'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

ஆசிரியர் பக்கம்

அன்புடை நண்பரீர், வணக்கம்!

பைந்தமிழ்ச்சோலை முகநூற்குழு ஐந்தாண்டுகளை முடித்துவிட்டு ஆறாம் ஆண்டில் தன் செயற்பாடுகளைச் செய்யத் தலைப்பட்டுள்ளது.

இந்த இனிய நிகழ்வையொட்டி இணையம் வழியில் நடைபெற்ற சோலைவிழா மிகமிகச் சிறப்பாக அமைந்தது என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்காது என்றெண்ணுகிறேன். குறித்த நேரத்தில் தொடங்கவில்லையெனினும் குறித்த நேரத்திற்கு முன்னரே நிகழ்ச்சியை முடித்தோம். அதிலும் திட்டமிட்ட நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடைபெற்றன என்பதும், பங்கேற்ற அனைவரும் சோலையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

நுணுகி செயலி வழியே இவ்விழாவை நடத்தப் பேருதவி செய்த பைந்தமிழ்ச்சுடர் நடராசன் பால சுப்பிரமணியன் அவர்களுக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்தும், தொழில்நுட்பத் தடைகளை விலக்கியும் உதவிய பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி அவர்களுக்கும் என் உள்ளார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறேன். அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்ற அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஒருங்கிணைந்த இந்த விழா (எல்லா விழாக்களுமே)  சிறப்பாக நடைபெற்றது முதலாண்டு சோலை மாணாக்கரின் ஆர்வத்தாலும், குருபக்தியாலும், அளவற்ற தமிழ்க் காதலாலுமே என்றால் அதில் மிகையில்லை. என்னுள் எப்போதும் கலந்திருக்கும் முதலாண்டு மாணாக்கரைப் போல் அடுத்தடுத்த ஆண்டுகளில் இணைந்தவர்கள் இல்லை யென்பதும் வருத்தமான செய்தியே… (இரண்டாமாண்டு மாணாக்கரும் ஓரளவு என்னைக் கவர்ந்தவர்கள்.)

இனிவரும் காலங்களில் அனைவரும் இணைந்து ஒருமித்த செயற்பாட்டுடன் சோலையில் பயணிப்போம். அதற்குத் தக உங்களைத் தகவமைத்துக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் விழாவில் பயணித்தோர்க்கும், பார்வையிட்டோர்க்கும் மகிழ்வுகலந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். நன்றி!  நன்றி!!  நன்றி!!

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment