'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 24

 வெண்பா

1. கவிஞர் செல்லையா வாமதேவன்

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

அந்தமிழ் மாண்பை அயன்மொழி முந்துமா?

சந்தமும் சாந்தமும் சார்ந்ததெந் தாய்மொழி

சிந்தையும் சீர்பெறுந் தேர்.


2. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம் 

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

சந்தத் தமிழினைச் சார்கவே - எந்நாளும்

நற்றமிழ் நன்றாய் நவின்றால் நலமேநீ

வற்றாத் தமிழினை வாழ்த்து.


3. கவிஞர் பா.இந்திரன்

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

விந்தை யுலகில் விரைவாகும் - சிந்தனையும்

நற்கவி யாகுமே நாளெல்லாம் கூடிடக்

கற்றவர் கல்வியே காண்


கலிவிருத்தம்

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

சொந்தமா யாயிரம் சோர்விலா நற்கவி

தந்தவ ராகுவர் தங்கமாய்ப் போற்றவே

சிந்தையை வென்றுடன் சீரென வாழ்கவே


4. கவிஞர் சுந்தரா

அந்தமி ழோடுள மாழ்தலே நல்லறம்!

செந்தமி ழோடுளஞ் சேர்தலே யின்பமாம்!

நந்தமி ழோடுளம் நண்ணுதல் நற்பொருள்!

எந்தமி ழோடுள மின்புறல் வீடதே!


No comments:

Post a Comment