'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


10.     கவிஞர்
ஷேக் அப்துல்லாஹ் அ


கவிஞர் அழைப்பு

கண்ணில் விரியும் கனவுகளைக்
     கன்னித் தமிழில் கவிசெய்யும்
பண்பிற் சிறந்த பாவலரைப்
      பாசத் துடனே அழைக்கின்றேன் !
மண்ணி லுயிர்கள் வாழ்ந்திடவே
      வரமாய் விளங்கும் ஏருழவைக்
கன்னல் மொழியில் சீராட்டிக்
        கவிதை யொன்று தருவீரே !!

அப்துல்லாஹ் வருக!  அழகாய்க் கவிதருக!

தமிழ் வாழ்த்து

நற்குண மானிடர் வாழ்வே வுருவாகப்
பொற்பதங்கள் சேர்ந்த புகழோவி யங்களின்
அற்புதமே ! அன்னைத் தமிழே ! தமிழனாய்நான்
பெற்ற பிறப்பே புகழ் !

தலைவர், அவை வாழ்த்து

தேவனில் தானுருகித் தேன்தமிழ் பாவெழுதும்
காவிய நாயகியின் நற்றலைமை சீர்தளத்தில்
பாவலர் நம்வரதர் பாதை வழிவந்த
பாவலருள் நிற்பதே பேறு !

ஏருக்குச் சீர் செய்வோம்

பாரினில் நம்தமிழ் நாடு தனிப்புகழ்
வீரியம் கொண்டது வெற்றிகள் கண்டது
காரியம் கைக்கூடக் களத்தி லிணைந்தொன்றாய்க்
கோரிக்கை வெல்வதற்குக் கூர்மை மதிதீட்டி
ஏர்கொண்டே வாழ்ந்தார்க ளெங்கும் பசுமையில்
வேர்விட்டு ஆனந்தம் ! வீரவிளை யாட்டுடன்
சீர்கொடுக்கச் செல்வங்கள் சேர்த்தும் உறவிலின்பம்
பார்க்கு மினமேதான் நம்தமிழர் திண்ணம்!
கடின உழைப்பு களத்தி லிறங்கி
விடியும் பொழுதில் விதைக்கும் குணத்தில்
மடிய விடமாட்டார் மானிடர் மான்பைத்
துடிப்பு மிகுந்த துவளாத் தமிழர் !
வழிபாடாம் சைவ வழியில் வணக்கம்
'அழிந்தாலும் ஒன்றே அடர்ந்தாலும் ஒன்றே'
விழித்தது தானே வினையாற்றும் சீவன் !
ஒழிந்தாற் சிவனென்றே ஓர்ந்துணர்ந்த கொள்கை !
ஓருயி ரென்றே உணர்ந்தா லனைத்துமிங்கே !
ஊரு முலகும் உயர்வாகு மமைதியாய் !
பாரும் ! மரக்கிளைப் பற்றி யொடிக்கநாடின்
யாருயிரும் தன்னுயி ரென்பதாற் பற்றவிடார் !
நாளுந் தமிழர் நலன்விரும்பி வாழ்ந்தார்கள்
மூளும் பகைகள் முடிந்தோர் பிரித்தாளும்
பாழும் உயர்வுதாழ்வு பார்வை விதிகளென்ற
தேளும் கடிபாம்பாம் தீரா வியாதி !
முடித்தொழிக்க முன்வந்தே முற்று முணர்ந்தும்
விடிவும் பெறவும் விதைத்தார்நேர் மாற்றம் !
'இறைவன் எனக்கொள்வது ஏமாற்றே' என்றும்
முறையாய் 'அவனில்லை முட்டாளே !' என்றார் ?
ஏர்கொண்டு ழைத்தவன் ஏருக்குச் சீர்செய்ய
வேர்கொண்டு பற்றவைக்கும் வித்தைகள் வென்றொழிக்க
நேர்கொண்ட தன்பார்வை நின்று நிலமெங்கும்
தீர்க்க நினைத்தாரோ தீர்வு !

வாழ்த்துப்பா

அழைப்பிற் கிணங்கிக் கவிவடித்த
     அதிராம் பட்டி னத்தாரே !
மழையா யிங்குக் கொட்டிவிட்டீர்
     மனத்தைத் தைத்த வற்றையெல்லாம் !
உழைப்பால் வுயர்வு கிட்டட்டும்
     உழவர் வாழ்வு சிறக்கட்டும் !
அழகுத் தமிழில் நன்றிகளை
     அன்பாய்ச் சொல்லி வாழ்த்துவனே !!
★★★

No comments:

Post a Comment