'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

இரவின் எழில்


பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

இருளை விரட்டும் பரிதியொளி
இரவின் அமைதி போக்கிடுமே
தெருவும் அமைதி காண்பதில்லை
தீங்கும் நிறைந்து வழிந்திடுமே
அருவி பாயும் சத்தமெல்லாம்
அருகிப் போகும் அழகின்றி
இருளின் அழகில் உள்ளமெல்லாம்
இதமாய் இருக்கும் அமைதியொடு

இனிமை தருமே நிலவினொளி
இதயம் நிறைவு காணுமதில்
அனலும் தகிக்க குளிர்மைவர
அமைதி காணும் உள்ளமெல்லாம்
சினமும் தீரும் மனத்தினிலே
சிந்தை மகிழும் பொழுதன்றோ
கனிவா யிருக்கும் உள்ளமது
கலங்கும் நெஞ்சம் ஓய்வுபெறும்

புதுமை தவழும் இரவினிலே
பூத்து மலரும் மல்லிகையும்
இதழ்கள் விரிய நறுமணமும்
இனிமை கொடுக்கும் மனத்தினிலே
கதறும் பசுக்கள் ஓய்வெடுத்துக்
கன்றின் அருகில் உறங்கிடுமே
புதரில் பூச்சி வெளியேறி
புதிய ஒளியைப் பாய்ச்சிடுமே

சிறக்கும் வானில் விண்மீன்கள்
சிதறி எங்கும் தோன்றிடுமே
தெறிக்கும் ஒளிகள் தெருவெங்கும்
செம்மை யாக ஒளிபாய்ச்சும்
பிறையும் ஆங்கே மிளிர்ந்திடுமே
பின்னால் நிலவும் முழுமதியாய்
நிறைவு பெற்று வானத்தை
நேராய் எங்கும் வலம்வருமே

மேல்கை எங்கும் குளிர்க்காற்று
மேவி அமைதி கொடுத்திடுமே
ஏல்வை யெல்லாம் அழகாக
இருளில் மின்னி ஒளிர்ந்திடுமே
மால்பு வைத்தே தேன்கூட்டில்
மறைந்து தேனும் எடுத்திடுவார்
சால்பு நிறைய இலக்கியத்தில்
சான்றோர் சொன்னார் பாட்டினிலே

No comments:

Post a Comment