'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

இயற்கையெழில் - கவிஞர் மதுரா



                எண்சீர் விருத்தங்கள்

செங்கதிரோன் களைத்துமெல்லச் செவ்வானை நீங்கும்
   சிறுமாலைப் பொழுதங்கே சிறகசைத்து மிளிரும்
தங்கநிலா மேகத்தில் தலைநீட்டிப் பார்க்கும்
   தள்ளிநின்று விண்மீன்கள் தன்னெழிலா லீர்க்கும்
பங்கயங்கள் விடைகொடுத்துப் பகலவனை அனுப்பும்.
   பறவையினம் கூடடையப் படபடத்துப் பறக்கும்.
அங்கமதைத் தென்றல்வந் தாசையொடு தீண்டும்
  அந்திமாலைப் பொழுதிலிந்த வின்பமென்றும் வேண்டும்.

அல்லிமல ரிதழ்விரித்தே அகங்குளிரச் செய்யும்.
   அங்குமிங்கும் கயலினங்கள் அழகாக நீந்தும்
முல்லைப்பூ மலர்ந்துமணம் முற்றத்தில் வீசும்
   முகம்பார்த்து நிலவொளியும் முத்தமிட்டுப் பேசும்.
புல்நுனியும் பனித்துளியைப் பூரித்துத் தாங்கும்
   புத்தம்புது நாடகங்கள் புவியெங்கும் ஓங்கும்
சொல்லாத எழிலெல்லாம் சொர்க்கமென நிறையும்
   சுற்றுகின்ற பூமிதனைச் சொந்தமாக்க விழையும்..

No comments:

Post a Comment