'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

மருத்துவ வெண்பா – ஈசெல்

 வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவற்றின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப் பற்றியும், மருந்து களையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நான் சிறுவனாக எங்கள் ஊர் சோழவந்தானில் வளர்ந்த போது, பக்கத்தில் அமைந்த குடிசைகளில் வாழ்ந்த வசதி குறைவான பெண்கள் அல்லது குழந்தைகள் மழைக்காலத்தில் ஈர மணலில் ஏற்பட்ட துளைகளில் இருந்து வெளிவரும் ஈசல்களைத், துளைகளுக்கருகில் வாய்வைத்துக் குரலெடுத்துக் கூவி, ஈசல்களைப் பிடித்துத் தண்ணீரில் போடுவார்கள்.

இறகுகள் உதிர்ந்த ஈசல்களை அப்படியே வாயில் போட்டும் சாப்பிடுவார்கள் அல்லது சட்டியில் போட்டு வறுத்தும் சாப்பிடுவார்கள். சைவ உணவு சாப்பிடும் எங்களுக்கு இது வியப்பாகவும், அருவருப்பாகவும் இருக்கும்.

ஈசெல் (Esal or winged white ants)

நேரிசை வெண்பா

நாறுங் கிராணியொடு நாடிவரும் உட்காய்ச்சல்

கூறுமது மேகங் குடிபுகின்கேள் – மீறுமதன்

மாசெல்லாந் தானொழிக்கும் மாதரசே! போகமுறும்

ஈசெலதை உண்டவர்க்கிங் கே.


குணம்: ஈசெலை உண்பதினால் கிராணி (irritable bowel syndrome), தேக வெப்பம், மதுமேகம், வெகுமூத்திரம், பவுத்திரம் முதலிய ரோகங்கள் போகும். போக சக்தி அதிகப்படும். தாது பலம் உண்டாகும்.

என் பாட்டு:

ஈசல் பிடித்துண்ணும் ஈனப் பிறவியெனப்

பூசலாய்ச் சொல்லாதே; போகசக்தி – ஆசை

அதிகம்; வயிறுளைச்சல் ஆகாது தீர்க்கும்;

அதுபொரித்(து) உண்பவர்க்கே ஆம்.

                                       - கவிஞர் வ.க.கன்னியப்பன்

No comments:

Post a Comment