'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

ஐயனைக் கண்டால்...!!


பைந்தமிழ்ச் செம்மல் 
சியாமளா ராஜசேகர்



மலைமீதில் மணிகண்டன் வீற்றிருக்கும் கோலம் 
   மனங்குளிர தரிசித்தால் விலகுமகங் காரம் !
சிலைவடிவில் சிங்கார மாயமர்ந்த காட்சி 
   சீர்மிகுந்த சபரியிலே என்றுமவன் ஆட்சி !
அலைகடலாய்த் திரண்டுவரும் அடியவர்கள் கூட்டம் 
   அன்பொழுக வேண்டிடிலோ மறைந்துவிடும் வாட்டம்!
தலைமேலே இருமுடியைச் சுமந்தபடிச் செல்வார் 
   சரணங்கள் கைதட்டி வழிநெடுகச் சொல்வார் !         1

பதினெட்டுப் படியேறப் பரவசமும் கூடும் 
   பம்பையிலே நீராடப் பாவங்கள் தீரும்!
அதிரூபன் முகங்கண்டால் அகமுழுதும் பூக்கும் 
   அலங்காரப் பிரியனவன் அருட்பார்வை யீர்க்கும்!
மதிசூடி மைந்தனவன் கமலமலர்ப் பாதம் 
   மயக்கிவிடும்; இருவிழியோ பேசுமொழி வேதம் !
துதிப்போரை யரவணைத்துக் கருணைமழை பெய்வான்
   துணைநின்று சந்ததமும் பக்தருளம் கொய்வான்!    2

மெய்யன்பா யுருகிவிழி நீர்மல்கி வேண்ட
   மெய்ப்பொருளைக் கண்டிடலாம் மாமலையி
லிங்கே!
நெய்யாலே அபிடேகம் சுவாமிக்குச் செய்ய 
   நெஞ்சுக்குள் நிம்மதியும் ஊற்றெடுக்கு மிங்கே !
தெய்வத்தின் சன்னிதியில் திருவிளக்கை ஏற்ற 
   தீராத வினையாவும் தீர்ந்திடுமா மிங்கே !
ஐயப்ப னருளாலே மகரஜோதி கண்டால் 
   ஐம்புலனு மடங்கிப்பின் அமைதியுறு மிங்கே !!           3

No comments:

Post a Comment