'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


தலைப்பு : ஏருக்குச் சீர் செய்வோம்

 தலைமை : பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

பங்கேற்போர்:

1. பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்
2. கவிமாமணி சேலம்பாலன்
3. பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்
4. பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
5. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
6. கவிஞர் மதுரா
7. புலவர் இரா. மாது
8. கவிஞர் சோமு. சக்தி
9. கவிஞர் இரா.அழகர்சாமி.
10. கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ
11. கவிஞர் பி. எம். நாகராஜன்
12. கவிஞர் கல்யாணசுந்தரராஜன்
13. கவிஞர் சதீஷ் காளிதாஸ்
14. கவிஞர்  வே. அரவிந்தன்

தொடக்கக் கவிதை

பைந்தமிழ்ச் செம்மல்
சியாமளா ராஜசேகர்

தமிழ் வாழ்த்து

முன்னவள் சுவையில் இனியவள் கன்னல்
      மொழியவள் இளமை யானவள் !
தன்னிக ரின்றித் தனித்துவ மாகத்
      தரணியை ஆளும் தன்மையள் !
நன்னய மிக்க இலக்கண வளமும்
      நல்லிலக் கியங்கள் கொண்டவள் !
தென்னவன் மன்றில் வளர்ந்தவள் புவியில்
      செம்மொழி யாகச் சிறந்தவள் !!

இயலுடன் இசையும் நாடக மென்றே
      இயல்பினில் மூன்றா யானவள் !
உயிரொடு மெய்யும் உயிர்மெயு மாகி
      ஓரெழுத் தாய்த மானவள் !
துயருறும் போது சுகம்பெறத் தமிழே
      துடைத்திடும் கையாய் நீள்பவள் !
தயவுடன் விரும்பும் அன்னியர் தமக்கும்
      தமிழமிழ் தம்போல் சுவைப்பவள் !!

கல்லையும் கனியச் செய்பவள் தம்மைக்
      கற்பவ ருள்ளம் நிறைபவள் !
வெல்லமாய் நாவில் இனிப்பவள் என்றும்
      வெற்றிகள் ஈட்டித் தருபவள் !
நல்லறம் காட்டி மிளிர்பவள் வாழ்வில்
      நைந்திடா வண்ணம் காப்பவள் !
வல்லவள் ழகரச் சிறப்பவள் எங்கும்
      மணப்பவள் வாழி வாழியே !!

சோர்வினை யகற்றும் அன்னையாய் நித்தம்
      சோலையில் வளைய வருபவள் !
நேர்வழி காட்டிக் கவியரங் கத்தை
      நிறைவொடு நடத்தித் தருபவள் !
ஏரினைப் போற்ற வந்தவர்க் கெல்லாம்
      ஏற்றநற் றுணையாய் இருப்பவள் !
சீர்மிகும் பாட்டில் நெஞ்சம கிழ்ந்து
      செந்தமி ழன்னாய் வாழியே !!

அவை வாழ்த்து

நல்லதமிழ்ப் பாமணக்கும் மரபின் சோலை
      நன்னாளில் கவியரங்கம் காணும் சோலை
வல்லவராம் மாவரதன் வழிந டத்த
      வண்டமிழின்  மாண்புகளைப் பேணும் சோலை
பல்வகையில் பிழைகளின்றிப் பாவி யற்றப்
      பயிற்றுவிக்கும் பாவலரின் பாசச் சோலை
வில்லினின்றும் புறப்பட்ட பாணம் போலும்
     மின்னலெனக் கவியம்பு பாயுஞ் சோலை

முத்தமிழாள் முப்போதும் உலவுஞ் சோலை
      முகநூலில்  இளமையுடன் திகழுஞ் சோலை
வித்தகராம் வரதனாரின் பணியை  மெச்சி
      விழிவிரியப் பல்லோரும் வியக்கும் சோலை
சொத்தாக மரபினையே கருதும் சோலை
      சொந்தமெனக் கவிஞர்களை அணைக்கும் சோலை
சத்தான பைந்தமிழின் சோலை தன்னைத்
       தமிழன்பால் தலைதாழ்த்தி  வணங்கு வேனே!

தொடக்கம் !

வாருங்கள் கவிக்குயில்காள் என்றே அன்பாய்
   மனங்கனிந்து நானழைக்க மகிழ்ந்தே வாரீர்
ஏருக்குச் சீர்செய்ய வேண்டு மாயின்
   என்னவெலாம் செய்யவேண்டு மென்றுசொல்வீர்
காருண்ட மேகத்தின் பொழிவைப் போலும்
   கவினழகு சொற்றொடுத்து மழையாய்ப்பெய்வீர்
பாருக்குள் நற்றொழிலாம் உழவைப் போற்றிப்
   பாட்டொன்று குரல்வடிவில் தாரீர்! தாரீர்!!

ஏழிரண்டு கவிஞர்கள் ஒன்றாய்க் கூடி
      ஏருக்குச் சீர்செய்வோம் என்றே நாடி 
வாழுவகை கற்பிக்க வந்தார் ஓடி 
       வளமான பைந்தமிழின் சோலை தேடி !
ஆழியலை யாய்ப்பொங்கிக் கவிய ரங்கில்
     ஆனந்த மாய்நனைய வைப்பார் பாடி !!
வேழமெனச் செவியசைத்துக் கவிதை கேட்க
     விழைவோர்க்கு முதலிலென்றன் நன்றி கோடி !!

தரணியெங்கும் வாழ்கின்ற தமிழ ரெல்லாம்
      தைத்திருநாள் கவியரங்கைச் சுவைத்திடுங்கள்
பரந்தவுளத் தோடேயெம் பக்கம் வந்து
       பைந்தமிழின் கனிச்சாறைப் பருகிடுங்கள்!
குரல்பதிவு முண்டிங்கே செவியைத் தீட்டிக்
      கொஞ்சுதமிழ் கேட்பதற்குக் காத்திருங்கள்!
கரந்தட்டிக் கவிபாடும் கவிஞர் கட்குக்
     கனிவோடு வாழ்த்துகளைப் பகிர்ந்திடுங்கள்!!
★★★

No comments:

Post a Comment