'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

4. பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து


தமிழாசிரியர்

பைந்தமிழ்ச் செம்மல், ஆசுகவி, நற்றமிழாசான் எனும் பட்டங்களைப் பெற்றவர்.

தற்காலக் காளமேகப் புலவர். சிலேடை இவருக்குக் கைவந்த கலை. 

வெளியீட்ட  நூல்கள் - காக்கை விடு தூது, எழிற்பாவை, 'இரட்டுற மொழிதல் நூறு'

கற்பனைத் திறன் மிகுந்த இயற்கைக் கவிஞர். 

கவித்துவத்தை அள்ளிக்கொட்டும் கம்பன்


கவிஞர் அழைப்பு


இயற்கை கொஞ்சும் அழகெல்லாம் 

    இவரின் கவியில் புரண்டோடும் 

வியக்க வைக்கும் காட்சியெலாம்  

    விழிகள் முன்னே நிறுத்திடுவார்  

தயக்க மின்றித் தூதனுப்பித்

    தமிழின் சுவையில் மகிழ்வுறுவார்   

நயந்து வடித்த கவிதைதனை  

    நவின்று  ரைக்க  வாருங்கள்  


பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து  வருக!

வண்டமிழ்க் கவியைத் தருக


வணக்கம்


வற்றாத் தமிழமுதை வகைவகையாய்ச்

       செய்துதரும் 

    பைந்தமிழ்ச் சோலைக்கு வணக்கம்

கற்ற அறிவமுதைக் கண்விரிய யாவருக்கும்

    ஓதுகின்ற பாவலருக்கு வணக்கம்

பற்றித் தமிழ்பயின்று பைந்தமிழின் செம்மலான 

    நிர்மலா சிவராச சிங்கம்

இற்றைக் கவியரங்கை இன்முகத்தால்

                தலைமையேற்று 

நடத்துகின்ற அம்மையார்க்கும் வணக்கம்..!


கதவைத் திறந்துவை


ஏர்பிடித்துத் தொழிகலக்கிக் 

  கொழுமுனையால் பசிபோக்கும் 

    உயர்கவியை வயல்வெளியில் எழுதினோம்..!

நார்முடிச்சை உடனவிழ்து 

  நடுவையெனும் பெயர்தொடுத்து  

    வளர்கோலப் புள்ளிகளாய் எழுதினோம்..!!

கார்விடுத்த நெடும்புனலைக் 

  கரைதடுக்க மதகுவழி 

    மடைமாற்றிக் கழனிவயல் செலுத்தினோம்..!

வேர்பிடித்துச் சுருள்விரித்து 

  வெளிர்மஞ்சள் நிறமகல 

    எருவதனைத் தேர்ந்தெடுத்துப் புகுத்தினோம்..!


நண்டுழக்கும் பயிரிடையே 

  நகராமல் மிதந்தபடி

    பலகுரலில் தவளையது  பாட்டிசைக்கும்

வண்டுழக்கும் பூவினம்சூழ் 

  வரப்பமர்ந்து கொக்கினங்கள் 

பண்ணிசையைக் கண்மயங்கிக் கேட்டுறங்கும்...!

பெண்டுழக்கிக் களைபறிக்கப் 

  பெருஞ்சாரை சரசரத்துப் 

    பேரிரைச்சல் அலையெழுப்பி இடம்பெயரும்..!

உண்டுழக்கி வாழுகின்ற 

  நத்தையெலி ஆமையுடன் 

    ஊர்க்குருவி கழனிதனில் வாழ்ந்துவரும்..!


பயிர்முற்றிச் சூல்வெடித்த 

  பசுங்காய்கள் பால்பிடித்துப் 

    பளபளக்கும் செந்நெல்லாய்க் கதிர்விளையும்...!

உயிரொட்டி உடலியங்க 

  உணவாகும் கதிரடித்து  

    உழவர்பொலி  தூற்றலின்றேல் என்னாகும்..!

தயிர்முற்றிக் கடைகின்ற 

  மத்தொலியாய்ச் சலசலக்கும் 

    மீன்புரளும் கழனியிலே உழைக்கின்றோம்..!

வயிறொட்டிக் கிடந்தாலும் 

  வளமிக்க உலகதனை 

    ஏர்க்கலப்பை முனையாலே படைக்கின்றோம்..! 


வியர்வையாலே உடல்குளித்து

  விளைச்சலெல்லாம் பெருகவைத்துக்  

    கதிரறுத்துப் பொலிதூற்றி வருகின்றோம்..!


வயல்முத்தால்  வறுமைபோக 

  வளமெல்லாம் செழிக்கவைத்த 

    இயற்கைக்கு நன்றிசொல்லிப்

          பொங்கவைப்போம்...!

புயல்பொழியும் கண்ணகற்றிப் 

  புவியெங்கும் புன்னகையே 

    மலர்கவென்று குலவையிட்டுப்

      பொங்கவைப்போம்..!.

கயல்புரளும் விழியழகீர்

  கதவையெல்லாம் திறந்துவைப்பீர்..!

    கருணையன்பு கரும்பைப்போல் 

       இனிக்கட்டும்...!


சாதிமதம் புதைக்கின்ற 

  சமத்துவத்தைப் பொங்கவைப்போம்

    ஆணுக்குப் பெண்சமமாய் அங்குவைப்போம்..!


பாதியிலோ வந்துதித்த 

  பழமைமூடத் தனமொழித்துப்

    பகுத்தறிவை ஊரெல்லாம் ஏற்றிவைப்போம்


ஆதிக்கச் சுரண்டலெல்லாம் 

  அடுப்பெரித்துப் பாரிலுள்ள 

    அத்தனையும் பொதுவுடமை ஆக்கிவைப்போம்..


நாதியற்று நிற்பவரை 

  நமதென்போம் பசியில்லா

    நாடென்றி தயக்கதவைத் திறந்துவைப்போம்..!


வாழ்த்து


சாதி மதத்தைப் புதைக்கின்ற

    சமத்து வத்தை வேண்டுமென்றார்

நாதி யற்றோர் நலம்பெற்றால் 

    நாட்டில் நீதி கிடைக்குமென்றார்

ஓதிச் சென்ற வரியெல்லாம் 

    உலகில் நடக்கும் அநீதிகளே 

காதில் மெல்ல ஒலிக்கவிட்டார் 

    கரங்கள் தட்டி வாழ்த்துவமே


No comments:

Post a Comment