'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

கண்ணீரால் கரைகிறதே என்றன் வாழ்வு

 

பாவலர் மா.வரதராசன் அவர்களின் தெய்வத் தாயார் மா.தனபாக்கியம் அவர்கள் 18.07.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா இறைநிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறோம்.

-         பைந்தமிழ்ச்சோலை முகநூற் குழு

 

கண்ணீரே இனியெனக்காய் விட்டு வைத்தாய்
    கனவினிலும் இம்முடிவை நினைத்தே னில்லை
உண்ணிறைந்த உருவத்தால் உருகு கின்றேன்
    உண்மையிஃ தென்றிதைநான் நம்ப வில்லை
எண்ணிறந்த பிறவிகளை எடுத்தா லும்நான்
    இப்படியோர் உறவுபெற முடியா தம்மா
கண்ணீரால் கரைகிறதே என்றன் வாழ்வு
    காலத்தால் இதைமறக்கப் போமோ ஐயோ!                           1


எரிகிறதே எரிகிறதே உடம்பெல் லாமும்
    எரிகிறதே எரிகிறதே எனச்சொன் னாய்நீ
எரிக்கின்ற வழக்கந்தான் இல்லாப் போதும்
    எரிக்கின்ற சூழலதும் வாய்த்த தம்மா
எரிதழலை உன்னுடலை வைத்த போதே
    என்னுளத்தில் எரிநுழைந்த தறிவா யாநீ?
எரிகிறதே அம்மம்மா வயிறும் நெஞ்சும்
    என்தாயே சாம்பலாகப் பார்த்த போது                                      2


சிறுமூளை எலும்பொன்றும் இடுப்பி னொன்றும்
    சிதைந்தநெஞ்சி னெலும்பொன்றும் உயிரெ லும்பும்
குறுக்கெலும்பும் முதுகெலும்பும் விலாவி லொன்றும்
    கூட்டியெடுத் தேனம்மா கலயத் திற்குள்
பொறுக்காத ஆற்றாமை அடங்க வில்லை
    போய்க்கரைத்தேன் சாம்பலுடன் முடிந்தே போனாய்
சிறுபோதும் மகிழ்வாக வாழ வில்லை
    சிவனடியில் மகிழ்வாழ்வைப் பெறுவா யம்மா!                     3


மறுபிறவி என்பதைநான் நம்ப வில்லை
    மறுபிறவி எனவொன்றிங் கிருக்கு மாயின்
மறுபடியும் நானுன்றன் வயிற்றில் தங்கும்
    வரமளிக்க வேண்டுகிறேன் தாயே… இன்றேல்
பொறுப்பாக உனையென்றன் வயிற்றில் தாங்கும்
    புகழ்நிலையை நீயெனக்குத் தருதல் வேண்டும்
வெறுப்பின்றி உனைச்சுமந்து முலைப்பால் ஏந்தும்
    மேனிலையைப் பெறவேண்டும் அருள்வாய் அம்மா           4

                                                 கண்ணீருடன் பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment