'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


2.     கவிமாமணி சேலம்பாலன்


கவிஞர் அழைப்பு!

யாருக்கும் அஞ்சாத சிங்கம்
     ஈரோட்டின் தன்மானத் தங்கம் !
நேருக்கு நேர்பேசும் பாலன்
      நேர்மைவழி யிற்செல்லும் சீலன் !
ஏருக்குச் சீர்செய்ய வேண்டும்
     என்றதலைப் பிற்கவிதை பாட
வாருங்கள் அண்ணாவென் றேநான்
     வணங்கியழைக் கின்றேனிக் கணமே !!
ஐயா வருக அருங்கவி தருக!

தமிழ்த்தாய் வாழ்த்து !

திண்ண மாகவே தோன்றிய தென்றெனச்
செப்பிட முடியாச் செந்தமிழ்த் தாயே !
கண்ணின் மணியாய்ச் சிறந்தவள் நீயே !
கருத்தினில் நின்று காத்திடு வாயே !

தலைமை வணக்கம் !

எவரின் உளத்தையும் 
ஈர்க்கும் வகையிலே
கவரும் பாத்தரும்
கவித்தலைவி! வணக்கம்!

அவை வணக்கம் !

குரலொலிக் கவிதையைக்
குளிர்ந்து கேட்கும்
தரமிகு சுவைஞரே!
தந்தேன் வணக்கம் !


ஏருக்குச் சீர்செய்வோம் !

உலகினில் உள்ள   தொழில்களில் எல்லாம்  
உழவுதான் உயர்ந்ததே   என்போம்!
பலன்தரும் தொழிலைப் பாரினில் செய்தே
பணந்தனைச் சேர்த்தவர், மற்றோர்
நலத்துடன் உலவல் நாளினைப் போக்கல்
நாட்டமாய்ச் சுற்றலும் நித்தம்
நிலத்தினில் விளைந்த நிகரிலா உணவை
நித்தமும் உண்பதால் தானே!

உழவொடு நல்ல தொழிலுமே நன்றாய்
உயர்ந்திட யாவரும் மகிழ்வர் !
உழவினைச் செய்யும் உழவரோ இந்நாள்
உயர்ந்திட நல்வழி காணோம் !
உழவுசெய் நிலங்கள் மனைகளாய் மாற
உலகமே துன்பினில் ஆழும் !
உழவரும் தொழிலை மாற்றிடும் போதில்
உண்மையில்  இடர்பல சூழும்!

இருப்பவர் எவரும் இனிமையாய் உண்டே
ஏறுபோல் வாழ்கிறார் என்றால்
ஒருசிலர் நிலத்தில் சேற்றினில் கையை
ஊன்றியே உழைப்பதால் தானே!
இருப்பவர் உயிரோ டிருந்திடும் மட்டும்
என்றுமே உணவது வேண்டும்!
விருப்புடன் என்றும் உடல்வளர்த் திடும்நாம்
ஏருக்குச் செய்வமே சீரே!

ஏரினைப் போல இணையொரு  கருவி
இவ்வுல கத்திலே இல்லை!
ஏரினைக் கொண்டு நிலத்தினை உழுவோர்
இல்லையேல் இல்லையே மகிழ்வு!
பாரிலே மூத்த தமிழரின் நல்ல
பண்பது நன்றியே சொல்லல்!
ஏரினை என்றுமே போற்றியே நாமே
இன்புடன் செய்வமே சீரே !

வாழ்த்துப்பா

விளைநில மெல்லாம் விலைநில மானால்
     விளைந்திடு மிடர்களைப் பற்றி
விளக்கமாய் எழுசீர் விருத்தத்திற் சொல்லி   
      விழிப்புணர் வூட்டிய கவியே!
வளத்துடன் மக்கள் பசியற வாழ்தல்
      மள்ளரின் கடுமுழைப் பாலென்(று)
அளித்தநின் கவிதைக் கன்புடன் வாழ்த்தை
     அகமகிழ் வோடுசொல் வேனே!

★★★

No comments:

Post a Comment