'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2018

பாரதியால் பெற்ற பயன்

கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை

வெடிகுண்டு வார்த்தைகள் வீர்யமிகு பாட்டு
படிக்கின்ற பாமரரும் பார்வை - துடிக்கின்ற
வீர விவேகங்கொள் விந்தை யுணர்வெல்லாம்
பாரதியால் பெற்ற பயன்.

அக்கினிப் பார்வைகள் ஆர்ப்பரிக்கும் பாடல்கள்
சொக்கவைக்கும் சுந்தரச் சொற்கள் - திக்கெட்டும்
வீர சுதந்திரம் வேண்டிட வைத்ததே
பாரதியால் பெற்ற பயன்.

தேச விடுதலைக்குத் தேசுகவி யாத்தபடி
வாச மலரென, வாரணமாய் - ஆசுகவி\
பாரதிரப் பாட்டுரைத்துப் பாரதத்தைப் பெற்றோமப்
பாரதியால் பெற்ற பயன்.

நெஞ்சில் துணிவையும் நேர்மைத் திறத்தையும்
அஞ்சா உணர்வும் அளித்தவன் - துஞ்சுமொரு
வீரத்தை வெற்றியை வீறுகொளப் பாடியதே
பாரதியால் பெற்ற பயன்.

No comments:

Post a Comment