'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

சூரிய வெளிச்சம்

 பகுதி-3

பைந்தமிழ்ச்செம்மல்

முனைவர் அர.விவேகானந்தன்


2. குறிஞ்சி வளம்!


படர்ந்திடு மூங்கில் தோட்டம்

    பக்கமாய்க் கமுகு தோட்டம்

அடர்ந்திடும் வனத்தின் நாட்டம்

    அழகென வியற்கை கூட்டும்

இடர்தரும் விலங்கே எல்லாம்

    இசைவினைக் காட்டிச் செல்லும்

தொடர்ந்திடு மழலை யன்ன

    தொடுமலை சிறப்பின் குன்றாம் 31


பவளமா மலையு முண்டாம்

    பளிங்கென வொளிரும் நன்றாம்

தவமதை முனைய வேண்டித்

    தவத்தினில் கனிந்தோ ருண்டாம்

அவமென வந்த போதும்

    அதிர்ந்திடா அறவோ ருண்டாம்

நவமணி விளைச்சல் நல்கும்

    நல்வழி நாட்டுங் குன்றாம் 32


வேலவ னருளுங் குன்றாம்

    வெள்ளைக ளொலிக்குங் குன்றாம்

கோலமே கூடுங் குன்றாம்

    குறமகள் வாழுங் குன்றாம்

சீலமே காட்டும் மன்றம்

    சேர்ந்துமே வாழு முற்றம்

பாலமா யுலகி லோங்கும்

    பைம்முறை காட்டுங் குன்றாம் 33


பற்பல விளைச்ச லாக்கிப்

    படையலி லோங்கி நிற்கும்

சிற்சில வின்னல் நேரின்

    செழுமையா யாக்கிக் கொள்ளும்

பற்பல பழமை தேக்கிப்

    பாங்கெனும் பண்பை நாட்டும்

வெற்பென நிமிர்ந்து நிற்கும்

    வெற்றியை யாக்குங் குன்றாம் 34


வரிசையா யூர்திக் கூட்டம்

    வழியினில் செல்லல் போலும்

வரிசையாய்க் குன்றின் தோற்றம்

    வளமையைச் சுமந்து நிற்கும்

சரிவினில் கதிரோன் செல்லத்

    தருவெனும் மணிகள் மின்னும்

பரிவுடன் வந்த பேர்க்குப்

     பலவளந் தேக்குங் குன்றாம் 35


பலாவினைச் சுமக்கு மந்தி

    பகலினில் பந்தி வைக்க

உலாவரும் புள்ளின் கூட்டம்

    உரிமையாய்க் கொத்தித் தின்னும்

கலாவெனுங் கனியைக் காட்டிக்

    கணக்கெனப் பங்கைப் போடும்

துலாவிய கையின் நாற்றம்

    தொலைவினில் மணக்குங் குன்றாம் 36


பெருமலை யுடைத்தல் போலும்

    பிசினெனுங் கிழங்கைத் தோண்ட

வருமுறை சொல்லா நேர்வாய்

    வரிசையாய் நாடிச் செல்வார்

ஒருவரு மோய மாட்டார்

    ஒருநிழ லமர்ந்தே உண்பார்

தருநிழல் செழிக்குங் குன்றம்

    தவிப்பெலா மில்லாக் குன்றாம் 37


இடுப்பினில் தழையா மாடை

    இருப்பெனக் குறவோர் கட்ட

மிடுப்பினில் மழலைக் கூட்டம்

    மிஞ்சியே ஆட்டிப் பார்க்கும்

துடிப்பென ஒளிருங் கூட்டம்

    துயரதை நின்றே போக்கும்

உடுப்பென இல்லா வாழ்வில்

    உலகதை மயக்குங் குன்றாம் 38


கூத்திடும் கலைஞர் கூட்டம்

    குறையெனக் கூறி நிற்க

வேத்தெனப் பாரா வண்ணம்

    வென்றிடும் வழியைச் சொல்வார்

பூத்திடும் மலர்கள் போலும்

    புவியினில் செழிக்கச் சொல்வார்

காத்திடுங் குறவர் குன்றம்

    கருணையு மொளிருங் குன்றாம் 39


மணிவளஞ் சுரக்குங் குன்றம்

    மனவளம் சிறக்கும் குன்றம்

கனிவளம் பெருக்குங் குன்றம்

    கரும்பென இனிக்கும் குன்றம்

குணவளங் குறவோர் குன்றம்

    குறையது மில்லாக் குன்றம்

தனியெனத் தழைக்குங் குன்றம்

    தகையெலாங் கூட்டுங் குன்றாம் 40


வெளிச்சம் தொடரும்…

No comments:

Post a Comment