'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

அன்னை அந்தாதி

ஒருபா ஒருபஃது


பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


காப்பு

அந்தாதி நானெழுத அன்னை வரமருளத் 

தொந்தி கணேசா துணையிருப்பாய் - செந்தமிழில் 

சொல்லடுக்கி மாலையாய்ச் சூட்டிடுவேன் ஏற்றென்றன் 

வல்வினை கள்போக்கு வாய்


நூல்

வாயாரப் பாடி வணங்கிடுவேன் எந்தாயே 

ஓயாதுன் நாமமே ஓதுவேன் - சேயாக 

நெஞ்சோ டணைத்து நிலவாய்க் குளிர்ந்திடுவாய்

கொஞ்சுதமிழ்ப் பாடலைக் கேட்டு 1


கேட்டு மிளகலையோ? கீதம் பிடிக்கலையோ ?

வாட்டவும்  எண்ணமோ? வாணியே ! - மீட்டும் 

குழலிசை இன்பமது கூட்டலையோ? தாயே !

மழலையெனை ஏற்பாய் மகிழ்ந்து 2


மகிழ்ந்து வரங்கள் மனமுவந்(து) ஈந்து  

நெகிழ்ந்திடச் செய்தவள் நீயே ! - அகிலத்தில் 

கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தருவாயே 

வெண்டா மரைமலர் மேல் 3


மேலகம் நீயளிப்பாய் மெய்ம்மையுணர்த்திடுவாய்

கால னணுகாமல் காத்திடுவாய் - ஞாலத்தில் 

தீராப் பிணிகளைத் தீர்த்திட வாராய்,கண் 

பாராய்! அகமலர்விப் பாய் 4


பாயில் கிடவாமல் பாவியெனை ஏற்றுக்கொள்  

கோயில் குடிகொண்ட கோமளமே ! - நோயுற்று 

வெந்துமனம் நோகுமுன்னே வேண்டுகிறேன் சக்தியே

வந்தெனையாட் கொண்டிடு வாய்! 5


வாய்ப்பொன்று நல்கினாய் வையகத்தில் வந்துதித்தேன் 

தாய்மனத் தோடெனைத் தாலாட்டு ! -மேய்ப்பனிலா 

ஆடாய்த் தடுமாறி அல்லலுற்றேன்! இல்வாழ்வில் 

ஓடாகத் தேய்ந்தேன் உழன்று 6


உழன்று திரிந்தேன் உலகை வெறுத்தேன் 

கழலைப் பிடித்துக் கசிந்தேன் - குழவியின் 

விம்மலின்னும் காதில் விழவில்லை யோ?எனக்குச்   

சும்மாவோர் ஆறுதல் சொல் 7


சொல்லும் மொழியில் சுகப்படுவேன் உன்னாலே! 

நல்லழகு நாயகியே ஞாலத்தில் - வெல்வதற்குன்

ஆசியொன்றே போதும்; அனுதினம் பாக்களால்

பூசிப்பேன் பொன்னுளம் பூத்து 8


பூத்துக் குலுங்கும் புதுமலரின் பேரழகே 

காத்திட வேண்டுமம்மா கற்பகமே ! - மூத்தவளே!

கண்மலர்ந்து பாருமம்மா! காற்சதங்கை கொஞ்சிடவே

அண்டம் அசைந்திட ஆடு 9


ஆடுமயில் மீதுவரும் ஆறுமுகன் அன்னையே! 

வேடுவத்தி மாமியே! மீனாளே ! - கூடுவிட்டென்  

ஆவி பிரியுமுனே அன்புடனுன் காட்சியினை

மாவிருந்தாய்த் தந்திடு வாய் 10

No comments:

Post a Comment