பகுதி - 1
பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் அர.விவேகானந்தன்
உயிர்களைக் காக்குங் கோவே
   
உளத்தினில் பூக்கும் பூவே
உயர்வினை வேண்டும் நெஞ்சுள்
   
உடனிருள் போக்கும் காவே
மயக்கதை மடிக்குங் கோனே
   
மனத்தினைத் தேற்றுந் தேனே
பயிரதன் பசுமை போலும்
   
பாவினைத் தருவாய் மாலே!                               1
உலகெனும் நடப்பில் யாவும்
   
உனதரு ளோங்கி நிற்கும்
கலகமே கலைக்கும் மாலே
   
கருத்தினை யளிப்பாய் மேலே
பலப்பல வகையா மின்னல்
   
பனியினைப் போலு மோடக்
கலையெலாங் கனிவா யின்றே
   
காலடி தருவாய் மாலே!                                          2
இருளுறை யிடத்தில் நீயும்
   
இடியென இடித்து நிற்பாய்
மருளுரை யோங்க நேரின்
   
மடியினில் கிடத்திச் சாய்ப்பாய்
அருளுரை வழங்கும் மன்னா
   
அகத்தினி லொளிருங் கண்ணா
தெருளுரை மிளிர வேண்டும்
   
தென்மொழி தருவாய் மாலே                      3
சூரிய வெளிச்சம் போலும்
   
சுருக்கென நெஞ்சுள் தைத்து
வேரெனக் கிளைத்த பாட்டை
   
வெற்றியி னடியில் வைத்து
நேரிய நோக்கி லாக்கி
   
நெறியெலா மொளிர நோக்கிப்
பாரினில் பரப்ப வந்தேன்
   
பதமருள் தருவாய் மாலே!                                    4
தாயெனும் வடிவங் கொண்டு
   
தரணியில் வடிவெ டுத்தாய்
பேயவள் முலையு றிந்து
   
பெருமையைக் காட்டிச் சென்றாய்
காயெனக் கலக்கு மின்னல்
   
கடிதினி லோட வேண்டும்
சேயென வணைத்துக் கொண்டு
   
செறிவினைத் தருவாய் மாலே!                         5
உறவென வுன்னை யன்றி
   
உலகினில் யாரு மில்லை
திறவென உன்றன் நெஞ்சம்
   
திருப்பெலா மங்கே தஞ்சம்
குறையெனைக் கூடா வண்ணம்
   
குறிப்பென வென்னைக் காப்பாய்
நிறையென வின்பஞ் சேர்ப்பாய்
    
நிலைப்பினைத் தருவாய் மாலே!                   6
கிணற்றினில் விழுந்த பிள்ளை
   
கெஞ்சியே அழுதல் போலும்
உணர்வினில் கருத்தை வைத்தே
   
உறவுனைத் தொழுதேன் நானே
கணக்கெனப் பாட லாக்க
   
கருணையுங் காட்டல் வேண்டும்
பிணக்கென விருக்கு மென்னுள்
   
பெருமழை தருவாய்  மாலே!                              7
திருமக ளுறையும் மார்பா
   
திருப்பமே யருள வேண்டும்
திருவெனப் பிடித்தே னுன்னைத்
   
திளைப்பினில் ஆழ்த்தல் வேண்டும்
இருப்பென விருந்தே என்னுள்
   
இமயமே காட்டல் வேண்டும்
கருவென விருப்பாய் பாட்டுள்
   
கரும்பினைத் தருவாய் மாலே!                         8
மானிட உருவெ டுத்து
   
மாந்தரின் மனங்க வர்ந்தாய்
நாணிடுஞ் செயலுங் கூடின்
   
நசுக்கியே நலத்தை யீந்தாய்
வானிட வளத்தைப் போலும்
    
வளமையை வாரித் தந்தாய்
தேனிட வினிப்பே நீயும்
   
தேறுதல் தருவாய் மாலே!                                     9
திறந்தரும் வடிவைக் கண்டு
   
திரும்பியே போற்றி நிற்பேன்
உறவினில் உயர்ந்தோ னுன்னை
   
உலகினி லுயிராய்க் கொள்வேன்
மறந்தரும் மகிழ்வே வேண்டும்
   
மனத்தினில் மலர்ச்சி வேண்டும்
சிறப்பெலாம் பொலிய வேண்டும்
   
செழிப்பினைத் தருவாய் மாலே!                      10
ஆசான் வணக்கம்!
(மரபு மாமணி பாவலர்  மா.வரதராசர்)
பாமணம் கவிஞர் கூட்டம்
   
பழக்கிடு மின்பத் தோட்டம்
பூமணம் அன்பின் நாட்டம்
   
புதியதோர் புவியின் மாற்றம்
வாமன வுருவின் தேக்கம்
   
வழங்கலில் நீண்ட தோற்றம்
போமெனப் பொய்க ளோட்டும்
   
பொருளவர் வரதர் தாமே!                                     11
யாப்பெனுஞ் சோலை தந்து
   
யாதுமா யாகி விட்டார்
தோப்பெனக் கவிக ளாக்கித்
    துறையெலாங் காட்டி வைத்தார்
ஆப்பெனும் பேர்கள் வந்தால்
   
அருந்தமிழ் துணையாய் கொள்வார்
பாப்புனை பாங்கில் பண்பில்
   
பகலவன் வரதர் தாமே!                                          12
சுயமதை யெண்ணி யெண்ணிச்
   
சுற்றிடும் பொல்லோர் ஞாலில்
கயமையைச் சுருக்கி லேற்றிக்
   
கதைத்திடும் நல்லோர் ஓங்க
மயக்கமே யில்லா நேர்வாய்
   
மாக்கவி பரப்பு
கின்றார்
தயக்கமே யின்றிச் செல்வேன்
   
தண்டமிழ் மறவர் தாமே                              13
மண்ணெனப் பயனி லாது
   
மரமெனக் கிடந்த வென்னைப்
பொன்னெனப் புதுக்கி வைத்தார்
   
பொருளென ஆக்கி வைத்தார்
கண்ணெனக் கால மெல்லாம்
   
காலடி கிடந்து வாழ்வேன்
திண்ணமாய்க் கூறு கின்றேன்
   
தெளிவெலாம் வரதர் தாமே                        14
மனத்தினில் சுரக்கு மூற்றை
   
மதுக்கவி யாக்க வந்தேன்
மனக்குறை நேரா வண்ணம்
   
மணியென வொளிர வேண்டும்
குணக்கடல் வரதே குன்றே
   
குறையெலாம் நீங்க வேண்டும்
உனக்கென உறைவே னூற்றே
   
உயிருனுள் கலப்பாய் தாமே                       15
அவை வணக்கம்!
அன்னையாம் மொழியில் நாளும்
   
அழகெனப் பாக்கள் ஓங்க
முன்னிடைப் புலவோ ரெல்லாம்
   
முத்தெனும் பனுவல் செய்தார்
எண்ணிலாக் காவி யத்தை
   
ஏட்டிலே யேற்றி வைத்தார்
இன்றமிழ் மொழியில் யானும்
   
இனிமையைத் தேடி வந்தேன்                     16
முத்தெனப் பாக்கள் செய்து
   
முன்னவர் பலரி ருக்க
வித்தென யானு மெண்ணி
   
விதைக்கவே வந்து விட்டேன்
பித்தென வெண்ணங் கொண்டு
   
பிதற்றிடும் நோக்க மில்லை
சத்தெனக் கொடுப்பீர் ஊட்டம்
   
சந்தனம் தெளிப்பீர் நன்றே                         17
புலியதன் பின்னே சென்று
   
புதிரென பிடித்தேன் வாலை
எலியதன் ஓட்டம் போலும்
   
எளியவன் ஓடு கின்றேன்
கலியதன் கவலை போக்கிக்
   
கவியினில் புதுமை யேற்றி
வலிமையாம் காவி யத்தின்
    
வளமையை வேண்டு கின்றேன்                18
சொல்லினில் குற்றங் காணின்
   
சொல்லுவீ ரினிமை வேண்டி
நல்லெனும் பொருளில் குற்றம்
   
நடையினில் தேக்கங் கண்டால்
வில்லெனப் பாய்தல் வேண்டா
   
விருப்பென யெடுத்துச் சொல்வீர்
மெல்லவே காவி யத்தின்
    
மேன்மையைப் போற்றி வைப்பீர்             19
அருந்தமி ழடியோர் போற்றி
   
அருமையா முலகோர் போற்றி
விருந்தெனும் விதையோர் போற்றி
   
வித்தகம் நிறைப்போர் போற்றி
இருமெனும் தனியோர் போற்றி
   
இதழினில் இனிப்போர் போற்றி
கருத்தினில் கவிழ்ப்போர் போற்றி
   
கவிதையில் களிப்போர் போற்றி               20
      - வெளிச்சம் தொடரும்   
No comments:
Post a Comment