வருவாய் ஒருநாள் எனைத்தேடி
   வண்ண நிலாவில் இசைபாடித்
தருவாய் நினைவி லொருகோடி
   தமிழில் நனைவேன் புகழ்பாடி
கருவே யுனது கண்ணாகும்
   கவியே அதனி னுயிராகும்
குருவே உன்னை மறவேனே
   குணத்தா லுயர்ந்தாய் நீவாழி
தூர மிருந்தே தருகின்றாய்
   துயிலுங் காலம் தொலைக்கின்றாய்
ஆரக் கிளிபோல் கதைப்பவளே
   அழகாம் தமிழை விதைக்கின்றாய்
நேரங் காலம் பார்க்காது
   நெஞ்சி லுறைந்தே நிற்கின்றாய்
ஓரப் பார்வை அழகேநீ
   உயர்ந்தாய் மனத்தால் நீவாழி
சோலை மலரின் பூந்தேனே
   சொந்த மெனநீ வந்தாயே
வேலைக் களத்தி லிருந்தாலும்
   வேண்டும் வழிகள் செய்வாயே
காலைக் கதிரே கனியாளே
   கவிதை சொல்லித் தருவாயே
மாலை நிலவே மைனாவே
   மனத்தாற் புகழ்ந்தேன் நீவாழி  
No comments:
Post a Comment