பைந்தமிழ்ச் செம்மல்
முனைவர் அர.விவேகானந்தன்
பைந்தமிழ்ச்சோலை, தி.மலை
அருள்வேந்தன் பேர்கொண்டீர் அன்பைத் தந்தீர்
அருந்தமிழின் சீர்கண்டீர் அருமை கொண்டீர்
இருள்தன்னை எங்களுக்கு விட்டுச் சென்றீர்
இனியென்ன செய்வோமோ தமிழின் வாழ்வில்
பொருளீந்தே முத்தமிழைப் பொலியச் செய்தீர்
பொன்னடியை இனியென்று காண்போம் மண்ணில்
மருள்தன்னை விளக்குகின்ற மாலை யானீர்
மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்! 1
செந்தமிழை ஊருக்குள் ஏற்றி வைத்தீர்
சொல்லிசையும் தொல்லிசையும் மீட்டி வைத்தீர்
பந்தமென்றே பைந்தமிழைப் பற்றி நின்றீர்
பண்பான உறவுகளைப் பக்கம் கொண்டீர்
நொந்தபோது நொடிப்பொழுதில் நோதல் மாய்ப்பீர்
நொந்துமனம் வேகின்றோம் ஏது செய்வோம்
அந்தமிலா வாழ்வன்றோ உம்மின் வாழ்வும்
அடிமறந்து தவிக்கின்றோம் அன்பில் நாங்கள்! 2
அழைக்கும்போ தெல்லாமன் பைப்பொ ழிந்தீர்!
அண்ணாம லையாகக் கண்டோ மும்மை
கழைக்கூத்தின் நூல்போலும் ஆடு கின்றோம்
கண்ணொன்றை இழந்ததைப்போல் வாடு கின்றோம்
அழைத்தாலி னிவருவீரோ இல்லை இல்லை
அருந்தமிழி லாழ்வீரோ விதியின் தொல்லை
இழையோடும் தமிழோடு வாழ்ந்த வும்மை
எம்வாழ்வில் நிறைப்போம்போய் வாரீர் வேந்தே! 3
***
பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
அருள்வேந்தன் என்றாய்ந்(து) அழகான பேர்கொண்டு
திருவண்ணா மலையென்னும் தெய்வமனம் கமழூரில்
அருந்தமிழ்க்குச் சங்கத்தை ஆக்கிவைத்துத் தமிழாய்ந்தீர்
பெருந்தெய்வ மாயின்று பேர்நிறுத்திச் சென்றீரே! 1
கொஞ்சுகின்ற பேச்சுக்குக் குறைவின்றி நிறைவெய்திப்
பஞ்சுபோன்ற மெல்லுள்ளம் படைத்தவரே ஆசானே
நெஞ்செலாம் வேகுமாறு நினைவெலாம் எமைவருத்தத்
துஞ்சியதேன் இன்றுநீர் துயரத்தைத் தந்தீரே! 2
ஆற்றொணாத் துயரத்தால் அகம்நொந்து கிடக்கின்றோம்
மாற்றொணாக் கவலையினால் வாடுகிறோம் வருந்துகிறோம்
ஊற்றெனவே தோன்றியவரே ஊர்வளர்த்த வள்ளல்நீர்
வீற்றிருப்பீர் உள்ளத்தில் விலகாத உணர்வோடே! 3
***
பைந்தமிழ்க்கதிர்
முனைவர் த.உமாராணி
தங்களுயிர் பிரிந்த தகவல றிந்தவுடன்
தவித்தேன் மனம் தளர்ந்தேன் அருள்வேந்தே!
தமிழுக்குத் தொண்டாற்றத் தமிழ்ச்சங்கம் நிறுவித்
தமிழுக்காக வாழ்ந்தவர்; தண்ணென நிறைந்தவர்!
மலர்போன்று பூத்து; மதியொளியாய்த் திகழ்ந்து;
பலர்போற்ற அன்பைப் பகர்ந்து களித்தவர்!
மாணவர் பலரை மதியால் வென்று
மாண்புற நற்புகழை மலையெனப் பெற்றவர்!
கடைமூச்சு வரையில் கலங்காமல் ஓவியமாய்
விடைபெற்றவர் காவியத்தில் இடம்பெறுவார்!
அருள்வேந்தன் ஐயாவின் ஆன்மா அமைதி யடைய இறையை இறைஞ்சுகிறேன்.
No comments:
Post a Comment