'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2020

ஆசிரியர் பக்கம்


அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!

அனைவரையும் அடுத்த மின்னிதழின் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கொரோனா தீநுண்மி தீதிலும் நல்லதாக மிகப்பெரிய வாழ்வியல் மாற்றத்தையும் உண்டாக்கி விட்டிருக்கிறது.

ஆம்... முன்பெல்லாம் நிற்கவும் நேரமின்றி உழைப்புக்காக ஓடிக்கொண்டிருந்த அப்பாக்கள் தத்தம் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடவும், அக்குழந்தைகளின் உள்ளத்தைப் புரிந்துகொள்ளவு மாகிய "உறவு பிணைப்பைத்" தந்திருக்கிறது.

அண்டை வீட்டிலிருப்போர் யாரென்றே தெரியாமல் வாழ்ந்திருந்த காலம்போய் அண்டை வீட்டா ருடனான நட்பும், புரிதலும் மிகுந்திருக்கிறது.  

வருவாய்க்குத் தக்கபடி வாழாமல் ஆடம்பர வாழ்க்கையில் சிக்கி அதனால் பணச் சிக்கலுக்கு ஆளாகியிருந்தவர்கள் இன்று சிக்கனமாகக் குடும்பத்தை நடத்தும் முறையைக் கற்றுக் கொண்டுள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,

“இன்னும் இரண்டு நாளில் அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து" என்னும் அச்சத்தையூட்டிப், பெருந்தொகையை நம்மிடம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்ட மருத்துவ வணிகர்களின் மாயத் திரையிலிருந்து விடுபட்டு நான்கு திங்களாக மருத்துவமனைப் பக்கமே போகாமல் இயற்கையோடியைந்த நல்வாழ்வு  வாழ முடிகிறது நம்மால்.

இவைபோல் இன்னும் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும் கொரோனா கொடியதுதான் என்றாலும், அதனால் ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றத்தை நிலையான நல்வாழ்வுக்குப் பயன் படுத்திப் பழகுவோம். மாந்தநேய வாழ்வின் இன்றியமையாமையை இனியாவது உணர்வோம்.!
                                                                         என்றும் தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment