'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

ஆசுகவியாட்டம்

பாவலர் மா.வரதராசன்

பைந்தமிழ்ப் பாமணி சுந்தர ராசன்

பைந்தமிழ்ச் சுடர் இராஜ் குமார் ஜெயபால்


“முப்பத்து நான்கு நாள்களாகின்றன. கைவிரல்கள் ஓரளவு இயங்கத் தலைப்பட்டுள்ளன. தேக்கிவைத்த எழுத்துகள் என்னிலிருந்து புறப்படத் தயார் நிலையில் உள்ளன. எழுதியே ஆக வேண்டிய மனநிலையில் நான். என்னோடு போட்டியிட்டுப் பாடப்போவது யார்? 

தத்துவப் பாடல்கள் (சமூகம், இயற்கை, இறைமை)

பாவகை: ஈரடி கலித்தாழிசையில் தொடங்குகிறேன். எந்தெந்த வகை வருகிறதோ வரட்டும்...

வா...சுந்தரா!  வா...

கையிலே காசிருந்தால் காக்கைககள் ஓடிவரும்

பையிலே இல்லையெனில் பையவே ஓடுமப்பா”


எனக் கடந்த 01-12-2020  அன்று பைந்தமிழ்ச்சோலை முகநூற் குழுவில் பாவலர் மா.வரதராசனார் அவர்கள் அழைக்கப்  பைந்தமிழ்ப் பாமணி சுந்தர ராசன் அவர்களும்  பைந்தமிழ்ச் சுடர் இராஜ் குமார் ஜெயபால் அவர்களும் இணைந்து ஆடிய ஆசுகவியாட்டம்.


பாவலர் மா.வரதராசன்:

கையிலே காசிருந்தால் காக்கைகள் ஓடிவரும் 

பையிலே இல்லையெனில் பையவே ஓடுமப்பா!    1


சுந்தர ராசன்:

ஓடுவதால் உன்பேர் உவந்தனையோ செல்வமென?

மாடெனும்நீ மேய்க்க வருவதென்றோ சொல்லம்மா?              2


பாவலர்:

அம்மாவுங் கூட அருகிருக்க மாட்டாளே

செம்மை யெனப்பிள்ளை சீர்பெறா தானாகில்.    3


சுந்தரா:

தானாகுஞ் செல்வம் தனையடைந்து மூழ்கிவிடின்

நானாரும் போக நமையண்டும் ஞானமதே!          4


பாவலர்:

ஞானத்தை வேண்டி நடக்கும் மதிமுன்னம்

ஊனத்தை நாடி உழலுவதேன் என்தம்பி.?            5


சுந்தரா:

என்னென்று சொல்வேன் எமதையா! எல்லாம்நம்

முன்வினைகள் செய்யும் முனைப்பேதாம் கண்டீரே! 6


பாவலர்:

கண்டாலும் உள்ளம் கனவென்று  தானம்பி

மண்டாகி நின்று மருள்கிறதே ஏன்தம்பி?               7


சுந்தரா:

ஏனென் றிதுதேடி இற்றார் பலகோடி!

நானொன்றைக் கொல்லநலம் நாடிடுமாம் சொல்வரையா! 8


பாவலர்:

நானென்னும் பற்றறுத்து நாதன்றாள் நாடிப்புகின்

ஊனந்தான் ஏதுமில்லை உண்மைச்சொல் கேட்டதுண்டே 9


சுந்தரா:

கேட்டதையே நம்பிக் கிடத்துகிறேன் வாழ்வையுமே!

நாட்டம் அனுபவத்தில் நண்ணுகின்ற நாள்நோக்கி!           10


பாவலர்:

நோக்கும் விழிப்பார்வை நுண்மை யதைப்பெறில்

தேக்குகின்ற வெற்றித் திருமகளும் சேர்ந்திடுவாள்.             11


சுந்தரா:

சேரட்டும் என்றே செபிக்கின்றேன் பேரைநிதம்!

ஈரெட்டும் எட்டுமவள் இட்டத்தால் ஏகிடுமே           12


பாவலர்:

ஏகும் துயரங்கள் எல்லாமுன் நல்வினையால்

வேகும் நிலைவிடுத்து வேண்டுவினை யாற்றிடுவாய்             13


இராஜ்குமார் ஜெயபால்:

ஆற்றுவதும் போற்றுவதும் ஆரிங்கே செய்தாலும்,

தூற்றுவதும் தூக்குவதும் தூயோனின் தூவினையே!             14


சுந்தரா:

தூமணியே உள்ளே துலங்குகின்ற பேரொளியே

மாமணியே ஏழை மரகதமே வாழியநீ             15


பாவலர்:

நீபடைத்த செல்வம் நெடுங்காலம் வாராதே

பேர்படைத்து வாழ்தல் பெரும்பய னாகுமப்பா     16


இராஜ்:

பாரினிலே பேரெடுக்க பார்த்தவற்றைக் கொல்லாது

பாரிலிடம் கொள்ளாது பாசத்தைக் கொள்வாயே!            17


சுந்தரா:

கொள்வை யெனக்கொடுத்தால் கொள்ளுபுகழ் மட்டின்றி

அள்ளவள்ள ஊறும் அவர்செல்வம் ஆமாமே!            18


பாவலர்:

மேட்டினீர் பள்ளத்தில் வீழும்நிலை நீரறிவீர்

காட்டுமின் அன்பைக் கனிவோ டிருமினே             19


இராஜ்:

நேற்றுவீழும் நீரின்றோ ஏறும்வானில் என்பதனைத்

தோற்றுவீழும் நாளில் துவளாது எண்மின்னோய்!             20


சுந்தரா:

எண்மின் இறையருளை எப்போதும் ஈசனுரு

கண்முன்னே காணுவரை காணாதீர் ஓய்வினையே!             21


பாவலர்:

ஓய்வில்லாச் சிந்தை உருவாக என்னுள்ளில்

தாய்ப்பாலைத் தந்துவந்து தாமணைப்பாய் என்னம்மே             22


இராஜ்:

மேன்மையான சிந்தனைகள் மேலிட்டால் வான்புகழாம்!

ஊன்வளர்த்தே ஆட்டமிட்டால் ஊழ்வினைகள் ஓங்கிடுமே!        23


சுந்தரா:

ஓங்குபுகழ் வாணாள் உயர்செல்வம் வேண்டுபவர்

தீங்கு நினையாரே தேடிநிதம்! தாங்கும்

இறைமறவார் வாழ்வில் இயங்கும் செயலில்

குறைகூறார் கொள்வார் குணம்!             24


பாவலர்:

கொள்ளும் குணங்கொண்டால் கோண லெனவாகும்

தெள்ளத் தெளிமின் திரைநெஞ்சே - அள்ளக்

குறையாத அன்பே குறைவற்ற வாழ்வாம்

நிறைவான வாழ்வின் நிசம்.             25


இராஜ்:

நிசவல் லியற்கையும் நீசச் செயற்கை

விசமெனத் தாக்குதலில் வீழ்ந்தால் - வசமான

வாழ்விலே ஏற்றமேது வாலிபரே கண்டுநீவிர்

தாழ்வழித்தல் ஏற்பீர் தலை!                            26


சுந்தரா:

தலையே சிவனாரின் தாள்வணங்கு! கைலை

நிலையே மனமே நினைப்பாய்! உலையே

கரம்வைத்தான் கங்கை சிரம்வைத்தான் காமி

புறம்வைத்தான் தானே புகல்!             27


பாவலர்:

புகல லெளிதாமோ புண்ணிய னீசன்

தகவை யளத்தல் தகுமோ - இகலை

அழிக்க முனைவீர் அவனிரு பாதம்

வழிக்குத் துணையாய் வரும்.             28


இராஜ்:

வருவாய் வளர்பிறையா வாரி வனைந்து

தருவாயே கங்கைநீர்த் தண்மை - குருவாய்நீ

ஆலமர்ந்து தீக்காணா ஆன்மத்தின் சூக்குமத்தைத்

தாலாடாச் சொன்னதேன்வேந் தா!             29


சுந்தரா:

வேந்தன் விழிமூன்றன் வேக விடையேறும்

காந்தன் அயில்வேல் கரங்கொண்ட ஏந்தலைப்

பெற்ற எழிலோன்! பிறப்பிலான் ! என்பிறப்பை

முற்ற அருளும் முதல்!             30


பாவலர்:

முதலும் முடிவுமாய் நின்ற முதல்வா

கதவைத் திறந்துவை வீட்டில் - பதமாய்

அருகமர்ந்(து) உன்னை அகமகிழக் காண

அருகணிந் தோனவன் காப்பு             31


இராஜ்:

காப்பாற்றப் பல்லுயிரைக் கானகத்தில் தந்ததனை

தீப்போலப் பற்றியபின் தீர்ப்பதோ! – கைப்பிடிக்கத்

தந்தகரம் பல்லின் தடம்பதித்தல் நன்றாமோ?

இந்தவுண்மை ஆய்வோமே இன்று!             32


சுந்தரா:

இன்றோர் இனியநாள் எங்களின் ஐயாவோ

டொன்றாய் அமர்ந்தும் உயர்தமிழால் - நன்றாக

அந்தாதி சாற்றும் அரியநாள்! ஈங்கிதனைத்

தந்ததும் ஈசன் தயை!             33


பாவலர்:

ஈசன் தயையை எவர்தடுப்பார் இவ்வாழ்வின்

பேசும் மறைபொருளின் பெற்றியன்றோ - காசுக்கு

வாழ்வோர் தயையெல்லாம் வாட்டும் ஒருநாளில்

தாழ்த்தாதே உன்றன் தலை             34


சுந்தரா:

தலைமேல் அணிந்துள்ள தண்மதியம் தன்னின்

கலைபோற் குளிரும் தமிழை - அலையாகப்

பொங்குவண்ணம் தந்தவனின் பூங்கழலை அண்டியபின்

இங்கெனக்கு மோர்கவலை ஏது?             35


பாவலர்:

ஏதுமில்லை ஈசன்றாள் ஈங்கிணைந்த பின்னாலே

ஏதமில்லை நெஞ்சில் இருளுமிலை - வேதனவன்

காக்கும் இறைவனாய்க் காணின் உமையோடு

காக்கும் இறைவ னவன்!             36


சுந்தரா:

அவனே இறையாம் அவனே குருவாம்

அவனே இலக்கோடும் ஆறாம்! - அவனே

தமிழாம் அவனே தருமத் துருவாம்!

அமிழ்தாம் அவனே அரண்!             37


பாவலர்:

அரனு மவனே அரியு மவனே

சிரமேற் குவிப்போம் கரமக் - கரமே

அபயக் கரமாய் அணைக்கும் கரமாய்

உபய மளிக்குங் கரம்.             38


சுந்தரா:

கரமேநீ கூப்பு! கனிவாயே பேர்சொல்!

சிரமேநீ ஈசன் கழல்சேர்! பரமே!

பதியே! விதியே! பசுவை அருகே

கதிகாட் டெனநெஞ்சே கெஞ்சு!             39


பாவலர்:

கெஞ்சுக நெஞ்சேநீ கேடில் இறைவீட்டைத்

தஞ்சமெனச் சேர்க தாழ்தலையாய் - விஞ்சுபுகழ்

சேர்ப்பான் இறையீசன்  தேய்ப்பான் துயரத்தைக்

காப்பானே தன்னருளைத் தந்து!             40

No comments:

Post a Comment