'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


 பைந்தமிழ்ச் செம்மல் கவிஞர் விவேக்பாரதி


கட்டுரையாக்கம்: 

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


கன்னல் மொழியாம் கன்னித் தமிழைக்

    காதல் செய்பவன்!

கண்ணில் பட்ட காட்சி யெல்லாம்

     கவியாய் நெய்பவன்!

மின்னல் வேகத் தோடு யாக்கும்

      மேன்மை  பெற்றவன்!

 மீசைக் காரப் புலவன் பாட்டை

     விரும்பிச் சுவைப்பவன்!

அன்னை சக்தி தாள்வணங்கி    

    அகங்கு ளிர்பவன் !

அன்பி லுருகிப் பாட்டுப் பாடி

    அமைதி பெறுபவன்!

தென்றல் போலும் சோலை தன்னில்

      தேனைப் பொழிபவன்!

 செல்வம் யாவும் பெற்று வாழச்

      சேர்ந்து வாழ்த்துவோம் !!


இற்றைத் திங்கள் தமிழ்க்குதிரை அலங்கரிப்பவர் கவிஞர் விவேக்பாரதி அவர்கள்!


வைகை நதி பாயும் கோயில் நகரமாம் மதுரையில் 1998-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 22-ஆம் நாள் பிறந்தவர். காவிரி பாயும் மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் வளர்ந்தவர். இவரது பெற்றோர்  திரு. ஸ்ரீனிவாசன் - திருமதி. ஜானகி. உடன்பிறந்த தம்பி ஸ்ரீவத்ஸ்.

 

இளம் வயதில் மகாகவி பாரதியாரின் கவிதைகள் படித்த தாக்கத்தால் கவிதை எழுதத் தொடங்கியவர். 13 வயதிலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். 15 வயதிலிருந்து பைந்தமிழ் மரபு கவிதைகளை எழுதி வருபவர்.


திருச்சி எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளியில் பயின்றவர்.  சென்னை து.கோ. வைணவக் கல்லூரியில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தவர். கல்கி வார இதழில் பணி புரிந்தவர். தினமலர் (திருச்சிப் பதிப்பு) நிருபராகப்  பணி செய்பவர். மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயருக்குப் பின்னடையாக அவர் பெயரைச் சேர்த்துக் கொண்டவர். பாரதி பக்தனான இவர் மாகாளியின் செல்லப்பிள்ளை.


நினைத்த மாத்திரத்தில் அருவியாய்க் கொட்டும் கவிஞானம் பெற்றவர். மரபு கவிதைகளில் மனமொன்ற எல்லா வகைமைகளிலும் திறம்படப் பாடும் வல்லமை படைத்தவர். இந்த இளங்காளைக்குப் பராசக்தி மேல் தீராக் காதல்!  கொஞ்சுதமிழ்ச் சொற்களால் சந்தங்கள் துள்ளிவர இவர் பாடும் அழகில் அம்பிகையே சொக்கிவிடுவாள். 


சந்தவசந்தம், பைந்தமிழ்ச்சோலையில் மரபு பயின்றவர். மரபு மாமணி பாவலர் மா.வரதராசனாரின் மனங்கவர்ந்த மாணவர். குரு காணிக்கையாய் 2017-ல் "பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை" என்ற நூலைப் படைத்துள்ளார். எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. பெரியோர்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தொடர்ந்து பெறுபவர். பணிவு மிக்கவர். பண்பிற் சிறந்தவர். 


“தேசமும் தெய்வமும் ஒன்று” என்ற மகாகவி பாரதியாரின் கருத்துகளை ஆழமாக நம்பிச், செயலாக்கி வருபவர். காட்சித் தொடர்பியல் (Visual 

Communication) பட்டதாரி, இதழியலாளர். 


❖ முதல் சிறகு (2016) 

❖ பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை (2017) 

❖ ககனத்துளி (2018) 

❖ பேசுபொருள் நீயெனக்கு (2018) 

❖ சுதந்திர தேவி (2018) 

❖ காலமா வனத்தில் (2020) 

என்ற ஆறு நூல்களின் ஆசிரியர்.


தமிழக அரசின் மாநில அளவு கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்றவர். எண்ணற்ற கவியரங்கங்களில் கலந்து கொண்டவர். பல கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியவர். இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாகத் தொகுத்து வழங்கி வருபவர். “பாரதி யார்?” என்ற நாடகம் மூலம் 50 மேடைகளைக் கண்டவர்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழும் அரவணைக்கத், தமிழ்வானில் நம்பிக்கை நட்சத்திரமாய் வளைய வருபவர்.


துபாய் தமிழ்ச்சங்கம் உட்பட பல அமைப்புகளிலிருந்து, 

⭐ வித்தக இளங்கவி பட்டம் (2015) 

⭐ கவியருவி

⭐ தமிழன்பன் - 80 விருது (2015) 

⭐ பைந்மிழ்ப் பாமணி பட்டம் (2016) 

⭐ பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017) 

⭐ ஆசுகவி பட்டம் (2017) 

⭐ பைந்தமிழ்க் குருத்து விருது (2018) 

⭐ மரபு ஆளுனர் விருது 

      (தொன்மைத் தமிழ்ச் சங்கம்) 

⭐ விரைகவி வேந்தர் (2019) 

⭐  சந்தக்கவிமணி(2019)

உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். 


🌷 அமெரிக்காவின் தென்றல் இதழில் இவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. 


🌷 விஜய பாரதம் வார இதழிலும் இவரது நேர்காணல் வெளியாகியுள்ளது.


🌷 பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ‘படித்ததில் பிடித்தது’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர்.


🌷 இவை தவிர பல நேரலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கவிபாடியவர்.

   

🌷 கவிதைகளோடு, கட்டுரை, இசைப்பாடல்கள், சிறுகதைகள் என்று வெற்றித்தடம் பதிப்பவர். இவரது படைப்புகள் பல இதழ்களிலும், மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன.


கவிஞர் விவேக்பாரதி அவர்கள் தமிழன்னை அருளால் சீரோடும், சிறப்போடும் எல்லா வளமும் பெற்று நூறாண்டு வாழ மனம்நிறைந்து வாழ்த்துவோம்.


No comments:

Post a Comment