'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

உத்தம குரு



பைந்தமிழ்ச்செம்மல்
விவேக்பாரதி

மன்னன் சிறப்பு

வாளுடையன்! அமரர் போன்ற
வனப்புடையன்! வெற்பு முட்டும் 
தோளுடையன்! பகைமைச் சூளைத்
தோற்கடிக்கும் வலியன்! பட்டு
நீளுடையன்! கரிய மேக
நிறமுடையன்! தம்மைப் போற்றித்
தாளடையும் அன்பர்க் கெல்லாம்
தாயாகும் பத்ம நாபன்!

யானைகள் வென்று, தந்தம்
யாழென ஆக்கிப் பாட்டின்
மோனைகள் எதுகைக் கெல்லாம்
முழுசுதி கூட்டிப் பாடும்
ஞானியல் புலவன்! செல்வ
நற்றமிழ்க் கவிதை பாடும்
தேனுடை நாவுக் காரன்!
தேருடை பத்ம நாபன்!

இளமையில் அரச னாகி
இருநிலம் முழுதும் தன்றன்
வளமைசால் குடைக்குக் கீழே
வளைத்தவன், குழந்தை என்றால்
உளமிகக் குழையும் பண்பன்!
உலகினோர் உவந்து போற்றும்
தளமெனத் தமிழ கத்தைத்
தனியர சாண்ட வேந்தன்!

பாரியும் கபிலர் போல
பாவலர் வள்ளல் போல
மாரியும் இடியும் போல
மணிமுடி செங்கோல் போல

நேரிய சிந்தை கொண்ட
நிறைமதிப் புலவன், தர்க்க
சூரியன் விஜய ராஜன்
துணையென வாழ்ந்த வேந்தன்

திருமகள் தங்கும் மார்பன்
திரண்டபாற் கடலோன் நாமம்
நிரந்தர மாக நாவில்
நித்தியம் சொல்லும் பக்தன்!
பெருமது ராந்த கத்தைப்
பெற்றியோ டாண்ட மன்னன்
தரங்களைக் கண்டோம்! ஊரின்
தன்மைகள் இனிக்காண் போமே!

ஊரின் தன்மை

கேள்வியே சிறந்த செல்வம்!
கேள்வியால் மனிதர் வாழ்வில்
வேள்விபோல் வரங்கள் சேரும்,
வேதனை மாயும் என்று
சூளுரை சொல்லும் மக்கள்
சூக்குமம் கற்ற மக்கள்
வாளுடன் கற்கும் கல்வி
வாக்கிலும் தீமை மாய்ப்பார் !

குருகிடம் பாலைத் தந்தால்
குடிக்குமுன் அதிலே நீரைப்
பிரித்திடும் பண்பைக் கொண்டார் 
பிழையெனப் புரளி பேசார்
குருகுலக் கல்வி கற்பார்
குறையென விரத்தல் கண்டால்
பரிவொடு பலகொ டுப்பார்!
பகலவனுடன் விழிப்பார்!

பஞ்சமாம் பசிக்கு! அங்கே
பணிவன நெல்க ழுத்து!
வஞ்சமோ பகைக்கு! அங்கே
வாடுவன வெயிலில் வற்றல்!
தஞ்சமாம் அமரர்க்! கிங்கே
சரிவன சரிகைச் சேலை!
நெஞ்சமே நிறைக்கும் தென்றல்
நெற்றிநீர் துடைக்கும் ஊராம்!  

மேலைவான் ராணி வெண்மை
மேனியள் திங்கள் தூங்கக்
காலையாம் பெயரில் அங்கே
கதிரவன் விரியும் நேரம்
சேலையார் இடையில் வண்ணச்
செப்புசெய் கலன்கள் ஆட
வேலைக்கு விரையும் காட்சி
மிகவெழில் வாய்ந்த காட்சி!

கூவிடும் குயிலும்! பூவில் 
கூடுவண் டினமும், நீரில்
தாவிடும் கயலும்! அந்தத்
தண்ணீரில் சுழியும்! வானை
மேவிடும் நிறமும்! கையில்
மேழியோ டேகும் மக்கள்
ஏவிட நகரும் மாடும்
எழுதவே இனிக்குங் காட்சி!

வாயிலில் கோலம் போடும்
வஞ்சியர் வளையின் ஓசை!
கோயிலில் ஒலிக்கும் சந்தம்
கொள்திருப் புகழ்பாட் டோசை!
வேயிடை தென்றல் ஓசை
வெய்யிலில் சருகின் ஓசை!
ஆயிரம் ஓசை அந்த
அணிநகர் ராகத் தூரே!

அந்தியாம் பெண்ணைப் போற்றி
அழகுறுந் தீபம் ஏற்றிச்
சந்துகள் தெருக்கள் எல்லாம்
சங்கதிக் கூத்துக் கட்டி
இந்திர ஜாலம் செய்யும்
இன்நகர் காட்சி கண்டோம்
விந்தையா யவர்க்கு ளிங்கே
விரிகிற கதைகாண் போமே

-சிறப்புரைப் படலம் முற்றும்-

No comments:

Post a Comment