'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சற்றே நோக்கு


பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

எண்சீர் விருத்தப் பத்து

துன்புறுத்தி வாட்டுகின்ற கயவ னேகேள்
    துடிக்கின்ற பெண்ணவளைக் கொஞ்சம் நோக்கு
வன்மையொடு கொடுமைகளைச் செய்யும் வேளை
    வாட்டமுற்றுப் போராட்ட மின்றி வீழ்வாள்
இன்பங்கள் வாழ்வினிலே மடியு மன்றோ
    ஈன்றவளின் நெஞ்சமதில் வெறுப்புப் பொங்கக்
கன்னிப்பெண் அச்சமின்றி வீதி செல்லக்
    காமமுற்றுச் சீரழித்துத் திளைக்க லாம                1

திளைத்திடநீ விளையாடும் பொருளு மன்று
    தீந்தமிழால் சாடுகின்றேன் கேட்பாய் நன்றே
வளைத்துநின்றே ஒருபெண்ணைக் காம முற்று
    மகிழுவதால் பயனென்ன வுண்டு சொல்வாய்
களைத்தவளைத் தீண்டுவதில் இன்ப முண்டா
    காமமுற்றுத் திரிவதால் வாழ்வு மங்கும்
இளமையினில் சிந்தனையை வளரக் கற்றால்
    என்றென்றும் அவ்வழியில் இனிமை உண்டு        2

உருகிவேண்டும் பெண்ணினது நிலையைக் காண்பாய்
    உள்ளமது துடித்திடவே வாடி நிற்பாள்
அருகினிலே சென்றவளைச் சூழ நின்றால்
    அழுகுரலால் மன்றாடி நிற்கப் பார்ப்பாய்
இருளினிலே இதயமற்றுக் கொடுமை செய்ய
    இன்னலுற்று மாய்ந்திடுவாள் தேவை தானா
பெருந்துயரில் மாள்கின்ற வேளை உன்றன்
    பெருமைகளும் அழிந்துவிடும் அறிவா யாக!      3

அரிவையவள் தனித்திருக்க உதவி செய்தால்
    அச்சமின்றி வீதியினில் நடந்து செல்வாள்
அறிவற்றுத் திரிபவர்கள் கூடச் சேர்ந்தால்
    அழிவுபாதை நீசெல்ல வழிகள் காட்டும்
குறுக்குவழி இன்பமெல்லாம் விதியை மாற்றக்
    குடும்பத்தார் மன்றினிலே அவமாய் நிற்பர்
இறைவனவன் என்றென்றும் நின்று கொல்வான்
    ஏடுதன்னை படித்துப்பார் துயரும் தோன்றும்    4

துயருற்று மாள்பவளை நோக்கா வண்ணம்
    துரிதமென இழுத்தவளைக் காயம் செய்ய
உயிரற்ற பிணமெனவே சாய்ந்து வீழ
    ஒருவருக்கும் கருணையுள்ளம் வருவ தில்லை
மயக்கமுற்றுக் கிடக்கின்ற மேனி தன்னை
    மதுவருந்திக் காமத்தில் மகிழ வாட்டி
இயல்பாக வருகின்ற காதல் தன்னை
     இரக்கமற்றுத் தீவழியில் களிப்ப துண்டா            5

உருக்குலைந்து மயக்கமுற்றுக் கிடக்கும் பெண்ணின்
    உடல்தன்னை வருத்திநீயும் மகிழ லாமா
அருவருக்கும் செய்கைகளைத் தொடர்ந்து செய்ய
    அவனியிலே கொடூரங்கள் மலிந்து போகும்
இரக்கமற்ற செய்கையெலாம் வாழ்வில் வேண்டா
    இதயத்தில் கருணைதனை வளர்க்க லாமே
கருக்கிவிடப் பெற்றவர்கள் மனத்தில் வலிகள்
    காலமெல்லாம் மறையாது சற்றே நோக்கு           6

சற்றேனும் கருணையின்றிப் பெண்ணைக் கொன்று
    சாய்த்துவிடக் கூட்டமாக நிற்க லாமா
குற்றங்கள் மறைப்பதற்குக் கருக்கும் மேனி
    கொல்லையினில் புதைப்பதனால் தப்ப லாமா
கற்பழிக்கும் கூட்டமென்றே ஊரே தூற்றும்
    காசினியில் அழியாமல் நிற்கு மன்றோ
வற்புறுத்திச் சிற்றின்பம் அடைய லாமா
    வாழ்வினது மகத்துவத்தை உணரு வாயா            7

அருகினிலே சூழ்ந்துநிற்றல் கொடுமை யன்றோ
    அழுகுரலால் கெஞ்சியழ அடித்தல் நன்றா
உருகிவேண்டும் பெண்ணினது நிலையும் அந்தோ
    உள்ளமது துடித்திடவே கதறி நிற்க
இருளினிலே இதயமற்றுக் கொடுமை செய்ய
    இன்னலுற்று மாய்ந்திடுவாள் எண்ணிப் பார்ப்பாய்
பெருந்துயரில் மாள்கின்ற வேளை உன்றன்
    பெருமைகளும் அழிந்துவிடும் அறிவாய் நன்றே 8
நன்றெனவே வளர்த்துவிடும் உன்றன் அன்னை
    நன்மைகளைச் செய்திடவே விரும்பி நிற்பாள்
அன்பதனால் உலகினிலே அமைதி ஓங்கும்
    அகிலமதில் பெண்களெல்லாம் வாழ வேண்டும்
இன்னல்களைக் கொடுத்துவிட மடிந்து செல்வர்
     ஏக்கங்கள் நீங்கிவாழ ஆண்கள் என்றும்
இன்பமுடன் கரங்கொடுத்துத் தூக்கி விட்டால்
    இதயத்தால் என்றென்றும் போற்று வாரே            9

ஏற்றங்கள் வாழ்வினிலே வந்து விட்டால்
    இளமையில்நீ விடுகின்ற தவறெல் லாமே
தோற்பதற்கு வழிவகுக்கும் என்றும் வாழ்வில்
    துயரங்கள் மனத்தினிலே கொடுக்க நீயும்
சேற்றுக்குள் விழுந்தவனைப் போல நல்ல
    செயல்களையும் செயவிடாது தடுத்து நிற்கும்
தேற்றுவார்கள் எவருமின்றி வாழ்வில் நித்தம்
    திருப்பங்கள் வாராமல் வாடு வாயே!                   10

No comments:

Post a Comment