'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

அம்மை குறைபோக்கு செம்மை இறையோனே!

 

பைந்தமிழ்ச் செம்மல்

செல்லையா வாமதேவன்

                                                              வண்ணப்பா

தனதாத்த தன்ன தனதாத்த தன்ன

        தனதாத்தா தன்ன      தனதானா

 

அறிவூட்டி என்னை உயிரூட்டி இன்னல் 

        அலைபோக்கி இம்மை             இனிதாக

    அமுதூட்டி இன்னம் அழகூட்டி மின்னும்

        அவையேற்றி அன்னை            மகிழ்வாளே

நெறிகாட்டி நன்மை வழிகாட்டி வெம்மை

        நிலைபோக்கி மண்ணில்        நிறைவாக

    நிலையாக்கு மெண்ணம் அதுவாட்ட நன்னி

        நிதிகூட்ட முன்னு                      செயலாலே

வறிதோட்ட வன்மை தலையேற்றி வண்ண 

        வகைகூட்ட உன்னி                   யெழுவாளே

    வரலாற்றில் என்னை இனிதேற்ற எண்ணி

        வயலாற்றில் விம்மி                  அழுபாடோ

குறியேட்டில் என்ன உளவேட்டில் மண்ணு

        கொலுவேற்று பண்ணில்         வரைவேனே

    குறைபோக்கி விண்ணன் எனவாக்கு மம்மை

        குறைபோக்கு செம்மை           இறையோனே!

No comments:

Post a Comment