'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


                                           8.     கவிஞர் சோமு. சக்தி


கவிஞர் அழைப்பு !

பொதுநலத் தோடும் பகுத்தறி வோடும்
     புரட்சியை நெய்திடும் கவிஞன் !
கொதிப்புடன் பொங்கிப் போர்க்குணத் தோடு
     கொடுமைக  ளெதிர்ப்பதில் முதல்வன்!
பதிவுகள் படித்துக் கருத்துக ளளிக்கும்
     பைந்தமிழ்ப் பாக்களின் சுவைஞன்!
அதியழ காக இக்கவி யரங்கில்
     அடைமழை யாய்க்கவி பொழிக!!

சோமுசக்தி ஐயா வருக! சுந்தர கவிதை தருக!

தமிழ்வாழ்த்து

செந்தமிழே சிந்துவகைப் பாவால் – நான்
சிந்துமொழி செம்மையுற நாவால் – உன்
தீந்தமிழில் காவடியாற் சிந்துகவி பாடிடவே
தேர்வாய் எனைச் சேர்வாய் !

அவைவாழ்த்து:

பாட்டரசி தாங்குமவை பாரீர்- என்
பாட்டிதனைக் கேட்பதற்கு வாரீர்- தாய்ப்
பாட்டிசையில் மீட்டுமிசைப் பாருலகை மீட்பதற்குப்
பாடும் பணிந் தாடும் !

ஏருக்குச்சீர்செய்வோம்!

 ஏருலகைச் சீர்செயவே நாளும் - இங்கு
ஏற்றதொரு திட்டமிட லாளும் –வெறும்
எண்ணிலதை ஏற்றிவிட்டு கண்ணிலதைக் காட்டிவிட்டு
ஏய்க்கும் நிலை ஓய்க்கும்

நீர்வரவை சேர்த்துவைக்க மோதும் – பிழை
நேற்றுவரை செய்ததெலாம் போதும் – மழை
நீர்ப்பிடிப்பைத் தேக்கிவைத்து ஏர்த்தொழிலை மீட்பதற்கு
நேர்க்கும் நிலை வேர்க்கும்

 நல்லுரத்தை நாமிடவே நாளும்- வளர்
நற்பயிரின் தாள்மடலும் நீளும்-வரும்
ஞாலமெலாம் நெற்பயிரைக் காலமெலாம் காத்திடுமே
ஞானம் பெறும் மானம்

மெல்விதையை மின்னனுவால் மாற்றும் – பயிர்
வெல்வகையை நாசமுறத் தேற்றும் – நம்
மேலுழவைச் சேதமுற மேலுதட்டில் வேடமிட
மேய்க்கும் நிலை சாய்க்கும்

வங்கிகளே செல்வமது தேங்கும் – கடும்
வட்டியின்றி ஏழைகளும் வாங்கும் – பல
மங்கலமாய்ப் பொங்குவளம் மண்ணிறைந்து தங்கவளம்
வாங்கும் வகை தாங்கும்

வந்தபொருள் நல்விலைக்குப் போக – ஒரு
மந்தநிலை கொள்விலையால் நோக – முன்
வந்தநிலை மாறுவதால் மாந்தநிலை தீருவதால்
வாழும் தொழில் சூழும்

சோறிடவே சேறிறங்கு நீயும் – பசி
சோர்வினிலே தேசமது காயும் –ஒரு
தோள்வலியும் தோழமையும் சூளுரைத்து வென்றுவரும்
தோழா துயர் சூழா

வேறிடத்தில் தீர்விதற்கு இல்லை –ஒரு
வேரிடத்தில் சேர்ப்பதற்கேன் தொல்லை –இதை
மேலிடத்தில் மேய்ப்பதற்கும் வேலிடத்தால் ஏய்ப்பதற்கும்
வேளேன் இதைக் கேளேன்        ( ஏருலகை…….)

(பொருள்: நேர்க்கும் –நேர்ப்படுத்தும்;வேர்க்கும் – அடிப்படையாக்கும்; சூள்-உறுதிஎடுத்தல்; வேள்-ஆசை,விருப்பம்)

வாழ்த்துப்பா
சிந்துமழை இவ்வரங்கில் பெய்தார் - நம்
சிந்தையினை யுங்குளிரச் செய்தார் - இவர்
       சீர்மிகுந்த பாக்களினால் ஏருழவர் வாழ்வில்வளம்
        சேரும்- துயர் - தீரும் !!

அந்தமிழில் சோமுசக்தி பாட்டு - தமிழ்
அன்னையவ ளும்மலர்ந்தாள் கேட்டு - இங்கு
        அன்புடனே எல்லோரும் நன்றிசொல்லி வாழ்த்திடுவோம்
        ஆடிக் - கவி - பாடி !!

No comments:

Post a Comment