'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு…

பகுதி – 9

மரபு மாமணி 

பாவலர் மா.வரதராசன்


சாதியம் என்பது எல்லா இனத்தாரிடமும் உள்ளதே. இந்துக்களிடம் மட்டும் உள்ளதன்று. அது மனிதர்க்கிடையேயுள்ள உயர்வு தாழ்வு குறித்தான நிலையைச் சுட்டும். உயர்வு தாழ்வு நிலையிலாத போதே இந்தக் கட்டமைப்பு சிதையும். ஆனால் ஏற்றத்தாழ்வு என்னும் நிலையைப் பார்க்கப் புகின் அது எல்லாவுயிரிடத்தும் பரவியிருப்பதை அவற்றின் வாழ்வியலை உற்றுநோக்கின் அறிதற்கேலும். ஆக, ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை சாதியம் என்ற கட்டமைப்பை யாராலும் சிதைக்கவோ அழிக்கவோ இயலாது.


ஆனால் சமயம் என்பது அந்தந்த இனத்தாரிடையே ஒரு முறையான கருத்தியலால் பொதுவில் வைத்துச் சுட்டப்படும் அடையாளமாகும். அது மாந்த வாழ்வின் ஒழுக்க நிலையைச் சார்ந்த நெறியைக் கூறி அதற்கேற்ப மனங்களைச் சமைக்கும் வழியாகும். இந்த வழியில் அந்தந்த இனத்தார்க்குரிய "மதவொழுக்கம்" பொதுவாகவே இருக்கும். சான்றாக, இந்துக்களிடம் உள்ள கடவுள் வழிபாடு அனைத்து இந்துக்களிடமும் ஒரே மாதிரியாக இருக்கும். அஃதாவது, காளியை வணங்கும் முறையும், சிவனை வணங்கும் முறையும் மற்ற கடவுளை வணங்கும் முறையும் ஒரே விதத்தில் அமையும். அதேபோல்தான் இசுலாத்திலும் கிறித்துவத்திலும்.


எனவே, சாதி என்ற கட்டமைப்பில் நின்றுகொண்டு இறைமையை ஒழிக்கவோ, இறைமை என்ற கட்டமைப்பில் நின்றுகொண்டு சாதியை ஒழிக்கவோ எக்காலத்தும் இயலாது.


இந்நிலையில் பெரியார் முன்னெடுத்த சாதியொழிப்பு என்பது குறிப்பிட்ட மதம் (இந்து) சார்ந்த நிலையிலேயே நின்றுவிட்டது. அதிலும் கூடத் தம்மை உயர்சாதியினராகச் சொல்லிக் கொண்ட ஆரிய பார்ப்பனர்களை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது.


★இதன் காரணமாகவே இராசாசி என்ற பார்ப்பனர் கொண்டுவந்த குலக்கல்வி முறையை எதிர்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அதில் வெற்றியும் கிடைத்தது. (சமூகம் சார்ந்த சீர்திருத்தங்களில் இது மட்டுமே அவர் பெற்ற வெற்றியாகும். இதுவே அவரைப் புகழிலேற்றியது) ★


"சங்கக் காலத்திற்குப் பிறகு" கல்வியை அனைவருமே கற்கலாம் என்ற நன்னிலை இம்மண்ணில் உள்ளதென்றால் பெரியாரின் இந்த வெற்றியே... அவருடைய இந்தத் தொண்டு மட்டுமே மிகப்பெரிய காரணம் எனலாம்.


மற்றபடி தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் அவர் எந்த முன்னேற்றத்தையும் செய்ததில்லை. அது அவருடைய நோக்கமுமன்று. அவருடைய நோக்கமே "திராவிடம் என்ற போர்வையில்" தமிழினம் என்ற தொன்மையினத்தை "திராவிட இனம்" என்று மாற்றுவதாகவே இருந்தது. அதன் ஒரு கூறுதான் தமிழிலக்கியங்களைக் குப்பை யென்றும், பயனில்லாதவையென்றும் இழித்தும் பழித்தும் கூறியது. அதுமட்டுமன்றித் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் ஆரிய அடிவருடி நூல்களென்றும் கூறுகின்ற திராவிடர் கழகத்தின் உண்மையான உளப்பாடு இதுவேயாம். அதே மனப்பான்மைதான் கம்பராமாயணத்தை அவர்கள் எதிர்ப்பதும்.


மூட நம்பிக்கை எதிர்ப்பைக் கடவுள் மறுப்பாக மாற்றிய பெரியார், ஆரிய - திராவிடர் பற்றிய எவ்வித ஆய்வு அறிவுமின்றி ஆரிய பார்ப்பனியத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் அந்த உணர்வு தமிழுணர்வாக மாறிவிடாதபடி திராவிட எழுச்சி என்பதாகவே உருப்பெறச் செய்தார்.


கடவுள் மறுப்பின் வழியாகப் பார்ப்பனர்களை எதிர்க்க அவர் மேற்கொண்டதே கம்பராமாயண எ(திர்)ரிப்பாகும். கடவுள் மறுப்பு என்பதில் இராமனையும், கண்ணனையும் மட்டுமே குறியாகக் கொண்ட அவர்கள் அதன்மூலம் ஆரிய-திராவிடக் கருத்தியலைத் தமிழ் மக்களிடையே ஆழமாகப் பதிய வைத்தனர். திராவிடமே தமிழினம் என்பதை "எடுப்பார் கைப்பிள்ளை யான" தமிழரிடையே மிக நுட்பமாகப் பரப்பினர். அதற்கு அவர்களின் அமைப்பும், அவரைத் தொடர்ந்து திராவிடக் கட்சிகளும் மிகவும் உதவியாயிருந்தன. ★


இனி நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குள் நுழைவோம். இக்கட்டுரையைத் தொடங்கும்போது கம்ப ராமாயணத்தை இவர்கள் எதிர்ப்பதற்குரிய காரணங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றுள் மிக முதன்மையான ஒரு காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். அது "கம்பர் ஆரியத்தைத் (இராமனை) தமிழகத்தில் பரப்பினார். ஆரிய அடிவருடியானார்" என்பது.


விளக்கம்: பெரியாரும் சரி... அவருடைய தொண்டர்களும் சரி... எதையும் ஆராயாமலே ஒரு முடிவுக்கு வருவதையும், அதுவே சரியானது என்று அழுத்தமாக வாதிடும் இயல்பினர் என்பதற்கு இந்தக் குற்றச்சாட்டே சிறப்பான எடுத்துக் காட்டாகும்.


திராவிடத்தை வளர்ப்பதே ஒரே நோக்கமாகக் கொண்டதால் அவர் பார்ப்பன எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் கையிலெடுத்துக் கொண்டார் எனக்கண்டோம். 


இராமன் ஆரியன் என்றும், இராவணன் திராவிடன் என்றும் அவர்களாகவே ஒரு கருத்தைக் கற்பித்துக் கொண்டனர். "இராமன் ஆரியன் என்பதால் அவனை நல்லவனாகவும், இராவணன் திராவிடன் என்பதால் அவனைக் கெட்டவனாகவும் இராமாயணம் கூறுகிறது" என்று தமிழ் மக்களிடையே பரப்பினர். 


இவர்களுடைய கம்பராமாயண எதிர்ப்பென்பது “தமிழர் தனி இனமல்லர்; அவர்கள் திராவிடரே" என்னும் கருத்தைப் பதிய வைக்கும் கருவியாகவே பயன்பட்டது. அதன் காரணமாக இராமாயணத் திற்கு மாற்றாகக் கீமாயணம் என்றும், இராவணக் காவியம் என்றும் இவர்களால் எழுதப்பட்டன.


இப்போது நாம் விளக்கத்திற்குள் உள்விளக்கமாக இராமாயணம் தோன்றிய மூலத்தைச் சற்றே ஆய்வோமா...!.?         


                                                                                                                               ...தொடரும்...

No comments:

Post a Comment