'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10



14.     கவிஞர்  வே. அரவிந்தன்

கவிஞர் அழைப்பு!

இயற்பியல் பயிலும் மாணவன் எனினும்  
      இயற்றமிழ்க் காதலில் வீழ்ந்தான்!
மயக்கிய மரபு கவிதைக ளீர்க்க
      வரதரைத் தஞ்சம டைந்தான்!
பயிற்சியி லிணைந்து மரபினை நித்தம்
      பைந்தமிழ்ச் சோலையில் கற்றான்!
பெயலெனப் பொழியும் கவியர விந்தன்
     பெரும்புக ழடையவாழ்த் துவனே!
அரவிந்தா வருக! அருங்கவி தருக!

தமிழ் வணக்கம்

பாரண்டப் பேருடைப் பைந்தமிழே! சந்தனத்
தேராய்க் கமகமக்கும் தீந்தமிழே! பாராய்நீ!
மாறாச் சுவையே! மங்கா அமுதேநீ!
வாராய் எழுத்தையே ஆய்ந்து..


தலைமை, அவைவணக்கம்

பைந்தமிழ்ச் சோலையுடைப் பாவலர் மாமணியே!
பூந்தமிழால் போற்றினேன்நும் பொற்பாதம் - தீந்தமிழால்
பாவியற்றும் பூங்கரத்துப் பாவலர்க ளே!கேள்மின்
நாவியம்பும் பாப்படைத்தேன் நாற்று.

ஏருக்குச் சீர் செய்வோம்

கள்ளமேது மில்லாக் கருமுகில் வண்ணவுடல்
உள்ளார்ந்த தேடலில் ஓடுவதும் ஓய்ந்ததோ
எள்ளிநகை யாடும் எருமைச்சா ணத்தீக்கள்
துள்ளி விளையாடித் தூக்கத்தைத் தின்கிறதோ
கள்ளிக் கிளையொன்று காதைச் சொறிகையில்

வெள்ளி முளைத்திடும் வேளை வந்ததுவோ
தள்ளிப் படுத்துறங்கும் தங்கமவள் நீரிறைக்கப்
புள்ளிதனை வைக்கிறாளே பூக்கோலப் பொன்னியவள்!

ஏற்றமேத் தாதிங்கே ஏர்ப்பிடிக்க ஏதுவழி
ஊற்றும்நீ ரின்றியே ஊறவும் ஏதுவழி
ஆற்றோரக் கால்வாயும் ஆறிரண்டாய்ப் பங்கங்கே
சாற்றும் தவளையோ சங்காய்ச் சடசடக்க
நாற்று நடவிற்கு நாளையோடு பட்டமில்லை
வேற்று கிரகத்து விண்மீன்கொட் டும்பனி
கூற்றுவனாய் நீடிக்க ஊசியெனக் குத்திடுதே
சாற்றிட ஏதுமில்லை சல்லடையாய்க் கந்தலே

காளையனைப் பூட்டிவைத்துக் காடெல்லாம் சேறாக்கி
நாளைமறக் காதிடையில் நைந்த இலைத்தழையும்
வேளைப்பார்த் திட்டு விளைந்த பயிரதுவும்
மாலைவந்து சேர்ந்து மலையாகி நிற்குமே
தோலையுரித் துக்கொட்டும் தொள்ளாயிர முத்துக்கள்
காலையில் காட்டிடுமே கொத்தனமும் போட்டதைப்
பாலைக்கா ணாது பதறும் குழவிக்கு
வாலைக்காட் டும்மந்த வாசலையும் என்னவென. . .
பொன்னேரு கட்டுபவன் பொண்ணுக்கி ணையன்றோ
தன்னுடல்வ ருத்தியும் தானென்று வாழாதான்
வன்னுடல் எங்கிலும் வாடியஉ வர்மலர்கள்
வண்ணான் வெளுத்திடா ஆடையுடை வள்ளலவன்
கண்ணில் களவிலாக் கண்ணிய உள்ளமுடை
மண்ணுலகு போற்றும் மனிதவின மானவன்
அன்னையவ ளையொத் தகமுடை மானுடத்தைப்
பொன்னென எண்ணியே பூவுலகில் போற்றுவமே!!

வாழ்த்துப்பா !

தன்னுடல் நோகத் தனக்கென வாழாத
பொன்னேர் உழவரைப் போற்றிப் பொலிவாக
இன்றமிழ்ப் பாவினை இவ்வரங் கிற்பொழிந்தாய் !
நின்பா மழையினால் நெஞ்சம் நெகிழ்வித்தாய் !
தென்றலாய்த் தொட்டுத் திளைத்திட வுஞ்செய்தாய் !
கன்றுனை வாழ்த்தக் காத்திருப் பாள்தமிழ்த்தாய்!
அன்புடன் வாழ்த்தி அகமகிழ் வோடுனக்கு
நன்றிகளைச் சொல்வேன் நனைந்த விழியோடே !!

★★★

No comments:

Post a Comment