'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


1.     பைந்தமிழ்ச்செம்மல்
மன்னை வெங்கடேசன்


கவிஞர் அழைப்பு

பட்டங்கள் பற்பல பெற்றவராம்  - இவர்
      பைந்தமிழ்ச் சோலையில்  கற்றவராம்!
நுட்பத்து டன்கவி நெய்பவராம் - நல்ல
       நூல்களைத் தேடிப் படிப்வராம் !

நாடியே நன்மைகள் செய்பவராம் - இவர்
      நற்றமிழ்த் தாயைத் துதிப்பவராம் !
கூடிய அன்பர்கள் கூட்டத்திலே - கவிக்
      கொட்டிடவே இங்குக் கூப்பிடுவேன் !!

வியன்கவி தரவே வெங்கடேசன் வருக!!

தமிழ் வாழ்த்து

எங்கள் தமிழே இனியாளே
     என்றும் எங்கள் வழியாளே!
சங்கம் கண்ட மூத்தோளே
    தரணி வந்த முதலாளே!
தங்க மென்ன வெள்ளியென்ன
தமிழுன் ஒலிக்கு நிகராமோ
      இங்கிச் சபையில் உனைவணங்கி
      இனிதே கவிதை பாடுகிறேன் !!

தலைமை , அவை வாழ்த்து

தேனா யினிக்கும் பாவெல்லாம்
     தெளிவா யாக்கும் சியாமளாம்மா !
ஆனா ரரங்கின் தலைமையென
    அன்னார் அவர்க்கென் தலைவணக்கம் !
தேனைச் சுவைக்கும் சிறுவண்டாய்த்
      திரண்ட புலவர் அவைமுன்னால்
யானும் கவிதை வழங்கவந்தேன்
      அனைவ ருக்கும் என்வணக்கம் !!

ஏருக்குச் சீர் செய்வோம் !!

செல்வத் தின்பின் செல்வோரும்
      சிறிதே கொஞ்சம் சோறிலையேல்
பல்வா றாகத் துயருறுவார்
      பணத்தால் ஏதும் பயனின்றி
அல்லும் பகலும் உழவோரால்
      ஆழ உழப்பட் டெந்நிலமும்
நெல்வ ளத்தைப் பெறுவதற்கு
      நீண்ட ஏரின் துணைவேண்டும்

வேண்டும் வரைக்கும் உதவிபெற்று
      விலகி நிற்கும் உலகோரே
யாண்டும் உந்தம் பசிநீக்கும்
      அழகுச் செந்நெல் வளர்வதற்கு
நீண்ட ஏரே மண்ணோடி
      நிலத்தை வளமாய் ஆக்குவதால்
வேண்டு மட்டும் சீர்செய்வீர்
      விந்தை செய்யும் ஏரதனை!

ஏரென் னுஞ்சொல் தமிழினிலே
      இரண்டு பொருளில் வருமன்றோ
நீரைப் பாய்ச்சும் முன்னாலே
      நிலத்தை உழுமோர் கருவியொன்று
சீராய்ச் சிறப்பாய் உளவொன்றைத்
      தெளிவாய்ப் புகழும் சொல்லொன்றாம்
ஏரின் சீரை இதனின்றும்
      இனிதாய் உரைக்க ஏலாதே

உரைப்ப தற்கும் ஏலாதே
      உழவன் கைக்கொள் ஏர்ப்பெருமை
தரையில் உள்ளோர் பசிதன்னைத்
      தணிக்கும் ஏரின் பெருமையதை
உரத்துச் சொல்லிக் கவிசெய்ய
      உவந்தே என்னை இங்கழைத்த
தரத்தில் பெரிய சோலையர்க்குத்
      தந்தேன் நன்றி பலபலவே!

வாழ்த்துப்பா !!

கவிதை மூலம் ஏருக்குக்
      கணக்காய்க் கருத்தாய்ச் சீர்செய்தீர்!
செவிக்கு விருந்தாய்க் குரல்பதிவால்
     சிந்தை குளிர வைத்துவிட்டீர்!
உவந்தே ஏரின் பெருமைதனை
    உரத்துச் சொல்லிச் சிறப்பித்தீர்!
அவையி லுமக்கு நன்றியுடன்
    அன்பாய் வாழ்த்தைச்  சொல்வேனே!

★★★

No comments:

Post a Comment