'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

வாழவைக்கும் காற்றாய் வாவா

வாழவைக்கும்  காற்றாய்  வாவா


    பாவலர் கருமலைத்தமிழாழன்

எதற்கிந்த  சீற்றமுடன்  வீசு  கின்றாய்
----எல்லாமும்  அழிப்பதற்கா  புயலாய்  வந்தாய்
பதவியிலே  இருப்பவர்கள்  நாட்டை  யின்று
-----பாழ்செய்து  வளம்சுருட்டிக்  கீழே  தள்ள
மதவெறியர்   ஒருபக்கம்   எரித்து  நிற்க

-----மனங்களெல்லாம்  தன்னலத்தால்   அழித்து  நிற்க
விதவிதமாய்ப்  பெயர்களிலே  வந்து  நீயும்
-----வீரத்தை  யார்புகழ  காட்டு  கின்றாய் !

வழிவழியாய்  வரவேற்பு  கொடுப்ப  தற்கு
-----வானத்தில்  விழிவைத்துப்  பார்த்தி  ருக்கப்
பொழியாதோ  எனயேங்கிக்  காத்தி  ருக்கப்
-----பொழியாமல்  வயல்களினைக்  காய  வைத்துக்
குழிபறிக்கும்   கொடுங்கோலர்  ஆட்சி  தம்மைக்
-----கூடிநின்று  விரட்டாத  மக்கள்  தம்மைப்
பழிவாங்க  வேண்டுமென்றா   புயலாய்  மாறிப்
-----பகலிரவு   பார்க்காமல்  கொட்டு  கின்றாய் !

பல்லாண்டாய்  வளர்த்திட்ட   மரங்கள்  சாய்த்தாய்
-----பரிதாப  ஏழையரின்  குடில்கள்  சாய்த்தாய்
பொல்லாதார்  நாடழித்தல்  போதா  தென்று
-----பொழிந்துநீயும்   ஊர்களினை   அழிக்கின்  றாயே !
கொல்கின்ற  குணமெதற்கோ   இரக்கந்  தன்னைக்
-----கொண்டிருக்கும்   தென்றலாக   மாற்றம்  கொள்வாய்
நல்லவரால்  இவ்வுலகம்   வாழ்தல்  போன்று
-----நறுங்காற்றாய்  வீசியெம்மை  வாழ  வைப்பாய்


No comments:

Post a Comment