'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

காக்கைவிடுதூது - பகுதி - 3


பைந்தமிழ்ச் செம்மல் 
வள்ளிமுத்து

வண்டு
கண்ட இடமெல்லாம் கள்வடிக்கும் பூவினங்கள்!
வண்டு தடுமாறி வாய்வைத்துப் போதைமிகின்          46

தூதாகச் சொல்லியதைத் தோதாகச் சொல்லுமோ.!
ஏதோ உளறிவிட்டால் என்னிலை..என் னாகுமோ..!      47

கள்ளுண்பான் பேச்செல்லாம் காலையிலே போச்சென்பார்
உள்ளுணர்வு ஓதியது வண்டுவேண்டா வென்றெனக்கு!                                                                        48

அன்னம்
அன்னத்தைத் தூதாக்க ஆசையதும் இருந்தது..பால்
வண்ணத்தைப் போல்முகத்தாள் வாள்விழியைக் கண்டஃது                                                                 49

வில்லொன்றில் அம்பிரண்டை வேட்டையாட வைத்தளென்று
சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டால் என்னிலைமை                                                                      50

ஆகாதாம் ஆகாதாம் அன்னம் அவளிடம்செல்
தூதுக்குத் தோதாகா என்பது..வே திண்ணம்                51


கிளி.!
பச்சைக் கிளியதனைப் பாவைக்குத் தூதனுப்ப
இச்சையொன்று கூட. இருந்ததென்னுள் ஆனாலும்..!  52

பூவை நிகர்த்தவளின் புன்முறுவல் செய்யிதழைக்
கோவைப் பழமென்றே கொத்திவிட்டால் ஐயையோ 53

கிள்ளைசொல்லும் பிள்ளைமொழி கேட்பாளோ.? இல்லையில்லை
தொல்லைதான் தொல்லைதான் தூதுக்குக் கிள்ளைதான்..!  54

மயில்.
தோகை மயிலொன்றைத் தூதாக்க எண்ணினேன்
மோக ஒயிலாளின் மொத்தழகைக் கண்டுவிட்டால்   55

ஒத்த கருத்துடையார் உள்ளங்கள் நட்பாகும்
ஒத்த அழகுடையோர் எப்போதும் ஒன்றாகார்..!           56
போறாமை கொண்டு பொதுவாகக் கூறாமல்
வேறாகக் கூறிவிட்டால் வேண்டாம் மயிலிதற்குத்..!   57

தென்றல்
தென்பொதிகை வந்திறங்கும் தென்றலையே தேவதைக்கு
முன்பதிவாய்த் தூதாக்க முன்பே நினைத்திருந்தேன்   58

தண்பொருநை நீர்குளித்துத் தாதவிழ் பூத்துடைத்துக்
கண்மகிழ் சோலைவயல் காவில் விளையாடித்          59

தென்றலது தேவதையாள் வீடுசென்றாள் மெல்லிடையாள்
கண்மயங்கித் தூங்கிடுவள் காதலை..யா கேட்பள்..!  60

மேகம்
நீலக் கடல்குளித்து நீள்வானில் பந்தலிட்(டு)
ஓலம் எதுவுமின்றி ஓடுகின்ற மேகத்தை                      61

ஏகுமென்று தூதாக்க ஏதோ நினைத்திருந்தேன்
போகும் வழியில் புயலாய்ப் பொழிந்துவிட்டால்?        62

மின்னல் கொடிபரப்பி வானில் இடியெழுப்பும்
கன்னல் மழைமேகம் கைவிட்டேன் வேறென்ன..!        63

நெஞ்சம்
கட்டாத பூங்குழலின் காட்டுக்குள்..! தேயாத
ஒற்றைநிலா ஓடவிடும் வெண்முகத்தாள்.! ஓங்குமெழிற்                                                                       64

சிட்டாகக் கண்சிமிட்டிச்.! சிந்தையெல்லாம் போர்மூட்டி
மொட்டிரண்டால் மோகத்தீ மூட்டுவாள்.! பெண்ணவளைக்                                                                   65

கண்டால் குலைநடுங்கும் காலிரண்டும் தள்ளாடும்
உண்ட உணவுகூட உள்ளே கடமுடங்கும்..!                   66

நெஞ்சத்தைத் தூதனுப்ப நிச்சய..மாய் ஆகா(து)
அஞ்சித்தான் போகும் அவளிடம் பேசாது..!                  67

குயில்
குக்கூஉ! குக்கூஉ! குக்கூஉ! குக்குக்குக்
பக்கமெல்லாம் நின்று பலவாறு கூவும்                        68

குயிலொன்றைத் தூதனுப்பக் கொஞ்சம் நினைத்தேன்
வெயிலொழுகும் ஈதோ இளவேனிற் காலம்..நான்      69

பேசும் மொழிமறந்து பேடைதேடிப் போய்விட்டால்
வீசும் எழிற்கனவு வீணாகிப் போகாதா..!                    70

காக்கைதான் காக்க வேண்டும் காதல்
முப்பொழுதும் கற்பனையில் முன்நிற்கும் காதலிக்குத்
தப்பின்றித் தூதுசெல்லும் ஆற்றல் உனக்குண்டு         71

காக்கையே நீயின்றி என்காதல் வெல்லாது
காக்கவேண்டித் தூதுசென்று நானுரைக்கும் சொல்லோது...!                                                                 72
தூது தொடரும்....!

No comments:

Post a Comment