'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிர் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். முதலாமாண்டில் பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. பல சிறப்பான படைப்புகளை உருவாக்கித் தமிழ்க்குதிர் மின்னிதழுக்கு ஆதரவு அளிக்கும் படைப்பாளர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.

நீதியொளிர் செங்கோலாம் திருக்குறள் உலகப் பொதுமறையாகும். அதனை உன்னுடையது என்றோ, என்னுடையது என்றோ பிரித்துப் பார்ப்பது பேதைமை. வள்ளுவன் சொன்ன, எல்லார்க்கும் பொதுவான கருத்துகளை விடுத்து, வள்ளுவனை மட்டும் உடையவனாய் உரிமை கொண்டாடுதலும் பேதைமை. தேரை இழுத்துத் தெருவில் விட்டாற்போல் அரசியல் காரணங் களுக்காக, ஒருசார்புடைமை பேசும் எவரும் திருக்குறளை எக்காலும் புரிந்துகொள்ளப் போவதில்லை. வீண் விளம்பரங்களுக்காகவும் விவாதங்களுக்காகவும் வள்ளுவரை இழிவு படுத்துவதும் ஏற்புடையதன்று. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் வழியில் வாழக் கற்றுக் கொள்வது எல்லாருக்கும் நலம் பயக்கும்.

பொதுமைப்படாத சமூகத்தால் விளைவன வெல்லாம் அறமற்றவையே என்பதை மனத்துட் கொண்டு வள்ளுவர் காட்டிய வழியில் சிந்தையைச் செலுத்திச் சீரும் சிறப்புமாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

வாழ்க தமிழ்! பரவுக மரபு!
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment