'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் 10

4.     பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

கவிஞர் அழைப்பு

நெஞ்சி லன்புடன் சந்தக் கவிமணி
    நின்னை அழைப்பதில் மகிழ்ந்தேன்!
கொஞ்சுங் குயிலெனக் கூவு மின்சுவைக்
    குரலைக் கேட்டிட விழைந்தேன்!
வஞ்சி யுனைக்கவி பாட வரங்கினில்
    வணங்கி வாழ்த்துடன் அழைப்பேன் !
விஞ்சு மழகுடன் ஏரைப் போற்றிட
    விரைந்து நீவரு வாயே!!

அருங்கவி தரவே அன்புத் தோழி வருக! வருக !!

தமிழ் வாழ்த்து, அவை வாழ்த்து !!

அன்னைத் தமிழே கவிவடிக்க
    அகத்தால் நின்றன் தாள்போற்றி
இன்னல் நீங்கி உழவரெலாம்
    ஏற்றம் பெருகி வாழவென்று
மன்றின் வண்ணத் தலைவருக்கு
    மரபின் மகிழ்வாய்க் கரங்கூப்பிப்
பண்பில் சிறந்த அவையோரைப்
    பணிவாய் வணங்கிப் பாடவந்தேன்!

ஏருக்குச் சீர் செய்வோம் !!

உழுதொழில் செய்வோர் வாழ்வில்
    உயர்வினைக் காண வைப்போம்
உழவியல் வசதி கிட்ட
    உறுதுணை யாக நிற்போம்
வழிதனை வகுத்து நல்க
    வயலது விளைச்சல் காணும்
தொழிலினில் உள்ள சிக்கல்
    சுமைகளை நீக்கு வோமே

கடனதைப் பெற்று வட்டிக்
    கடலினுள் மூழ்கி வீழும்
இடரினைக் களைந்து வாழ்வில்
    இன்புறச் செய்ய வேண்டும்
விடுமுறை யின்றி நாளும்
    வெயிலினில் உழைக்கும் வர்க்கம்
கடும்பசி யின்றி வாழக்
    காசினி உதவ வேண்டும்

மழையினால் பயிர்கள் மூழ்கி
    மண்ணிலே சாய்ந்து விட்டால்
உழைத்தவன் அதனை எண்ணி
    உயிருடல் வாடி நிற்க
அழைத்தவன் வாட்டம் போக்க
    அகிலமே திரண்டு வந்தே
உழுதொழில் சிறக்கக் காப்போ
    டூக்கமும் கொடுத்து நிற்போம்

குறைகளைக் கேட்டு நாமே
    குவலயம் சிறக்க வைப்போம்
வறட்சியில் ஆற்றின் நீரும்
    வயலினில் பாய வைப்போம்
திறமையை வளர்க்க நாளும்
    தெளிவுறப் பயிற்சி நல்கி
நிறைவினைக் கொடுக்க வைத்தால்
    நெஞ்சமும் மகிழு மன்றோ

வாழ்த்துப்பா

உழுபவர் உயர்வை யெட்ட
    உற்றநற் கருத்தைச் சொன்னீர்!
சுழலுமிவ் வுலகி லன்னார்
    துயர்களைக் களையெ டுத்துப்
பழுதிலா வாழ்வு வாழப்
    பயனுள வழியைக் காட்டி
அழகிய கவிதை தந்தீர்
    அன்புடன் வாழ்த்து வேனே!

★★★

No comments:

Post a Comment