்பர் காலத்தில் நிலைத்த செல்வாக்கு பெற்ற வைணவமும், இராமனும் அவருடைய காப்பியத்தில் கருப்பொருளானமைக்கும், இறைமையைப் போற்றியமைக்கும் வேறெந்தக் காரணமும் தேவையில்லை என்றுணர்க.


மாறாகக்... கம்பனை எதிர்க்கிறோம், கம்ப ராமாயணத்தை எரிக்கிறோம் என்று பரப்புரை செய்ததால்தான், படித்த புலவர்களிடத்தே மட்டும் உலவிக் கொண்டிருந்த கம்பராமாயணத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்த 'பெருமை' பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்கட்குமே சேரும்.


எந்தவொரு செயலையும் "செய்யாதே" என்றால்தான் அச்செயலில் நம்மை யறியாமல் நம்மனம் ஆர்வங் காட்டும். இது மாந்தரியல்பு. இவ்வியல்பின் காரணத்தாலேயே இவர்கள் 'படிக்காதே... படிக்காதே' என்று கம்ப ராமாயணத்தை எதிர்த்ததால்தான் கம்ப ராமாயணத்தின் புகழ் மிக்கோங்கியது என்பதே உண்மை.


அடுத்த பகுதியில் இவர்கள் கம்பராமாயணத்தை எதிர்க்கும் காரணங்களில் அடுத்த காரணத்தைப் பார்ப்போம்.


...தொடரும்...


No comments:

Post a Comment