'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

பிறன்மனை நோக்காப் பேராண்மை

இந்தத் தலைப்பில் எழுந்த கும்மிச் சிந்துப் பாக்களுக்கான காரணத்தை இன்னும் அறியாதவர் கவிஞர் தங்கமணி சுகுமாறன் அவர்களிடம் கேட்டறிந்துகொள்ளுமாறு இதனால் யாவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

கும்மிச் சிந்து

தங்கமணி சுகுமாறன்

பெண்களி லேஅவள் பேரமு தம் - அவள்

   கண்களில் நானதைக் கண்டுகொண் டேன்


பாவலர் மா.வரதராசனார்

கண்களில் காட்டிய சாடைமொழி - அந்தக்

    காட்சியின் ஆட்சியில் வீழ்ந்தனடி.!               1


தங்கமணி சுகுமாறன்

வீழ்ந்துவிட் டேநானும் வீழ்ந்துவிட் டேன் - அந்த

  வெண்ணில வுமுகப் பெண்ணழ கில்

வாழ்ந்தது போதுமிப் போமரிப் பேன்- அந்த

   வஞ்சிக்கு நேரில்லை மூவுல கில்               2


பாவலர் மா.வரதராசனார்

மூவுல கத்திலும் மொய்க்கும் அழகுள்ள

    மோகினி யோவிவள் ஊர்வசி யோ?

மேவும் திரிபுர சுந்தரி யோ - தம்பி

   மேனியில் காய்ச்சலும் கொண்டனை யோ?         3 


தங்கமணி சுகுமாறன்

காய்ச்சலைக் கண்டிவ்வு யிர்துறந் தேன் - அவள்

   கண்மருந் துண்டுபி றந்துவந் தேன்

மோச்சம டைந்திட எண்ணியெண்ணி - அவள்

   முந்தானை யில்குடி கொண்டுவிட் டேன்               4

பாவலர் மா.வரதராசனார்

முந்தானை யாஅது நம்மைந சுக்கியே

   மூச்சைய டக்கிடும்  காலன்வலை 

முந்தானை தந்தவள் மூச்சென வாகிடில்

    மூவே ழுலகிலும் வெற்றிநி லை               5


தங்கமணி சுகுமாறன்

நன்றாய்ப்பு ரிந்தது பாவல ரே- நான்

   நல்லபிள் ளையுங்கள் செல்லப்பிள் ளை

கன்றாயி ருந்தெந்தன் காதற்ப சுவினைக்

   காலமெல் லாம்சுற்று வேன்பொய்யில் லை          6


பாவலர் மா.வரதராசனார்

காலமெல் லாம்சுற்றி வந்திட வேயுன்னைக் 

   கைப்பிடித் தாலவள் வீட்டிருக் க

வேலைகெட் டுப்பிற பெண்களை "நோக்குதல்" 

    மேன்மையோ நீவிடை சொல்லுதம் பீ               7


தங்கமணி சுகுமாறன்

மேன்மையில் லையையா உள்ளம்தெ ளிந்தேனே

   மீண்டுமித் தப்பினைச் செய்யமாட் டேன்

ஆண்மைக்கி ழுக்குப்பி றன்மனை நோக்குதல்

   ஆதலால் வீட்டிலி ருந்திடு வேன்               8


பாவலர் மா.வரதராசனார்

வீட்டிலி ருப்பவள் வேதம டாதம்பி 

    வீட்டுத்தெய் வத்தினைப் போற்றிடு வோம்.

நாட்டும்வ ளத்துடன் வாழ்ந்திட வேநாமும்

   நங்கைய ரைப்போற்றி வாழ்குவ மே.!               9


தங்கமணி சுகுமாறன்

ஆகட்டும் ஆசானே உங்கள்சொல் லைப்போல

   அன்புசெய் வோமிந்த நங்கைகள் பால்

போகட்டு மேபெண்கள் கண்டதுன் பங்களும்

   போற்றிடு வோம்புகழ் நாட்டுவோ மே             10

 

No comments:

Post a Comment