'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

தூண்டில்

கவிஞர் இரா. இரத்திசு குமரன்


இந்த முறை தேவையான அளவு அதிக மீன்களைப் பிடித்துக்கொண்டுதான் வீடு திரும்ப வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் கோதண்டம். மீன் பிடிக்கக் கட்டுவலை, சிறு பை, தூண்டில், மண் புழு, குடிநீர் ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில், மற்றும் கேழ்வரகு அடை சில துண்டுகள் - இவற்றுடன் ஆற்றங்கரைக்குத் தன்  பயணத்தைத் தொடங்கினான்.


இப்பொழுதுதான் உச்சியிலிருந்த சூரியன் மேற்குப் பக்கமாக லேசாக சாயத் தொடங்கியது. வெயில் அவன் உச்சியைப் பதம் பார்த்தது.


"அப்பப்பா... வெயில் இப்படி அடிக்குது..." தனக்குத் தானே பேசிக் கொண்டான்.  இந்தப் பழக்கம் அவனுக்குள் வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. யாரும் தனக்காகப் பேச இல்லாதபோது தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் அவனுள் தோன்றியது. அவனைப் புரிந்துகொண்டு அவனுக்காகப் பேசும் ஒரே ஒரு ஜீவன் அவன் மனைவி மட்டும்தான். அவளும் இப்போது இல்லை. தான் வைத்திருந்த பையில் ஒரு துண்டு இருந்தது. எங்காவது கூலி வேலை செய்யும்போது தன் தலையில் கட்டிக் கொள்ளும் பரிவட்டம் அதுதான்.  வெயிலின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்க அதைத் தண்ணீரில் நனைத்து எடுத்துப் பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டான் தனக்குத் தானே. 


சிறுவயது முதலே அவனுக்கு மீன் பிடிக்கச் செல்வதில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. சிறுசிறு கூலி வேலைகள் அவனுக்குச் சோறு போட்டது. எனினும் மீன் பிடிக்கும் ஆசைதான் அவன் உணவில் பல நேரங்களில் சுவை சேர்த்தது. வேலை இல்லாத சில நாட்களில் காலையிலேயே எழுந்து மீன்பிடிக்க ஆற்றிற்குச் சென்றுவிடுவான். வீடு திரும்ப நேரம் ஆகும்.  ஒரு சிறிய மண் சட்டியில் பழைய கஞ்சியை ஊற்றிக் கொள்வான். பசி வரும் நேரத்தில் இரண்டு மூன்று கைப்பிடி  அளவு விழுங்கிவிட்டுத் தண்ணீர் குடிப்பான். சிறிதளவு சோற்றுப் பருக்கைகளை வீசி மீன்கள் கூட்டம் தன்பக்கம் வருமாறு ஈர்ப்பான். எந்த இடத்தில் எந்த மாதிரி மீன்கள் இருக்கும் என்று அவனால் மிகச்சரியாக கூறிவிட முடியும். ஆனால் எங்கு எந்த மாதிரியான மனிதர்கள் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. யாருக்குத்தான் தெரியும்? சில தருணங்களில் அவர்கள் மனிதர்கள்தானா என்ற கேள்விகள் அவனுக்குள் எழும். மீனைப் பற்றி நன்கு தெரிந்த அவனுக்குத் தன் இனத்தைப் பற்றிய அறிவு மிகக் குறைவுதான். யார் எங்கு எப்படி இருப்பார்கள் என்று யாருக்குத்தான் தெரியும்?


பள்ளத்தை நோக்கிய நீர்போல் ஆற்றை நோக்கிக் கோதண்டம் வந்தடைந்தான். ஆற்றின் குறுக்கே வலையைக் கட்டிவிட்டு மேலே கரை ஏறும் சமயத்தில் முள் ஒன்றைத் தன் இடது காலில் ஏற்றிக்கொண்டான். 


"இது வேற கொடையுது...". முள்ளைப் பிடுங்கி எறிந்தான். அவன் கவனம் முள்ளின் மீதோ அல்லது அது  ஏற்படுத்திய வலியின் மீதோ செல்லவில்லை. சிறு சிறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால் அவையெல்லாம் பெரிய ஆலமரம்போல்தான் தெரியும் என்பதை அவன் அனுபவத்தில் உணர்ந்தவன் போலும். அவன் கவனமெல்லாம் அந்தப்பக்கம் கூட்டமாக வந்து மேலே காற்றைச் சுவாசிப்பதுபோல் பாவனை செய்துகொண்டு தொபுக்கென்று தலையை உள்ளே இழுத்துக்கொண்டு தமக்கு முன் செல்லும் மீனைப் பின்தொடரும் ஜிலேபிகளின் மீதுதான்.


"வந்துட்டீங்களா வாங்க வாங்க" விருந்தினர்களை வரவேற்றான்.


மற்ற மீன்களைவிட ஜிலேபி மீன்கள் மீது அவனுக்கு ஒரு உறவு இருந்தது. சிறுவயது சம்பவம்தான் என்றாலும் அவன் மனத்தை அது வெகுவாகப் பாதித்தது. அந்தச் சம்பவத்தின் தாக்கம் ஒரு வினாடி எட்டிப்பார்த்துச் சென்றுவிட்டது. பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும் அப்போது கோதண்டத்திற்கு. தூண்டிலுடன் அவன் கரையில் கவனம் தக்கையில். தண்ணீர் நல்ல தெளிவாகத் தெரியும் இடத்தில் இரண்டு ஜிலேபி மீன்கள் இணையாக நீந்திக் கொண்டிருந்தன இங்குமங்குமாய்ச் சென்றுகொண்டு வட்டம் அடித்தபடி. உடனே தன் தூண்டிலை அவ்விடத்தில் இலகுவாக இறக்கிவிட்டான். எங்கோ சென்று விட்டன அந்த ஜோடி மீன்கள். இருப்பினும் காத்திருந்தான் மீண்டும் திரும்பும் என்று அவன் யூகித்து இருந்தான். ஆம், அவை வந்தன இணையாகவே. அவற்றில் ஒன்றுமட்டும் தூண்டில் புழுவை விழுங்கி மாட்டிக்கொண்டது. வலி உணர்வை அந்த மீன் நீருக்கு மேலே வந்துதான் உணர்ந்து இருக்கும்; அவ்வளவு விரைவாகத் தன் தூண்டிலை உயர்த்தித் தன் கைக்கு அந்த மீனைக் கொண்டு வந்தான். தன் பைக்குள் அந்த மீனைப் போட்டுக்கொண்டு புழுவை சரி செய்துவிட்டு மீண்டும் அவ்விடத்தைப் பார்த்தால் இந்த முறை ஒரு மீன்மட்டும் அந்த இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. நிச்சயம் அது தன் துணையைத் தேடி அலைந்தது. அவன் மனம் ஏதோ ஒரு வலியை உணர்ந்தது. சில நேரங்களில் "ச்சே... தப்புப் பண்ணிட்டேன்" என்று தன் செயலினை விமர்சித்துக் கொள்வான்.


இப்போது தூண்டிலை வீசினான். தூண்டில் தக்கையின் ஒருமுனை நீருக்குள்ளும் மறுமுனை மேலேயும் நடனமாடத் தொடங்கியது. அவன் கண்கள் உற்றுநோக்கும் தவத்தை மேற்கொண்டிருந்தன.  தவத்தின் பலனைக் காண ஆரம்பித்தான். தக்கை முழுமையும் உள்ளே சென்றது. ஏனோ இந்த முறை தூண்டிலை மெதுவாக வெளியே இழுத்தான். ஒரு சிறிய ஜிலேபி மீன் தூண்டிலில் புழுவின் முனையை அப்படியே விழுங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.


"ஓ… நீதானா? ஏதோ பெரிய மீனோனு நினைச்சேன்" வரவேற்றுக்கொண்டு தூண்டிலில் இருந்து அதை மெதுவாக விடுவித்தான். "நல்ல பெருசா வளர்ந்து வா.. அப்புறம் பிடிச்சுக்கறேன்". சிறு மீன்களின்மீது அவனுக்கு நாட்டம் இல்லை. அதற்குக் காரணம் அவனும் இல்லை. தன் கை கட்டைவிரல் அளவே இருந்த அந்த ஜிலேபி மீனைத் தண்ணீரில் மெதுவாக விட்டான். தன்னைப் பிடிக்க வருபவரிடம் இருந்து தப்பிக்க  நான்கு வயது சிறுவன் சர்ரென ஓடுவதுபோல் இருந்தது அந்த மீனின் ஓட்டம். 


சிறுவயதில் தன் தட்டில் இருந்து ஒரு சிறு மீனை விளையாட்டுத்தனமாய் எடுத்துக்கொண்டு தாயின் மடியில் தொப்பென்று விழுந்த தன் மகனின் நினைவு அவனுக்கு வந்தது.          ஹா ஹா என சிரித்துக்கொண்டே அதை வாயில் போட்டுக்கொண்டதுதான் தாமதம். ஆ... வென கத்த முயன்றான் சிறுவன். முடியவில்லை. மீன் முள் தொண்டையில் மாட்டிக்கொண்டு தவித்தான். மரகதம் பிள்ளையின்  வாயில் விரல்விட்டுத் துழாவினாள். பலன் இல்லை. வெறும் சோற்றுப் பருக்கை சிறிய உருண்டை என உருட்டி அவன் வாயில் திணித்து விழுங்க வைத்தாள். இப்போது பரவாயில்லை என்பதுபோல் குழந்தை உணர்ந்தாலும் இரவு தூக்கம் வரும் வரையிலும் அழுகை ஓய்ந்தபாடில்லை. முள்ளோடு மீனைப் பையனுக்கு கொடுக்காதே என்று எவ்வளவு முறை சொல்லுறது என்பதுபோல் மரகதம் கோதண்டத்தை முறைத்தாள். குழந்தைதான் அவனே எடுத்துக்கிட்டான் என்று கோதண்டத்துக்கு விளக்கம் கொடுக்கவும் தோன்றவில்லை. தன் கணவனை யாருக்கும் முன் விட்டுக் கொடுக்காமல்தான் இருந்தாள் எனினும் அவள் இறுதியாகக் கண்மூடும் வரையில் தன் மகனுக்காகப் பரிந்து பேசுவதை இயல்பாக கொண்டிருந்தாள். அதுநாள் முதல் ஒவ்வொரு முறையும் மீன் குழம்பு வைக்கும்போது முள்ளை  அகற்றிவிட்டுச் சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொடுப்பான் தன் பிள்ளைக்கு. இப்போது அப்படியில்லை . "அப்பா எனக்கு... எனக்கு..." என்று தன் அப்பாவோடு சேர்ந்து சாப்பிட்டு விளையாடிக் கொண்டிருந்த அவன் இன்று காலை கேட்ட கேள்வி கோதண்டத்தின் காதுகளில் இன்னும் அடித்துக் கொண்டே இருக்கிறது.


"எனக்காக என்ன செஞ்ச?" காலையில் நடந்தது மனதில் ஓடியது.


"இருக்கிறதே கால் காணி அதையும் விட்டுச் சும்மா கிடக்கிறதா?" சலிப்புக் கலந்த கோபத்துடன் கோதண்டம் கேட்டான்.


"நான் என்ன வித்து வீண்செலவு பண்ணவா கேட்கிறேன்? பிசினஸ் பண்ணத்தானே கேட்கிறேன். எனக்குக் கல்யாணத்துக்கு ஆன செலவுகூட நான் சம்பாதிச்சது தானே. எனக்கு இன்னும் என்ன செஞ்சுட்ட நீ?" மகனின் வாக்குவாதம் தொடங்கியது.


"உன்ன காலேஜ் வரைக்கும் படிக்க வச்சேன். அதுக்கு எல்லாம் காசு எப்படி வந்துச்சு. பாதி நான் கூலி செஞ்சு சம்பாதிச்சதுனா மீதி அந்த நிலத்துல வெளஞ்சது. இப்ப அத விக்க நெனச்சா எப்படி?" 


தன் மகனால் எப்படி இதுமாதிரி பேச முடிகிறது என எண்ணினான்.


 "இப்போ என்ன பெருசா அதுல வெளைஞ்சி கிடைக்குது?" தன் வாதத்தை நியாயப்படுத்தும் விதமாகத் தன் தந்தையிடம் கேள்வி கேட்டான். தன் தகப்பனின் தூண்டிலில் தான் மாட்டிக் கொண்டு ஏதும் செய்ய முடியாமல் இருப்பதாக மகன் நினைத்தான்.


"சும்மா கருப்பா இருந்தாலும் பரவாயில்லை அது அப்படியே இருக்கட்டும்." அருகில் நின்று கொண்டிருந்த தன் மருமகளைப் பார்த்துக்கொண்டே கோதண்டம் பேசினான்.


அவன் அதை நினைத்துக்கொண்டிருந்த வேளையில் தூண்டில் தக்கை மெதுவாக உள்ளே சென்றது. சட்டெனத் தூண்டில் மேலே எடுத்துப் பார்த்தான். ஒரு பெரிய மீன் தண்ணீர் மேற்பரப்புவரை வந்து உள்ளேயே விழுந்துவிட்டது. அந்தப் பெரிய மீன் தப்பித்துவிட்டது. சில மணி நேரங்கள் கடந்தன. சூரியன் மறைந்துவிட்டான். இருள் அதிகமாகப் படரத்தொடங்கியது. தூண்டில் நரம்பை இழுத்துக் கட்டிக்கொண்டு, பிடித்த மீன்களைப் பத்திரமாகத் தரையின் மேற்பகுதியில் வைத்துவிட்டு ஆற்றின் குறுக்கே கட்டி இருக்கும் வலையை எடுத்து ஆராய்ந்தான். தூண்டிலில் மாட்டியவற்றைவிட வலையில் அகப்பட்டவை  குறைந்தவைதான் எனினும் இரண்டையும் சேர்த்தால் குழம்புக்கு ஆகும். தன் துணிகளை எடுத்துக்கொண்டு வீடு வந்தான் கோதண்டம்.


மீன்களைச் சுத்தம் செய்ய வீட்டின் பின்புறம் உள்ள பலகைக் கல்லின்மீது கொட்டி அவற்றின்மீது சாம்பல் போட்டான். மீன்களிலும் தன் கைகளிலும் இருந்த வழவழப்புத் தன்மை போனது. எவ்வளவுதான் மகனின் வாழ்க்கைக்குத் தன் உழைப்பைப் போட்டாலும் இருவருக்கும் இடையில் உள்ள வழவழப்பைப் போக்க முடியவில்லையென வருந்தினான்.


"என்ன செஞ்சிட்ட எனக்குன்னு கேட்கிறான். நன்றி கெட்ட பையன் நன்றி கெட்ட பையன்." ஒரு பெரிய மீனின் செதில்களை உரசித் தேய்த்துச் செவுள்களை உடைத்து எறிந்தான்.


"எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுச் சாப்பாடு போட்டு இருப்பேன், படிக்க வச்சிருப்பேன்." வயிற்றைக் கிழித்து அதில் இருந்த அழுக்கு மற்றும் குடலை அப்புறப்படுத்தினான்.


"ஏதோ என் பொழப்புள அவ்வளவுதான் முடிஞ்சது. அவன் பொழப்பு அவன் கையிலதான். நான் என்ன பண்ணப் போறேன்? தத்துவமாக சலித்துக் கொண்டான். மீனின் இறக்கை, வாலைத் துண்டித்துச் சுத்தமான நீரில் மீனோடு கையைச் சேர்த்துக் கழுவினான்.


பிடித்து வந்த அத்தனை மீன்களையும் சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு  அடுப்புப் பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே நடமாடினான். ஒன்று கூடி ஊர்க்கதைகள் பேசும் இடத்தில் ஒரு மவுனியாக அமர்ந்துவிட்டுத் திரும்பவும் வீட்டிற்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து. பாதித்                தலைகளோடு ஒரு பக்க உடம்பை மட்டும் காட்டிக்கொண்டு குழம்பு சட்டியில் விருந்தாக மாறி இருந்தனர் கோதண்டத்தின் விருந்தாளிகளான மீன்கள்.


"அவன் சாப்பிட்டானாம்மா?" தன் மருமகளைப் பார்த்துக் கேட்டான் கோதண்டம்.


"இல்ல அவரு சாப்பாடு வேண்டாமுன்னு சொல்லிட்டாரு." பதிலைக் கூறிவிட்டுத் தன் கணவன் இருந்த அறைக்குச் சென்று கதவைத் தடாலெனச் சத்தத்துடன் சாத்திக்கொண்டாள்.


தனக்குத்தானே தூண்டில் போட்டுக்கொண்டு மேலும் கஷ்டத்தில் மாட்டிக்கொள்வானோ  தன் பிள்ளை என நினைத்தான் தகப்பனாகிய கோதண்டம். சில நேரங்களில் தூண்டில் புழுவாய் மாறிவிடும் அப்பன் பிள்ளை உறவை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் கோதண்டம்.


No comments:

Post a Comment