'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

உன்னையே அறிவாய்

கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை


உற்றார் எவருள ரோவெனில் சிந்தை

உற்றார் பெற்றோர் உறவோர் நெஞ்சில்

உற்றார் நட்பால் உள்ளக் கோவிலில்

உற்றார் தெய்வம் உறுதுணை கொண்டார். 


மற்றோர் போவார் வாழ்க்கை வழியில்

மற்றோர் மாற்றார் வழித்துணை எனினும்

மற்றோர் கடைவழி மயங்கிட நிற்பார்

மற்றோர் உற்றார் மனமிக ஆகார்


விற்றார் கொள்வார் விலைமுதல் சரக்கை

விற்றார் உடம்பை வினைவழி மயக்கை

விற்றார் புலன்களை விதிவழி பெருக்கி

விற்றார் கொள்ளார் விழைமன மடக்கி 


முற்றார் துறந்தார் முனிவதை மறந்தார்

முற்றார் மனத்தில் முழுது மிறந்தார்

முற்றார் இருவினை முடித்தார் பிறந்தார்

முற்றார் சொல்லற முயன்றார் பயின்றார்


கற்றார் மனமதைக் கண்டார் அடக்கக்

கற்றார் நானுள் கண்டார் நானதைக் 

கற்றார் புலன்வழிக் கடந்தார் முழுவதும்

கற்றார் தாமே கடவுள் ஆனார்.

No comments:

Post a Comment