'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


11.     கவிஞர் பி. எம். நாகராஜன்


கவிஞர் அழைப்பு

பாலையிலே வாழ்ந்தாலும் சோலையினைச் சுற்றிவந்து
      பாட்டியற்றக் கற்பவரே வாங்க! வாங்க!
மாலவனின் பேரருளால் மாலையிட்டுச் சீர்செய்ய
      மன்றமிதில் நல்லகவி தாங்க! தாங்க!!

நாகராஜா வருக நற்கவிதை தருக
   
வெண்கலிப்பாக்கள்

தமிழ் வாழ்த்து.!

செந்தமிழே வந்தனம் சந்தமிகும் மந்திரம்
சந்தனமே நிந்தையில் சொந்தமென்றா னந்தம்
சிந்தையிலே விந்தைகள் சிந்தியதோ செந்தேன்
எந்தனிலே வந்ததின்ப மே.

அவை வணக்கம்.!

வாய்மையும் விதைத்தோர் வியப்பினி லாழ்வோர்
வாய்ப்பினைப் படைத்தோர் வயதினில் மூத்தோர்
வியர்வையில் நனைந்தோர் இயக்கத்தில் வாழ்வோர்
வையகத்தின் வளர்பிறை யாம்.!

ஏருக்குச் சீர் செய்வோம்!!

துளியொன்றை மணியாக்கித் தயவென்ற வரமாகும்
தளிரொன்றை வளமாக்கும் தரணிக்கும் துணையாகிப்
பளுதாங்கிப் பரிவாகப் பயிராக்கும் உழவனே
உளமார்ந்து உணவுந்து வான்

எளிதொன்றைப் புரிவோரும் வழிதந்த அறிவாளி
உளிசெய்து புதிதாக்கும் எழில்மிக்க படைப்பாளி

பளிங்குன்றிப் பசியாகும் பொழுதிற்கும் உழவனே
அளவில்லா உணவுந்து வான்
செழிப்பாக்கும் தொழிலொன்றே சிரங்கொணட குணமாகச்
செழுமைக்கும் தொண்டாற்றிச் சிலிர்ப்பாக்கு மடிவேராய்
முழித்துச்செல் உலகோரின் மகிழ்வுக்கும் உழவனே
உழவாக்கி உணவாக்கும் வேர்.

விழியெங்கும் கனவாக்கி விதையொன்றை உயிராக்க
வழியெங்கு முயர்வாக்கி வரப்பிற்கு முயர்வெய்திப்
பழித்துப்பொய் களைகிள்ளிப் பயிராக்கும் உழவனே
உழவெய்தி உலகாக்கும் வேர்.

தருமேகம் மழையென்றால் தாங்கியதைப் பயிராக்கத்
திருவாக்கித் தருமென்றால் தழுவியதை உயிராக்க
விரும்புகின்ற வரந்தந்தே விளைவாக்கும் உழவனே
விருதென்று விதையாக்கு வோம்

உருளுகின்ற உலகத்தில் உழுதொண்டு நிலமாக
உருக்கொண்ட உயர்வுக்குத் தொழுதுண்டு நலமாகப்
பெருகின்ற செல்வத்தில் பழுதின்றி உழவனே
பெருமைக்குள் புகழாக்கு வோம்!

நாடுகின்ற குலதெய்வம் நலமீய வருமாப்போல்
நாடெங்கும் சீராக்கும் உழவென்றும் உயர்வாக
ஏடெங்கும் சிறப்பாக்கும் தமிழேரால் உழவனின்
ஏருக்குச் சீர்செய்கு  வோம்.
    
வாழ்த்துப்பா !!

உழுதொழிலின் சிறப்புகளை உளமகிழ்வோ(டு) உயர்வாக
அழகியவெண் கலிப்பாவில் அற்புதமாய்த் தீட்டியநின்
கவிமலரைச் செவிமடுத்துக் களிப்புடனே வாழ்த்துகளை
நவின்றிடுவேன் நன்றியுடன் நான்.

No comments:

Post a Comment