'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


5. கவிஞர் நெடுவை இரவீந்திரன்


கவிஞர் அழைப்பு
காருண்ட மேகத்தின்    தயவாலே
       காடெங்கு மேபட்டின்    நிறைவோடே
ஆரின்று பாடிக்கொஞ்    சிடுவாரோ
        ஆனந்த மாகட்டுந்    தமிழாலே
ஏரென்று மார்தட்டுந்     தகை யோனே
       ஏடெங்கு மேசொட்டுஞ் சுவையாலே
நீரின்று சோலைப்பொன்    னொளிமேவ
      நேர்வந்து வாசித்திங்    கருள்வாயே!

தமிழ்வாழ்த்து.
(அறுசீர்ச் சந்த விருத்தம்)

நேசங்கொள் வானத்தின்  ..... கதிர்போலே
    நீளங்கொள் ஆழத்தின் .....மொழியாளே
தேசங்கொள் யாவர்க்கும் .... நலமேவ
       தேகங்கொள் ஊணுக்குந் ...... தொழுவானே
பாசங்கொள் வாழ்வைக்கொண் ..... டதனாலே
       பாருங்கொள் பாவிற்தண்....... கவிபாட
ஈசன்கொள் வானெட்டுந் .... தமிழாளே
       ஏறென்றன்  நாவிற்குள் ..... இசையோடே
  
குருவணக்கம்.
தூசங்கொள் யானைக்கண் ...... குருவோனே
        தூரங்கொள் நூலுக்குந் தனியாளாய்
மாசங்கு மூதிப்பண் ணிசைபாட
      மாசின்றிப் பாத்தந்தும் பதிவீரே
மாசங்கு வீழக்கண் ....... ணிமைமாற
       மார்பொங்கி வேலைக்கொண் ....... டெறிவோனே
பாசங்கொள் சீர்மிக்குந் ...... தமிழாலே
     பாச்சிந்தி நான்வந்தும் பணிவேனே

அவையடக்கம்.
வாருங்கள் மேடைக்கும் ....... புலவோரே
        மாமண்ணில் ஊருக்கும் தருவானைப்
பாரெங்கும் நேசிக்குந் ...... தமிழாலே
       பாவண்ணம் வாசித்தும் ....... தருவேனே
பாருங்கள்  வானெட்டும் ...... மரபாலே
        பாவெங்கும் தேன்சொட்டும் ...... செவிமீதே
தாருங்கள் நாசிக்கும் ....... கவிமீது
       தாளங்கள் நீரிட்டும் ........ மகிழ்வீரே

ஏருக்குச் சீர் செய்வோம்.
(எழுசீர்ச் சந்த விருத்தம்)

புவிமீது வந்து புகழோடு கந்து
         பொலிவாகி நின்ற....... உழவோனே
 புதிதாய்வி ளைந்த மணியோடு வந்து
           புதுப்பானை பொங்க ....... லிடுவாயே
கவினாக உண்ண உணவாக மண்ணில்
       கலியாக  வென்று ..... மருள்வாயே          
 கடலோடு ழன்று கயல்யாவும் கொண்டு
          கலமேறி வந்து ........ மிடுவாயே
புவியோரு முன்றன் உடையால ணிந்து
      புறமானம் வென்று ....... வருவாரே
புலவோரு முன்னை மானதார வந்து
         புகழ்மாலை தந்து ...... மிசைபாட
இவையாவு முன்றன் வினையால்வி ளைந்து
        மிடுவாரி டைஞ்ச ....... லுருவாக
இடராக வந்து கரைமேலு றைந்த
         கயல்போல நெஞ்சு ........ மிறுகாதோ

திசைமாறு மந்த ஒளியோனு முந்தி
         மறுவாற கன்று ......... வருநாளே
 திருநாளு மென்று தெளிவாய றிந்து
        செறிவோடு சொன்ன ......... உழவோனே
பசுமாடு தந்த மடிபாலும் பொங்கப்
     பழமோடு மஞ்சள் ....... கணுவோடு
 பரிமாறி யந்த மணிமான னுண்ண
       இலைவாழை கொண்டு ....... தருவாயே
நெசவாளி தந்த புதுவாடை மின்ன
      நெய்வானை யெண்ணி ....... நெகிழ்வாயே
  நிழலாடு மண்ணி லிருதாளி றைஞ்சி
         நெறியோடு மின்று ........ விழுவாயே
பசையோடு தம்த முறவோடு மின்னும்
      பலரோடு மொன்றி ...... மகிழ்வீரே!
பழமேவ யிஞ்சி அருகோடு வந்து
        பலகோலம் முன்றி....... லிடுவாயே (2)

எறிவாயு கொண்டு நிலமாத ழுந்த
     இடமாற நஞ்சை விலைபேச
 இடராலும் நெஞ்சு வலியால்மெ லிந்து
     முயிர்வீழ வென்று நினைவானே
நெறிமீறு மிந்த அரசாரும் அந்த
      நெடிதான துன்பம் அயல்மாற
 நிலமாலை வந்த வழிமாற நின்று
       நெடுவாறு கண்டு வரையாதோ
அறியாரின் வஞ்ச செயலாலெ ரிந்து
      மவன்வாழ்வில் நொந்து தொலைவானே
 அரசாளு மந்த கொடியோனும் நின்று
      அரசாணை ஒன்று மெழுதாதே
வறியாரின் நெஞ்சம் பலமாகி யெங்கும்
        வளமாகி யென்றும் நடமாட
 வருமான மிஞ்சி மிசைவாழ்வு பொங்க
        மனதார ஒன்ற நினைவோமே!

நன்றி

வசைபாடு மென்றன் மனையாளும் வந்து
       வரம்போடு சண்டை ....... யிடுவாளை
            வரமாக எண்ணி மனதார யென்றும்
                 வளமேவ நன்றி ....... யுணர்வேனே
இசைபாடி இன்று முகநூலி லுங்க
      ளிடமேறி நன்றி ....... பறைவேனே
          இதையாரும் வந்த இடர்போல எண்ணி
             முகமாறி யெங்கு ....... மலையாதீர்
வசைகூறும் என்றன் உறவாறும் வந்து
      மனமாறி இந்த ....... கவிகேள
         வலைமீது ழன்று செவிசாயும் உங்கள்
              மனமீது நன்றி ......யுதிர்வேனே
அசையாமல் நின்று கவிகேளு மிந்த
        அவைமீது நன்றி ....... கொளுவேனே
           அவையாளு மிந்த தலைமீது கவிபாடி
            நன்றி ...... பதிவேனே!

வாழ்த்து

அடடாவென வியக்கும்படி அழகாய்க்கவி நெய்தாய்
வடிவாயதில் பலபாக்களில் மழைபோல்வணம் பெய்தாய்
குடியானவன் மனம்பூத்திடக் கொடையாயிதைச் செய்தாய்
படிப்போருளங் கவர்ந்தாயுனைப் பலர்வாழ்த்திடு வாரே !!

No comments:

Post a Comment