'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

என்னவளின் கண் - பைந்தமிழ்ச் செம்மல் மன்னை வெங்கடேசன்


ஒரு பா ஒருபஃது! (வெண்பாமாலை)

வில்லினின் றம்பு விடுபடாக் காலையும்
கொல்லுதே என்ன கொடுமை - மெல்லியளால்
விற்புருவக் கீழே விழியம்பு கொண்டென்னை
வெற்றிகொண்ட விந்தை இது                       1

இதுவென்ன விந்தை இருண்ட திராட்சை
மதுவாலே வாரா மயக்கம் - பதுமை
அவளின் திராட்சை அருவிழியி ரண்டால்
அவனியோர்க் கேகுமே யாங்கு!                   2

ஆங்கொருக்கால் மீனும் அருங்குளத் தினின்றேக
நீங்கும் தனதுயிரை நீணிலத்தில் - ஈங்கு
முகக்குளத்து மீனோ முகத்தினதே தங்கிச்
செகுத்திடுதே திண்மை உளம்.                     3

அந்தா மரைமூழ்கி ஆழ்வண்டு தேன்குடித்(து)
அந்தோ மயங்கிய தாங்கென்பர் - செந்தாமரை
அன்ன முகத்தில் அருவிழி வண்டுகள்தாம்
என்னை மயக்குவ தென்?                              4

என்ன வொருவிந்தை இவ்வுலகில் தாமரை
தன்னிலை பச்சை தனிலேக - பொன்னார்
கமல முகத்தில் கருப்புவெள்ளை யாய்க்கண்(டு)
இமைக்க மறந்தான் இவன்                           5

இவனுக்கோ ரையம் இருநிலத்தீர் தீர்ப்பீர்
அவனியில் ஆதவன் அல்லோன் - உவந்தே
ஒருசேரக் கண்டதிலை ஒண்டொடியா ளுக்கோ
இருசுடரும் சேர்ந்திருப்ப தென்?                   6

இருப்பதனை நன்றாய் இளகவைக்கத் தீயில்
உருக்கவும் வேண்டா உலகீர் - கருப்பு
விழியாள் விரிபார்வை நோக்க இரும்பும்
உருகாதோ உள்ளே கனிந்து                          7

கனிவுள பார்வையில் காயைச் சுவையாம்
கனியாக்கும் கன்னி விழிகள் - பனித்திடக்
காணின் மனமும் கரைந்து புவிவாழ்வு
வீணென் றுணர்த்தின வே!                            8

வேலை நிகர்த்த விழியினாள் - நீலக்கரு
வேலை நிகர்த்த விழியினாள் - பாலை
நிலமதும் நீரூற் றதனால் நிரம்பும்
சிலையவள் சீர்விழி பார்த்து                         9

பார்த்தன் கணையோ மதன்கைச் சிலையம்போ
சீர்த்தமால் சீறு சகடமோ - வார்த்த
சிலையவள் சீர்விழிகள் என்று மயங்கி
வளையுமோ வாட்புருவ வில்                         10

No comments:

Post a Comment