'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2020

ஆசிரியர் பக்கம்

அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!  அனைவரையும் அடுத்த மின்னிதழின் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அயல்மொழிகளின் கலப்பை ஆள்வது எப்படி என்பதற்குத் தமிழின் ஒலிப்பியல்பு மாறாமல் மொழிப்படுத்திக் கொள்ளலாம் என்றனர் இலக்கணம் வகுத்தார். அயல்மொழிகளின் படைப்புகளை மொழிபெயர்க்கலாம் என்றார் பாரதியார். அவர்கள் நம் மொழியைப் பற்றிக் கருதிய நல்லுள்ளங்கள் ஆவர். 

ஆனால் இக்காலத்தில் இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மொழியையே பெயர்த்துவிடும் செயலைச் செய்யத் துணிகிறது இந்திய ஒன்றிய அரசு. அவ்விந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாகப் பகுக்கப்பட்டும் மாநிலத்தின் உரிமைகள் காக்கப்படவில்லை. திணிப்புகள் மூலமாகப் பல மொழிகளை அழித்த பெருமை இந்திக்கு உண்டு. 

இந்திய ஒன்றியம் உருவான நாளிலிருந்து அரசு முறைமையைக் கண்டால் மொழியழிப்பு நடந்துகொண்டே வருகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. சங்கதத்தையும் இந்தியையும் இந்திய ஒன்றியம் முழுவதும் ஏற்க வேண்டும் என்பது விரும்பத்தகாத சுயநலமுடைய அறிவிலிக் கொள்கையாகும். அது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நோக்கத்திற்கே ஊறு விளைவிப்பதாகும்.

மொழிக்கே விடுதலை இல்லாதபோது மொழியின் வளத்தை உளத்துக் கொண்டு உளவளம் பெறுவது இயல்வதுண்டோ? அது மட்டுமன்றித் தமிழரே தமிழைப் புறக்கணிப்பது தன் தாய்மீது பற்றிலாது வீட்டைவிட்டுத் துரத்தும் நிலையைப் போன்றது. ஐரோப்பியரோ சீனரோ சப்பானியரோ தம் தாய்மொழிப்பற்றை விடவில்லை. தமிழர்க்குத் தாய்மொழிப் பற்றே இல்லாமல் போவது வருத்தத்திற்குரிய செய்தி. 

விடுதலைநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.


                                                                       என்றும் தமிழன்புடன்,

                                                                                                  பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment