12.    
கவிஞர் கல்யாணசுந்தரராஜன்
கவிஞர் அழைப்பு !
இயற்கையை விரும்பி இறைவனைப் போற்றும் 
அயலகம் வாழும் அருந்தமிழ்க் கவியே !
உழவரின் உறவாம் உன்னத ஏரை 
எழுத்தில் செதுக்கி ஏற்ற மளித்துக் 
கவின்மழை யாகக் கவிதையில் 
செவிகுளிர் வண்ணம்  சிறப்புறப்
பொழிக !!
சுந்தர்  வருக ! சுவைமிகு கவிதை
தருக !!
தமிழ் வாழ்த்து
பெருவெளியில் பூதங்கள் பின்னலிடும் முன்னே 
வருமொலியாய் வந்ததமிழ் வாழ்த்தே! - உருவமெனும் 
ஓரறிவு கொண்ட உயிர்தொடங்கி யாவர்க்கும் 
பேரறிவு வார்ப்பவளைப் போற்று!
தலைவர், அவை வாழ்த்து!
கூடு மிடமெலாம் கூவிடும் பாவலர் 
நாடு மன்பரை நற்றமிழ்ப் பாடிட 
ஏடு செய்பவர், இவ்வவைக் கூட்டிட 
நீடு வணங்கியே நிலைபெற வாழ்த்துவோம்.
ஏருக்குச் சீர் செய்வோம்
வானம் பொய்க்கா வண்ணம் காடும் 
தானம் தர்மம் ஓங்கும் வீடும் 
பாவம் புண்ணிய மறமாய் வாழ்வும் 
தாவும் மனத்தைத் தட்டும் மாண்பும் 
புள்ளினம் போற்றிப் புழுவினம் காத்து               ....5
வள்ளியோர் வாழ்ந்த வண்டமிழ் பூமி 
இன்றோ எல்லாம் அழிய, இன்பம் 
இன்றித் தவிக்கக் காரணம் ஏது?
உழவை மறந்தே உண்டு கழித்துப் 
பழமை மிதித்து பண்பை வீழ்த்தி                            ...10
அறிவைத் தொலைத்தே ஆசை மிகுத்து 
செறிவில் சமூக மாகி விட்டதே!
பரந்த நிலத்தில் பாயும் ஆறு 
விரிந்து வாய்க்கால் விரவும் நீரை 
செழித்து வளரும் செந்நெல் உயர                           ...15
கொழித்துக் கிடக்கும் சோலை நாடே 
வரப்பு மூடி வரம்பு கெட்டு 
பரப்பு முழுதும் பணமாய் மாற்றிக் 
கிடைத்த பணத்தைக் கொட்டி இரைத்துப்  
படைத்த கேட்டால் பண்பு ஒழிந்தது!                      ...20
இனிமேல் எல்லாம் இருந்தது ஆகும் 
பனிமேல் பட்ட பகலவன் ஒளிபோல் 
கல்வி என்பது கயமை ஆனால் 
பல்கிப் பெருத்துப் பயனென் ஆகும்?
நல்லோர் சொல்லோ நஞ்சென ஆனபின்             ..25
புல்லோர் எங்கும் புன்மை விதைக்க 
எல்லாம் மறந்ததே! இன்பம் தொலைந்ததே!
இன்னும் இங்கே பாவலர் போன்றோர் 
பண்ணின் மூலம் பழையதை மீட்க 
ஏரினைப் பூட்டி இன்பம் தேட                                   ...30
பாரினை அழைத்தார்! சீரதை 
ஏருக்குச் செய்தே வேரினை மீட்போம்!
வாழ்த்துப்பா !
ஆசிரியப் பாவில் அழகாய் வனைந்தகவி 
வாசித்து நன்றியுடன் வாழ்த்துவேன் ! - வீசும் 
புயலாய்க் கவிதையில் பொங்கி யெழுந்தாய் 
வயலுக்கும் வாழ்வு வரும் .
★★★
No comments:
Post a Comment