'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

தந்தை


பைந்தமிழ்ச் செம்மல்
அழகர் சண்முகம்

கண்ணில் தெரியாக் கருவூட்ட உள்ளோடி
மண்ணுள் மறைந்தே மடுவாகி - எண்ணில்
துளியும் வெதுப்பின்றித் தூய்மையாய்த் தன்னை
வெளிக்காட்டாத்  தண்மையுடை வேர்                       1

எரியாய்! எரிக்குதவ எண்ணெயுள் மூழ்கும்
திரியாய்த் திருவுடல் தீய்ந்து - கரியாய்!
வளிக்கணையாப் பூத்து வளமையிளம் தேய்த்து
வெளிச்சமே ஈகும் விளக்கு                                          2

வெய்யோன் கதிரால் வெதுப்பினும் வேரறுத்துக்
கொய்வோன் கொடுவாள் குறுக்கினும் - தொய்யா
அழகொடுதோள் தாங்கி அடிஇறுத்தி நன்றின்
நிழல்தந்தே காக்கும் நிறை                                         3

வேரோடி நாற்று விளைந்தாடப் பெய்மழை
நீரோடி வந்து நிறைந்தாடத் - தூரோ
டடிபடர் புல்அறுகும் ஆலும் செழிக்க
மடியேந்தித் தாங்குநெகிழ் மண்!                                4

மீனாய் இமைதுறந்து மேதினிசெ ழிக்கச்செய்
வானாடு காராய் வடிவிழந்து - தேனாய்
மணம்கொடுக்க நாளும் மலர்நெருப்பில் நின்றே
உணர்வடக்கிச் சுற்றும் உலகு                                     5

சேற்றில் முளைத்தாலும் செந்தேன் மணமதனைக்
காற்றில் பரப்பிக் களித்திடும் - ஆற்றலுற்றுப்
பொற்றா மரைக்குளத்துப் பூக்கள் மகிழ்ந்தாட
வற்றா வளமளிக்கும் வான்                                          6

சிற்பமாய்ச் சேய்மனை சீராய்ச் செதுக்கக்கற்
பற்கள் பிடிக்கிடை பட்டுழன்றும் - வற்றாத்
திருவுளம் கொண்டு தினம்வலி தாங்கி
உருவிழந்து தேயும் உளி                                               7

தொன்மை மரபருமை தோய்ந்து மனமிறுக
நன்மையே ஈகுவ நன்னூலின் - பொன்வரியால்
கண்ணைத் திறந்துவைத்துக் காணும் வழியதனை
எண்ணில் பதித்த எழுத்து                                            8

எண்ணில் பதியும் எழுத்தேந்தி ஏடுறைந்தே
உண்மை உரைக்கும் உறுதியெனும் -பண்ணில்
படர்ந்த பெருபொருளாய்ப்   பற்றுமொழி தந்தே
உடல்மறைத்து வாழும் உயிர்!                                     9

கோள்சுமந்த வானில் கொலுவிருக்கும் தெய்வத்தை
தோள்சுமந்து காட்டும் தொடக்கமாய்த்-தாள்நடக்க
ஆற்றுப் படையீட்டி ஆழ்ந்த நெறியூட்டும்
மாற்றிலாப் பண்பின் மறை                                      10

No comments:

Post a Comment