'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

முருகன்


பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

விருத்த மாலை

குன்றெல்லாம் வீற்றிருக்கும் ஈசன் மைந்தா
  குவலயத்தைக் காத்திடவே எழிலாய் நிற்பாய்
என்றென்றும் அருள்செய்யும் கடம்பா உன்னை
  இதயங்கள் மகிழ்ந்திருக்க வேண்டி நிற்போம்
துன்பங்கள் நீங்கியருள் கொடுக்க வேண்டி
  சூலதீபம் கையிலேந்தி வருவோம் நாடி
அன்புதனைக் குறைவின்றிக் காட்டும் வேலா
  அகிலமெல்லாம் நலமுறவே காப்பாய் கந்தா        1

கந்தனுனை வேண்டிநிற்போம் எந்த நாளும்
  கவலையில்லை மயிலுண்டு துணையாய் என்றும்
செந்தமிழாற் பாடிடுவோம் நீறு பூசி
  நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் உன்னை எண்ணிச்
சந்தத்தால் மெருகூட்டி நித்தம் பாடச்
  சத்தியங்கள் நிறைவேற்ற அருளல் வேண்டும்
தந்தைக்குக் குருவாக வந்த கந்தா
  தனித்தமிழாற் பாடுகின்றோம் வருவாய் வேலா  2

வேலவனே என்றழைத்தால் மயிலில் ஏறி
  வேண்டியதை மனமுவந்து கொடுத்து நிற்பாய்
கோலமயில் ஏறியதில் உலகைச் சுற்றிக்
  கோலங்கள் வாழ்வினிலே அழகாய்ப் போட்டாய்
ஞாலமெல்லாம் மகிழ்வாக என்றும் வாழ
  ஞானார்த்தம் திக்கெங்கும் உணர்த்து வாயே
காலமெல்லாம் துணைநிற்க நித்தம் வேண்டக்
  கருணைதனை அளித்தெம்மைக் காத்து நிற்பாய்
                                                                                        3
காத்தருளும் வேலவனே உன்னை நாளும்
  கள்ளமற்ற உள்ளமுடன் பாடு வோமே
நாத்தழுக்க பத்தியோடு வணங்கி என்றும்
  நாமணக்க விருத்தமாலை நாளும் கோப்போம்
கூத்தாடிப் பத்தியோடு பாடும் எம்மின்
  குற்றங்கள் யாவையுமே பொறுத்து மேவு
தோத்திரங்கள் பற்பலவும் இசையில் மீட்டிச்
  சுடர்தீபம் கையிலேந்த அருள வேண்டும்              4

வேண்டுவோரின் குறையெல்லாம் நிவர்த்தி செய்ய
  வேல்முருகன் மயிலினிலே வந்து சேர்வான்
எண்ணியவை நிறைவேறப் பத்தர் கூட்டம்
  இன்னிசையாற் பாக்களினைப் பாடி நிற்பர்
ஆண்டுதோறும் காவடிகள் விழாவிற் தூக்கி
  ஆலயத்தைச் சுற்றிவந்து முடிப்பர் நேர்த்தி
பண்ணிசைகள் பத்தியுடன் நாளும் பாடப்
  பன்னிரண்டு கரங்களுமே காக்கு மன்றோ           5

ஓங்காரத் தத்துவத்தை உணர்த்தி நின்றே
  உள்ளமெல்லாம் பத்திதனைப் பெருகச் செய்வாய்
பாங்காகப் பிரமனுக்குப் புத்தி சொல்லிப்
  பரமசிவன் காதினுள்ளே ஓதி வைத்தாய்
மாங்கனிக்காய்ப் பழனிமலை ஏறிச் செல்ல
  வாஞ்சையுடன் ஔவையாரும் அழைத்து நின்றாள்
பைங்கண்ணால் நோக்கியதும் பாக்கள் பாடிப்
  பைந்தமிழாற் றவறுதனை அறிய வைத்தார்         6

அறியாமை அழித்திடவே வேலாற் குத்தி
  அகம்பாவச் சூரனைச்சம் காரம் செய்தாய்
இறையருளின் மகிமைதனை அறிந்து கொண்டால்
  இவ்வுலகில் மேன்மையாக வாழ லாமே
குறைவின்றிக் கிடைக்கின்ற அருளை ஏற்றுக்
  குதூகலமாய் இறையடியைப் போற்று வோமே
நிறைவேறும் வேண்டுதல்கள் குகனைப் போற்ற
  நிம்மதியாய் வாழ்வதற்குத் துணையாய் நிற்பான்    7

நின்றிருக்கும் இடந்தோறும் கோயில் தோன்ற
  நெஞ்சமது களிப்பினாலே என்றும் துள்ளும்
குன்றுதோறும் நீயிருக்க அடியார் எல்லாம்
  கொழுமையாகத் தீபமேற்றி வணங்கி நிற்பர்
பொன்னழகில் மின்னிவரும் உன்றன் கோலம்
  பொலிவுடனே என்றென்றும் வீற்றி ருப்பாய்
முன்வினையின் பயன்யாவும் மூர்க்கச் சூழ
  முற்றாக அழித்தெம்மைக் காப்பாய் கந்தா           8

கந்தனது திருவடியை நாளும் போற்றக்
  கருணைதனை என்றென்றும் அருளு வாரே
சுந்தரமாய் மயிலிலேறி உலகைச் சுற்றித்
  துன்பங்கள் நீக்கியருள் நாளும் செய்வர்
செந்தமிழில் சொல்லெடுத்துப் பாட வைத்துச்
  சிந்தையினில் பத்திதனைப் பெருகச் செய்வர்
சந்தமுடன் திருப்புகழை இனிதாய்ப் பாடி
  சரவணப வனருளினை வேண்டு வாயே                  9

என்றென்றும் மயிலினிலே பவனி வந்தே
  இக்கலியு கந்தனிலே எம்மைக் காப்பர்
அன்புதன்னை அருளுகின்ற வேலா நாளும்
  அகமலரச் சங்கடங்கள் தீர்த்து வைப்பர்
இன்னிசையால் பாடல்கள் நாளும் யாத்தே
  என்றுமுள செந்தமிழிற் பாடி நிற்போம்
இன்முகமே சுடரோனே வருக எங்கள்
  இதயமது மலர்ந்திடவே பணிகின் றோமே           10

No comments:

Post a Comment