'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

இடர்தீர் பதிகம்

 கவிஞர் செந்தில் குமார்

 

ஞால முதல்வ நினதொரு பாகத்து நங்கையினை

ஆல ரவெயிற் றருந்துயர் போலவிங்(கு) அல்லலுறும்

பால கனொருவன் பாயுந் துயர்தீரப் பாடுகின்றேன்

மூல மெனும்நீயே முன்னின் றெனக்குள் முழங்குவையே                                 1

 

செல்லும் வழியெலாந் தீதுற நின்றேன் செயலறியேன்

புல்லெ னவேபுறந் தள்ளி நகைக்கும் புறத்தினரை

வெல்ல வரத்தொடு வாழ்விக்க உன்னை வணங்குகின்றேன்

வல்லிநீ வந்தென்றன் வல்வினை நீக்கி வரமருளே                                          2

 

கூடற்ற புள்ளாய்க் குடியி டமின்றிக் குமைந்திருந்தேன்

மாடி மனையொடு் வாழ்வ ருளிய மலைமகளே

நாடி வருமென்றன் நஞ்சுடை உள்ளம் நடுங்குதம்மா

பீடற்றுப் போகா தருள்வாய் அடிதொழும் பித்தனுக்கே                                      3

 

உன்றன் விரைகழல் வீழ்ந்து வணங்கி உயர்வையெண்ணி

மன்னு புகழுடை மாமகள் நின்னை மனந்தொழுத

பின்னும் மனத்துயர் ஏனோ வியனில் பெரியவளே

உன்னு முளத்தின் உணர்வுகள் ஓர்வாய் உமையவளே                                     4

 

நாற்றச் செழுந்தாழை சென்னியில் சூடிய செஞ்சடையாள்

போற்றித் துதித்தேற் றமடையத் தானே புலம்புகிறேன்

ஆற்ற வியலா அருந்துயர் வந்தெனை ஆழ்த்துதம்மா

மாற்றிப் புறந்தள்ளி மீட்கத் தடையோ மணிமதியே                                        5


ஆண்டகை உள்நோவப் பெண்டோ புறத்தில் அருமைமகள்

ஈண்டு டலம்நோவ இன்னுங் கலங்குதே யில்லறந்தான்

நீண்ட வெருவலை நீக்கி நிறைநெஞ்சு நின்றவளே

யாண்டும் இரங்காத காரணம் சொல்லி யருளுமையே                                    6

 

வன்னி மரத்தடி யான்வது வைகொண்ட வண்டமிழா

ளுன்னி யுருகி உளமார வேண்டி உருகுவனே

என்னை! பிறகேனு மெண்ணா திருப்போர்க்கே ஏற்றமிலை

கன்னியை யெண்ணிக் கலக்க முறுவார்க் கருளருளே                                         7

 

கீழ்த்திசை நோக்கின் குடதிசை நோக்கின் கிளர்ந்தெரியும்

பாழ்படு மாமே வடதிசை தெற்குமுன் பார்வைபடச்

சீழ்படு பூமி சிதையா திருக்கவே சீர்மிகுந்த

காழ்தரு பார்வை நெடுங்கூரை மேவக் கடந்தனையே                                    8

 

அங்கம் நிறைந்தாளு மங்காளி யுன்ற னடிதொழுதேன்

பங்க மெதும்நேராக் காக்கக் கடிது பணிகுவனே

எங்கும் நிறைந்தாளே ஏழ்மை அகற்ற எழுந்திடுக

சங்கம் முழக்கிப் பறைகொட்டி நின்புகழ் சாற்றுவனே                                       9

 

பெருவெளி யேவுடல் கோள்சுற்றும் பாதைப் பெருவயிறாம்

பரப்பு லவுமி ருவொளி யுமிரண்டு பாவைகளாம்

பொருதும் பொருப்பிரண் டைப்போ லுமிந்த பெருந்தனத்தாள்

மருகு நிலையழித் தால்நாம் மகிழ்வுடன் வாழ்த்துவமே                                     10

 

நூற்பயன்

மனக்கவல் போமுழக்கு மால்போ மொழுகி

தினந்துதிக்கத் தீத்துயர்போம் திண்மை -மனத்தொடு

மேல்மலைய னூராளை இப்பத்தால் பாடநேரும்

கோள்சூழ் இடருக் கிடர்

No comments:

Post a Comment