'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

5. பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு

 

• பிறந்த இடம் ஈழம். வாழ்விடம் டென்மார்க்கு.

• சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுபவர்.

• மூன்று மரபு கவி நூல்களை வெளியிட்டுள்ளார்

• பெற்ற பட்டம்: பைந்தமிழ்ச்செம்மல்,

• பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் மின்னிதழில் ‘புலம்பெயர் நாடும் வாழ்வும்’ என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை எழுதியுள்ளார்.


கவிஞர் அழைப்பு


நற்கவி படைக்கும் செம்மல்

    நயத்துடன் மிளிரும் பாக்கள்

சொற்சுவை செறிவாய் மின்னும்

    சுடரென ஒளிரும் பாக்கள்

நற்றமிழ்க் கவிதை பாட

    நாட்டமாய் வரவேற் கின்றேன்

பற்றுடன் வருக மன்றம் 

   பாக்களைத் தருக நன்றே


பரமநாதன் ஐயா வருக!

பைந்தமிழ்ச் சொட்டும் பாக்கள் தருக !


கதவைத் திறந்து வை!


தமிழ்வாழ்த்து

நேரிசை வெண்பா


செந்தமிழே! சிங்காரச் சீரெழிற் கோபுரமே!

சந்தனமே! சங்கத் தமிழ்த்தாயே! - வந்தேன்

கவியரங்கில் பாமாலை கட்டியுன் தாளில்

குவியலாய் இட்டேன் குழைந்து!


நேரிசை ஆசிரியப்பா


தலைமைக் கவியே! தகைசார் அவையே!

உலகார் போற்றும் உன்னதச் சோலையில்

வந்தேன் கவிப்பூ மணக்கத்

தந்தேன் வணக்கம் தமிழால் இனிதே!



எண்சீர் ஆசிரிய விருத்தம்


புத்தாண்டே வந்திந்தப் பூமிப் பந்தில்

    பொங்கியின்பம் பெருகியோட வைத்தே நிற்பாய்!

புத்தொளியில் உலகத்தார் சிலிர்த்துப் பூத்துப்

    புரண்டுகிடந்(து) ஆடநீயும் வழிகள் செய்வாய்

இத்தரையில் வாழுமுயிர் அத்த னையும்

    இன்புற்றி ருக்கவாசை கொண்டேன் மண்ணில்

தித்திக்கும் எந்நாளும் திண்ணம் வாரீர்

    திறந்துவைப்பீர் நெஞ்சமெனும் கதவைத் தானே!


வஞ்சனையில் கிடந்துழலும் வாழ்க்கை யாலே

    வரும்காலம் என்னாகும் எண்ணிப் பாரீர்

கொஞ்சிக்கு லாவிமக்க ளோடு நாளும்

    கூடிக்க ளித்தாட வேண்டி நிற்பீர்

நெஞ்சுக்குள் நீள்பகையும் சேரா தென்ற

    நிறைவினைக் கொண்டாலே இன்பம் தேங்கும்

விஞ்சிடுமாம் அத்தனையும் வீடு வந்தே

    விரைந்தெழுந்து திறந்துவைப்பீர் கதவைத் தானே


பகையோடு வன்மத்தைக் கூட்டுச் சேர்த்துப்

    பாரிதிலே நடக்கலாமோ எண்ணிப் பாரீர்

நகையில்லா முகம்காட்டல் நன்றா சொல்வீர்

    நடத்தையிலும் அழுக்காமே அகற்று வீரோ

சிகரங்கள் தொடுதற்காய்த் தகாத தெல்லாம்

    செய்திடுதல் திறம்தானோ மறப்பீர் எல்லாம்

பகருங்கள் நன்மொழிகள் பண்பாட் டோடு

    பயணிப்போம் திறந்துமனக் கதவைத் தானே


கொடுநோய்கள் சூழ்வதுவும் வீட்டுக் குள்ளே

    குந்தாமல் கண்ணீரில் குளிக்க லாமோ

தடுக்கவழி யில்லையென்று தவிக்க லாமோ

    தகர்த்திடுவோம் துயரனைத்தும் ஓடி வாரீர்

தொடுக்கவேண்டும் போர்பலவாம் கண்ணின் முன்னே

    தோற்றவரைக் காத்திடலே சிறந்த எண்ணம்

நடுங்கலாமோ தொல்லைகண்டு சுரக்க அன்பு

    நல்லோராய் மனக்கதவைத் திறந்து வைப்பீர்


வாழ்த்து

நெஞ்ச மதனில் நிறைவிருந்தால்

    நினைவு நன்றே சிறக்குமென்றார்

வஞ்சம் தீர்க்க நினைப்பதெல்லாம்

    மகிழ்வைக் கெடுத்து மாய்க்குமென்றார்

செஞ்ச முறவே  இவ்வரங்கில் 

    சிறப்பா னதொரு கவிதந்தார் 

கொஞ்சும் தமிழில் வாழ்த்துவமே 

    கூடி நின்று போற்றுவமே 


No comments:

Post a Comment