'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 22

 சந்தக் கலிவிருத்தம்

1. கவிஞர் மதுரா

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டிக்

கருவாயெனை மகிழ்வோடொரு கனவாயவ ளேற்றே

உருவாக்கிய உறவேயிது உயர்வானது மென்பாள்

வரமேயவ ளெனையீன்றவ ளமுதூட்டிய தாயே!


2. கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை. 

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

வருபோழ்தினில் மாறாதெனும் நிலைமாறிடத் தீட்டித்

தருவாழ்வினில் தீராத்துயர் தடம்மாறிட வேண்டித்

திருவாழ்ந்திடும் சீரார்பதம் தொழுதேத்திடு வேனே.


3. கவிஞர் இல.சுந்தரா

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

இருபோழ்தினி லீராயிர மெனவேயருள் மாலின்

திருவேயுறை மார்பாமதி லெளியேனுறை வெய்த

அருமாமறை நாலாயிர மதுவேவழி யாமே!


4. கவிஞர் வசந்தன் குருக்கள்

தெருவோரமாய்த் திரிவோர்தனைச் சிறப்பாய்நிலை பேண

வருவார்சிலர் இவரின்வழி  மலரும்பலர் வாழ்வு

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டித்

தருவார்பலன் நிறைவாய்வரச் சரியாய்வரு மன்றே!


5. கவிஞர் வ.க.கன்னியப்பன்

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

விரைந்தோடிடும் கருணையுள விலையேயிலா வாழ்வாய்த்

தருவேனென இறையேசொலும் தகையாயுள கல்வி!

வருமோயினி அரிதாகிய வளமாயுள செல்வம்? 


6. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம்

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டித்

திருவாக்கினைத் தந்தாயுனைத் தினம்வாழ்த்திடத் தானே

இருள்சூழ்ந்திடு மிவ்வாழ்வினி லிடையூறுகள் போக்கி

யருள்தந்தெனை யாட்கொண்டிடு மரன்தாள்களே போற்றி!


7. கவிஞர் கேசவதாஸ்

திருவாகிய ஒருபொருளெனத் திண்மதியினை ஊட்டி

ஒருபோழ்தினி லேரோயிர முணர்வாயன காட்டி

அருவாகியே கருவானவா உத்தமாயுனைப் பாடக்

குருவாயெனக் கொருவழியினைக் குவலயத்தினில் காட்டு.

No comments:

Post a Comment