பைந்தமிழ்ச் சுடர்
மெய்யன் நடராஜ்
விதியேயென இருந்தாலுனை விளையாடிடும் துன்பம்
விரைவாயதைத் தடுத்தாலுனை விலகாதினி இன்பம்
நதிபோல்வெகு சிறப்பாயொரு நடைபோட்டிடு நித்தம்
நலிவேயிலை உயர்வேகிட நலமாகிடும் சித்தம்
மதிதானுனக் கிருக்கேயதை மதிப்பாக்கிடு நன்று
மதியாதவ ரெவராகினும் மதிப்பாரதைக் கண்டு
புதிதாயுனைப் பரிசீலனை புரிவாயெனில் இந்தப்
புவிமீதொரு புதுப்பூமழை பொழிவாய்சுக மென்றே!
உழைப்பேயுனை உயர்வாக்கிடும் உணர்வாயிதை நீயே
உழைக்காவுனை விரும்பாதெரு உறவாகிய நாயும்
அழைப்பாரென இருந்தேதினம் அடுப்போரமு றங்கி
அலுத்தாலொரு தொழிலானது அணுகாதுனை நெருங்கி
பிழைப்போரது பிழைப்பானது பிழையானதும் அல்ல
பிழைக்காதுளப் பிழைப்பானது பிழையாகுவ துண்டு
நுழைவாயிலை அடைப்பார்மனம் நுகைவாகிடச் செய்து
நுழைந்தேசிறு தொழில்பூவினை நுகர்வாயது செண்டு.
நுகை – இளகச்செய்தல்
No comments:
Post a Comment