'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

நல்வழிகள்

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்


மாண்பினில் சிறக்கும் மானிடர் வாழ்வில்

    மதுவது வீழ்ச்சியைக் கொடுக்கும்

ஆன்றோர் கூறும் வாழ்வியல் வழிகள்

    அகமதில் ஏற்பது நன்று

மாண்டவர் பலரே குடியினில் வீழ்ந்து

    மதுவினைத் தொட்டதி னாலே

வேண்டுவேன் கெட்ட குடியினை மறந்து

    மீச்செல வினையெலாம் விடுவாய் 1


விடுகிற  தவறைத்  திருத்திட வழிகள் 

    விரைவெனத் தேடிடக் கிட்டும்

இடரினைத்  தகர்த்துத்  தொடர்ந்திட யாவும்

    இன்னலும் தீயுமே உணர்வாய்   

கடுகென நினைத்துப் பொய்தனைச் சொல்லிக் 

    கலங்கிட வைத்திட  வேண்டா 

அடக்கிடு  மனத்தை நல்லவை நினைத்தே 

    அகன்றிடும் தீயவை மறைந்து 2


மறைவினில் நின்று சூழ்ச்சிகள்  செய்து

    மற்றவர் வாழ்வதைக்  குலைத்தால்   

குறையினைக் கேட்பாய் நல்லவர் விலகக்  

    குடிகளும் வெறுப்பினைக் காட்டும் 

கறைபடும் வாழ்வு நற்பெயர் கெடுமே

    களங்கமும் தொடரென வருமே

இறைவனை வணங்கி நல்லவை செய்ய 

    இதயமும் வெறுக்குமே ஏய்ப்பை


ஏய்ப்பினைச் செய்ய ஈன்றவர் வெறுப்பர்

    ஏற்றமும் வாழ்வினில் இழப்பாய்

தூய்மையும் கெட்டு மதிப்பதும் நீங்கும்

    தூயவர் அற்றவர் என்பர்

வாய்மையைப் போற்றும் வழியினில் செல்ல

    மகிழ்வுற இல்லமும் சிறக்கும்

சாய்வதற் கொருவர் நாளுமே இருப்பர்

    தயக்கமும் விரைவென நீங்கும் 4


நீங்கிடும் நேரம் திரும்பவும் வராது 

    நெஞ்சினில் நன்றென ஏற்பாய்  

தூங்கிடச் சோம்பல் தொற்றுமே விரைவாய்த் 

    துரிதமாய்க் கடமைகள் செய்வாய்

தீங்கினைச் செய்து திரிகிற வேளை 

    தெய்வமும் அருளினைத் தராது  


பாங்கெனப் பணியைத் தொடர்ந்திட  நாளும் 

    பாரினில் உயர்வினைப் பெறுவாய் 5


உயர்வினைப் பெற்றால் உதவிகள் நல்கி  

    உன்னத வாழ்வினை வாழ்வாய் 

வியர்வையைச்  சிந்தி உழைப்பவர் மீது 

    விருப்புடன் மதிப்பினை நல்கு 

துயரதை நீக்க முயற்சியை எடுக்கத்   

    துன்பமும் விலகிடும் நம்பு 

பயன்தரும் செயல்கள் நாளுமே செய்யப்  

    பதவியில் உயர்வது கிட்டும் 6


உயர்வது கிட்டும் போதினி லென்றும்  

    உயரிய ஒழுக்கமும் வேண்டும் 

மயங்கியே நீயும் பிறர்மனை நோக்க

    வசந்தமும் அகன்றிடும் தூரம் 

தயக்கமும் மனத்தில் நிரந்தர மாகித் 

    தரணியில் தாழ்ந்திடு வாயே

வியத்தகு செயல்கள் ஆற்றிட வேண்டும்

    வினைதரும் யாவையும் நீக்கு  7


குணத்தினில் உயர்வு நிலைத்திட என்றும் 

    கொள்கையில் உறுதியும் வேண்டும் 

பணத்தினை வீணே செலவழி த்திடவே 

    பழக்கமும் மாறிடும் உணர்வாய் 

இணங்கலர் சேர்ந்தால்  கொலைகளும் செய்வர் 

    எதிரியை அறிந்ததும் விலகு

உணர்ந்திடு உண்மை நிலையது யாவும்   

    உலகினில் மாறிடும் காண்பாய்  8


காண்பவை யெல்லாம் நல்லவை என்றே 

    கற்பனை செய்யவே வேண்டா 

ஆண்டுகள் கடக்கும் அவலமும் தீரும்  

    ஆசைகள் துயரினை நல்கும்  

நாண்மதி போல நிறைவுற வாழ 

    நன்மைகள் சூழ்ந்துமே கிட்டும்  

வேண்டுவ தெல்லாம் நிறைவுற என்றும் 

    விழுமிய தொண்டினைச் செய்வாய் 9


தொண்டுகள் செய்ய நல்வழி காட்டும்

    துடிப்புடன் செயல்படு பாரில் 

எண்ணுவ தெல்லாம் நல்லன எண்ணு 

    ஏற்றமும் வருமே நாடி

கண்ணியம் காக்கக் கடமைகள் யாவும் 

    கடிதென முடிவுறும் நம்பு

திண்மையும் மனத்தில் நிலைபெற வாழ்வில் 

    தெய்வமும் அருளினைத் தருமே! 10

No comments:

Post a Comment