'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


9.     கவிஞர் இரா.அழகர்சாமி

கவிஞர் அழைப்பு

அந்தமிழ் மீது கொண்ட
       அளவிலாக் காத லாலே
பைந்தமிழ்ச் சோலை நாடிப்
      பல்வகைப் பாக்கள் கற்ற
செந்தமிழ்க் கவியே இங்குச்
      செம்மையாய் ஏரைப் போற்றிச்
சந்தன மாய்ம ணக்குந்
       தண்டமிழ்க் கவிதை தாராய்!

அழகரே வருக! அருங்கவி தருக!!

தமிழ்த்தாய் வாழ்த்து

ஆதியில் மண்ணில் வந்த
     அருந்தமிழ் மொழியே உன்னை
ஓதினோர் தாழ்ந்த தில்லை
     உலகையே வென்றார் தானே
சோதியாய் என்றும் நாட்டில்
     சுடர்விடும் தமிழே உன்னை
வேதமாய் நெஞ்சில் வைத்தே
     விழியெனப் போற்று வேனே!

ஏருக்குச் சீர்செய்வோம்!

ஏருக்குச் சீர்செய்வோம் வாரீர் என்றே
     என்தலைவர் அழைக்கின்றார்! கவிதை கொண்டு
போருக்கும் துணிகின்ற நெஞ்சம் தந்த
பைந்தமிழை வணங்குகின்றேன்! நமது சோலை
யாருக்கும் சளைத்ததல்ல! கவிதை பூக்கும்
     எழிலார்ந்த சோலைக்குள் வந்தோர் எல்லாம்
கார்போலக் கவிதைமழை பொழிவர்! அந்தக்
     காட்சிக்குச் சாட்சியிந்த அரங்கம் தானே!

விளைந்தபொருள் வீடுவந்து சேரும் காலம்
    வீடெங்கும் மகிழ்ச்சியிலே திளைக்கும் கோலம்
களைத்தமனம் களிப்புடனே துள்ளும்! இந்தக்
    காட்சியினைத் தருவதுதை மாதம் தானே!
இளைத்திருக்கும் வயிற்றுக்குச் சோறு போடும்
    எம்முழவர் எதிர்நிற்குந் தெய்வம்! அன்னார்
வளையாது வாழ்வாங்கு வாழ வேண்டி
    வணங்கிடுவோம் வான்வழங்கும் மாரித் தாயை!

ஏதேதோ தொழிலின்று நாட்டில் உண்டு
     இருந்தாலும் அதற்கெனவோர் காலம் உண்டு
தீதான பலசெயல்கள் நடந்த போதும்
     திருந்தாத மக்களுக்குப் பாடம் சொல்லும்
மூதாதை யர்வகுத்த உழவு தானே
     முன்னின்று வழிகாட்டும் வாழ்க்கை யாகும்
வேதங்கள் பொய்த்தாலும் விளைச்சல் காணும்
     விவசாயி நமையென்றும் ஏய்த்த தில்லை!

வயிற்றுக்கு உணவளிக்கும் அந்தத் தெய்வம்
     வாழ்க்கையது சிறப்பதற்கு வகையைச் செய்வோம்
பயிர்வாழப் பாடுபடும் மள்ளர் வாழ்வு
     பலகாலம் மேன்மையுடன் சிறப்புப் பெற்றே
உயர்ந்தோங்க வேண்டுமெனச் சபதம் செய்வோம்
     உலகுள்ளோர் நலத்துடனே அன்றும் இன்றும்
உயிர்வாழச் செய்துவரும் உழவர் தம்மை
     ஊரோடு கொண்டாடி மகிழ்வோம் நாமே!

வாழ்த்துப்பா  !

சுழலுமிவ் வுலகில்  ஏர்தான்
      சோறிடு மென்று ணர்ந்தே
உழவரைத் தெய்வ மாக
      உயர்த்தியே கவிதை செய்தீர்!
மழைமுகில் வானில் கண்ட
      மயிலென மனமு மாட
அழகரே நன்றி சொல்லி
      அன்புடன் வாழ்த்து வேனே!!

No comments:

Post a Comment