'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


13.     கவிஞர் சதீஷ் காளிதாஸ்
  
கவிஞர் அழைப்பு

பந்தநல் லூரில் பிறந்தவனே -  நம்  
   பைந்தமிழ் சோலையின் மாணவனே !
அந்தமிழ்ப் பற்றுடன் பாக்களி யற்றிடும்
    அற்புத ஆற்றல் மிகுந்தவனே!
செம்மையாய்ப் பாட்டொன்று நின்குரலில் - பாட
   தீங்கவியோ டிங்கே வந்திடுவாய் !
இம்மன்றில் சோலையின் செல்லப்பிள்ளை - நீயும்
      ஏருக்குச் சீரினைச் செய்திடுவாய் !!

சதீஷ் வருக!  தண்டமிழ்க் கவிதை தருக!

தமிழ் வாழ்த்து !

அன்னைத் தமிழே அழகு மொழியுடை

உன்னை வணங்கி உயர்ந்திட - இன்ப
உழவை இனிதாய் உயர்த்திட வந்தேன்
அழகாய் வரியுள் அருள்.

தலைமை வாழ்த்து

ஏற்றமிகு சோலையிலே ஏற்றிய பாவலரே
சாற்றுகிறேன் பாமாலை சங்கத் தலைமைமுன்னே
பாட்டறியாப் பாமரனின் பாவினையும் கேட்டருள்வீர்
நாட்டுகிறேன் ஆற்றல் நடவு.

ஏருக்குச் சீர் செய்வோம்

காதலனைப் பிரிந்ததொரு காதலியாய் நீரும்
   காடுமலை போகாது காய்ந்திருக்கு பாரும்
ஆதவனும் அன்றாடம் அகன்றகதிர் வீச
    ஆளுமில்லை உழவினையே ஆழமாகப் பேச
நாதமுடைக் கானமழை நாற்றுநட்டுப் பாட
     நாளுமின்றி ஓடிடுதே நல்லிசையும் கூட
மாதரினைப் போலிங்கு மண்ணினமும் தாயே
      மாண்புடனே போற்றிடவே மகுடமுடன் வாராய்!

நகரவாழ்வு நன்றெனவே நால்வரவர் கூற
    நாமுமிற்றைக் கிழந்தோமே நல்வாழ்வை ஊரில்
அகரத்தைக் கற்றவனும் அரிசியையே உண்ண
    அதைப்பயிலப் பாராமல் அலைவதுவும் ஏனோ?
இகழ்ச்சியினைக் காணாமல் இன்பமாக ஈயும்
     இறைவனவன் உழவனென இனிநீயும் கூறு
பகல்முழுதும் பயிரிட்டுப் பண்புடனே வாழ்வோம்
   பகற்கழிய வீடுவந்து பொழுதோடு  சேர்வோம்

பாரினிலே பாட்டுரைக்கும் பாமரனு மின்று
     பயிரினையே பரமனாகப் பாடிடுவான் நன்று
தேரினையே இழுத்தவனும் தென்றலுடன் சேர்ந்து
     தென்னையினை விதைத்தானே தோப்பினிலே அன்று
பாரியைப்போல் வள்ளலுமே படைப்பவனுக் கில்லை
    பாவமந்தப் பயிரென்ற பதில்தானே எல்லை
ஏரியிலே நீரிரைத்திங்(கு) ஏற்றமுடன் இங்கு
    என்னினிய விவசாயம் ஏற்றிடுவோம் எங்கும்.

ஏருழுவும் தெய்வத்தை ஏழையெனச் சொல்லி
    ஏரெடுத்தும் பார்க்காமல் ஏசிடுவர்ச் சொல்லை
ஊருணியால் உழவுசெய்து ஊரினுக்கு அள்ளி
      உளமாறக் கொடுப்பாரே உழவருமே நெல்லை
வேருடைய எம்தொழிலை வேட்டிடவு முண்டோ?
      வேலையென வரத்தினையும் வழங்கிடுத லுண்டோ?

ஓருருவாய் உழவுக்காய் ஒன்றிணைவோம் நாமே
   பேறுபெற்று வாழ்ந்திடுவோம் பெருமையுடன் தானே...

வாழ்த்துப்பா ...!!!

இறைவனென்றே உழவோரைக் காணச் சொல்லும்
       இளைஞனிவன் இன்குரலில் கவிதை கேட்டேன்!
குறைவரினும் பிறருக்காய் உழைப்பை நல்கிக்
      குணக்குன்றாய்த் திகழ்வோர்தம் பாட்டைக் கேட்டேன் !
உறவாக ஒன்றிணைய வேண்டு மென்றே
      உருகியிவன் கவிவடித்த பாங்கைக் கேட்டேன் !
நிறைமனத்தோ(டு) இவனுக்கு நன்றி சொல்லி
        நீடூழி வாழநானும் வாழ்த்து வேனே !!

No comments:

Post a Comment